-
1st November 2014, 07:27 PM
#31
Junior Member
Devoted Hubber
இதழோடு இதழ் வைத்து...........
ROFL the MAXXXX..........by Yuva Krishna
நம்ம பக்கத்து ஊரான கேரளாவில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நமக்குதான் தெரியாமல் போச்சு. உலகெங்கும் இன்று இதுதான் பேச்சு.
விஷயம் இதுதான்.
போன மாசம் கோழிக்கோடு நகரில் இருந்த காபிஷாஃப் ஒன்றினை கலாச்சார காவலர்கள் – அதாவது ஆர்.எஸ்.எஸ். மெண்டாலிட்டி அம்பிகள் - அடித்து நொறுக்கினார்கள். வன்முறைக்கு அவர்கள் சொன்ன நியாயம் முத்தாலிக் டைப். இங்கே கூடும் காதலர்களும், தம்பதிகளும் ஒருவருக்கொருவர் பப்ளிக்காக முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த சம்பவத்தை அடுத்து கேரளாவின் இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்றொரு அமைப்பினை ஃபேஸ்புக்கில் உருவாக்கினார்கள். ‘முத்தம் நமது பிறப்புரிமை’ என்று இணையப் புரட்சி செய்தார்கள். அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் முத்தமிடுங்கள் என்று மக்களுக்கு தங்கள் புரட்சி அறிவிப்பினை செய்ததோடு இல்லாமல், முத்த நாளுக்கு முகூர்த்தமாக நவம்பர் இரண்டினை குறித்தார்கள். பல்லாயிரக்கணக்கில் கிஸ்ஸுகளை -அதாவது- லைக்குகளை அள்ளினார்கள்.
‘மாலை ஐந்து மணிக்கு கொச்சி மரைன் ட்ரைவ் பீச்சுக்கு துணையோடு வாருங்கள். முத்தமிட்டுக் கொள்ளலாம்’ என்கிற இவர்களது கவர்ச்சி அறிவிப்புக்கு ஏகத்துக்கும் ரெஸ்பான்ஸ். லவ்வர் இல்லாத பசங்கள்தான் பாவம். வாடகைக்கு ஏதாவது தேறுமா என்று தேடிக் கொண்டிருக்கிறார். கொச்சியின் சுத்துப்பட்டி பதினெட்டு ஊரிலும் இப்போது இதழ்களுக்குதான் ஏகத்துக்கும் டிமாண்ட். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ‘இதழாளர்கள்’ ஏகத்துக்கும் ரேட்டை ஏத்திவிட்டு விட்டார்களாம். ஒரே ஒரு இதழாளர் பத்து, பதினைந்து பேரிடம் அட்வான்ஸ் வாங்கி போட்டுக்கொண்ட ஊழல்கூட நடந்துவிட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த மாஸ் கிஸ்ஸிங் நிகழ்வுக்கு எப்படியும் ஒரு பத்தாயிரம் ஜோடிகளாவது தேறுவார்கள் என்று ஆர்கனைஸர்கள் நம்புகிறார்கள். இந்த ஒட்டுமொத்த முத்த நிகழ்வு, கலாச்சாரக் காவலர்களுக்கு நாங்கள் கொடுக்கும் ரெட் சிக்னல் என்று கொக்கரிக்கிறார்கள். முத்த நாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்திருக்கிறதா என்று இதுவரை தெரியவில்லை. பெங்களூரில் இருக்கும் சாஃப்ட்வேர் க்ரூப்புகள், வீக்கெண்டை என்ஜாய் செய்ய ஜோடி ஜோடியாக (ஓரினச் சேர்க்கையாளர்கள் உட்பட) கொச்சிக்கு காரை கிளப்பிவிட்டார்கள்.
கொச்சி டெபுடி கமிஷனரான நிஷாந்தினிக்குதான் ஏகத்துக்கும் தலைவலி. “(முத்தத்துக்காக) மொத்தமாக மக்கள் கூடுவதை எங்களால் தடுக்க முடியாது. ஆனால் இதனால் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அப்போதுதான் நடவடிக்கை எடுப்போம்” என்று வெட்கப்பட்டுக் கொண்டே மீடியாக்களிடம் சொல்கிறார். பாவம். அவரும் இளம்பெண் தானே?
இந்த முத்த மாநாட்டுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் எந்த தொல்லையும் கொடுக்காது என்று சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். அனேகமாக இந்த கலாச்சார காவல் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும் ரகசியமாக கலந்துக் கொள்வார்களோ என்று அவர்களது மேலிடம் சந்தேகப்பட்டு கவலைக்கு உள்ளாகியிருக்கிறது. தேன்கூட்டில் அவசரப்பட்டு கல்லெறிந்துவிட்டோமோ என்று வருத்தப்படுகிறார்கள்.
கடவுளின் சொந்த தேசம் ஏகத்துக்கும் சூடாக இருக்கிறது. நம் இதழ்களுக்கு வெறும் ‘கோல்ட் ப்ளேக் கிங்ஸ்’தான் வாய்க்கிறது. நம்மூர் மெரினாவில் எப்போதுதான் இப்படியெல்லாம் சுபகாரியங்கள் நடக்குமோ தெரியவில்லை. தமிழனாக பிறந்ததுதான் நாம் செய்த பாவமா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2014 07:27 PM
# ADS
Circuit advertisement
-
2nd November 2014, 03:00 AM
#32
Junior Member
Devoted Hubber
அன்பிற்கான ஒரு பரப்புரை - மனுஷ்ய புத்திரன் :
அன்பை
நிறையப் பார்த்துவிட்டோம் இல்லையா
ஆழமற்ற அன்பு
சற்று நேரத்திற்கே நீடித்திருக்கு அன்பு
கொடுக்கல் வாங்கல்களுக்கு மட்டுமான அன்பு
வேறு ஏதோ ஒன்றிற்கான அன்பு
மறைத்துக்கொள்ளப்படும் ஒரு கண்ணீரின் அன்பு
ஒரு கணத்திற்குமேல் நிற்க முடியாமல் பின்னகர்ந்துவிடும் அன்பு
சட்டென உதறி எழுந்துகொள்ளும் அன்பு
வேறு ஏதோ ஒன்று நினைவுக்கு வந்துவிடும் அன்பு
ஓங்கிய கத்தியை தயக்கத்துடன் மடித்து வைக்கும் அன்பு
தனக்காக பிறரிடம் காட்டும் அன்பு
கை குலுக்கும்போது மட்டும் காட்டும் அன்பு
மனதை மாற்றிக்கொண்டு திரும்பிப் போகும் ஒரு கள்வனின் அன்பு
குற்ற உணர்விலிருந்து பிறக்கும் அன்பு
பழக்கத்தின் பொருட்டுத் தோன்றும் அன்பு
அன்பு என்றே தெரியாத அன்பு
காட்டத் தெரியாத அன்பு
ஏற்கப்படாத அன்பு
மிருகங்களிடம் காட்டும் அன்பு
மிருகங்கள் காட்டும் அன்பு
மிருகத்தனமான அன்பு
கடவுள்கள் மனிதர்களிடம் காட்டும் அன்பு
மனிதர்கள் கடவுளிடம் காட்டும் அன்பு
இலட்சக்கணக்கானோருக்கு கையசைக்கும் ஒரு தலைவனின் அன்பு
ஒரு ரோகி இன்னொரு ரோகிக்கு காட்டும் அன்பு
ஆரோக்கியமானவர்கள் ஆரோக்கியமற்றவர்களிடம் காட்டும் அன்பு
ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டியெரியும் அன்பு
ஷூவிற்கு பாலீஷ் போடும் சிறுவனின் தலையை
உற்றுக் கவனிக்கும்போது தோன்றும் கணநேர அன்பு
வெறுப்பை மறைத்துக்கொள்வதற்காக காட்டும் அன்பு
வேங்கை ஒரு மானை வேட்டையாடும்போது
புதரில் மறைந்திருக்கும் குட்டியின் கண்களில் ததும்பும் அன்பு
ஒரு பெண்ணை அடையும்போது கனியும் அன்பு
ஒரு பெண்ணை இழக்கும்போது பெருகும் அன்பு
ஒரு கிளியின் சிறகுகளைக் கத்தரிக்கும் அன்பு
தண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் பயன்படும் அன்பு
ஒருவரை போகவிடாமல் தடுக்கும் அன்பு
பத்து எறும்புகளை நசுக்கிக் கொன்றுவிட்டு
ஒரு எறும்பை தப்பிப் போகவிடுவதன் அன்பு
துப்பாக்கியில் ஒரு புல்லட்டை மிச்சம் வைக்கும் அன்பு
ஒரு நடிகனிடம் அவனது காதாபாத்திரத்திற்காக காட்டும் அன்பு
ஒரு கவிஞனிடம் அவனது சொற்களுக்காக காட்டும் அன்பு
ஒரு வேசியிடம் அவளது முத்தத்திற்காக காட்டும் அன்பு
சுருக்குக் கயிறை கழுத்தில் மாட்டிக்கொள்ளும்போது
அந்தக் கயிறின் மேல் காட்டும் அன்பு
குழந்தைகளிடம் அவர்கள் நம் குழந்தைகள்
என்பதற்காக மட்டும் காட்டும் அன்பு
நினைக்க விரும்புகிற அன்பு
மறக்க விரும்புகிற அன்பு
காரல் மார்க்ஸ் மனிதகுல விடுதலைக்குக்காட்டிய அன்பு
ஹிட்லர் ஜெர்மானியர்களின் நன்மைக்காக காட்டிய அன்பு
துயருறும் ஒரு கன்றைக் கொன்றுவிடும்படி கேட்ட காந்தியின் அன்பு
ஒரு ஆசிரியை தன் மாணவர்களுக்கு காட்டும் அன்பு
ஒரு கழைக்கூத்தாடி கயிறில் நடக்கும் தன் குழந்தைக்கு காட்டும் அன்பு
ரொக்கமாக தரப்படும் அன்பு
வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் அன்பு
காசோலையாக தரப்படும் அன்பு
பரிசுப்பொருள்களாக தரப்படும் அன்பு
நிறைய அன்பைப் பார்த்துவிட்டோம்
ஆனாலும் அன்பிற்கான பரப்புரைகளை
நம்மால் நிறுத்த முடியவில்லை
ஒவ்வொரு அன்பிற்கும் பின்னேயும்
மனமுடைந்து போக
ஏதோ ஒன்று இல்லாமல் போவதே இல்லை
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2014, 02:30 AM
#33
Junior Member
Devoted Hubber
எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...
ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்):அண்ணா...!அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்...
ஹோட்டல் நடத்துபவர்:ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு....அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....
(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).
குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே....
(குழந்தை கிளம்பிவிட்டாள்)
அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்...
நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....
ஹோட்டல் நடத்துபவர்:அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது....
நான்:வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல
ஹோட்டல் நடத்துபவர்:குழந்தை கேட்டிருக்கும்..அதான் சார் அனுப்பி இருக்காங்க..நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் சார் முக்கியம்
#கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது.....
விஜய் சிவானந்தம்
இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!
Last edited by poem; 6th November 2014 at 02:44 AM.
-
6th November 2014, 07:50 PM
#34
Junior Member
Devoted Hubber
கனவில் வந்தனையோ ஆண்டாள்:
ஆண்டாளின் வார்த்தைகள் மீது ஒரு தீராத ஆசை. அதிலும் எற்றைக்கும் என வரிகள் வாசிக்க ஆரம்பித்தால் அப்படியே ஒரு தனி அறையில் சென்று அமரத் தோணும்.
இந்த ஆண்டாள் மீது இத்தனை ஆசை வர காரணம் அவள் கொண்ட அந்த பரந்தாமன் காதல் தான். ஒரு மாட வீதி தென்படுகிறது. அந்த மாட வீதியில் கூரைப்பட்டு சேலை உடுத்திய வண்ணம் ஆண்டாள் வந்தாள். அவளிடம் என்னை காதலிக்க கூடாதா என்று கேட்டேன். என்னை உன்னால் காதலிக்க முடியுமா யோசி என்றாள்.
நண்பர்களிடம் ஆண்டாள் காதல் குறித்து பெருங்கவலை கொண்டு இருந்தேன். எல்லோரும் ஆண்டாளை பைத்தியம் என்றார்கள் என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. பெரியாழ்வாரிடம் சென்று உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என கேட்டேன். மானிடனுக்கு வாக்கப்படமாட்டேன் என சொல்லிவிட்டாளே என்றார்.
மற்றொரு நாள் ஆண்டாளை சந்தித்தபோது நீ கொண்டிருக்கும் காதல் மாயையானது அறிந்து கொள் என்றேன். நான் காண்பவை உன் கண்களுக்கு தெரியாது என்றாள். பெரியாழ்வாரிடம் சென்று நீங்கள் ஆண்டாளை சரியாக வளர்க்கவில்லை, இதுவே ஒரு தாய் இருந்து இருந்தால் இப்படியாகுமா என்றேன். வேதனையுற்றார்.
என் பெற்றோர்களிடம் ஆண்டாள் குறித்து என் துயரத்தை சொன்னால் அந்த பொண்ணு வாங்கி வந்த வரம் என்றார்கள். என்னால் ஏற்க முடியவில்லை. ஆண்டாளின் தோழிகளிடம் சென்று என் ஆசையை கூறினேன். அந்த தோழிகள் எல்லாம் என்னை ஏளனமாக பார்த்தார்கள். அவள் காதல் உனக்கு இளப்பமா என்றார்கள்.
ஒருநாள் திருவில்லிபுத்தூர் கோவில் வாசலில் நிறு இருந்தபோது ஆண்டாள் வந்தாள் .சிலையாக நிற்பதுதான் உன் காதலனா என்றேன், உயிராக என்னுள் வசிப்பவன் என்றாள். எவரேனும் ஆண்டாளுக்கு அவள் கொண்ட காதல் முறையற்றது என் எடுத்து சொல்லமாட்டார்களா என ஏங்கி தவித்த எனக்கு நான்தான் முறையற்றவன் என்றார்கள்.
ஆண்டாளின் பிடிவாதமான போக்கு என்னுள் பெரும் அச்சத்தை விளைவித்தது. ஆண்டாளிடம் என் மனக்குமுறல்கள் சொல்லி முடித்தேன். . நாராயணனே பறைதருவான் என்றாள் . பெரியாழ்வாரிடம் நீங்களாவது எடுத்து சொல்லுங்கள் என மன்றாடினேன். ஸ்ரீரங்கத்து ரெங்கமன்னார் மாப்பிள்ளை என்றார்.
ஆண்டாளிடம் சென்று, ஆண்டாள் அந்த நாராயணனை மணம் முடிக்க நீ மானிட பிறவி கொண்டது பிழை அல்லவா? ஒரு பரமாத்மாவை உன் காதலுக்காக ஜீவாத்மாவாக்கிட நீ துணிந்தது குற்றம் என்றேன்.
என் வார்த்தைகள் கேட்டு வெகுண்டெழுந்தாள். என் காதலை பழித்து கூற உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது, போ முதலில் காதலித்து பார் என்றாள்
நீ மட்டும் இன்றும் மாறாத ஆச்சரியம்
Last edited by poem; 7th November 2014 at 06:34 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th November 2014, 10:53 PM
#35
Junior Member
Devoted Hubber
அண்ணன் கல்யாணத்தில்
சண்டை போட்டுப் போன பெரிய மாமா
பாட்டி சாவு அன்று
அம்மாவை கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தார்
அனைத்து கோடுகளுமே
மாறுதலுக்குட்பட்டவைதான்...
கட்டமானாலும் வட்டமானாலும்
மாறும் வடிவங்களே
சில கோடுகள் மட்டும்
உயர வளர்ந்து
மறைத்து நிற்கும்
அவற்றில்கூட எங்கோ ஒரு
சிறு வாசல் இருக்கும்...
கட்டம் போட்ட சட்டம்
ஏதுமில்லை
கோடுகள் வளைவதும் இளகுவதும்
அவரவர் வசதிக்கே...
-
11th November 2014, 11:47 PM
#36
Junior Member
Devoted Hubber
அடைவதை விடவும் இழப்பதில்-
பெறுவதை விடவும் கொடுப்பதில்-
அண்மையை விடவும் தொலைவில்-
உருக்கொள்கிறது நிம்மதியின் உறைவிடம்.
இசையை விடவும் நிசப்தத்தில்-
சுடரை விடவும் இருளில்-
பாய்ச்சலை விடவும் பதுங்குதலில்
வெளிப்படுகிறது நிதானத்தின் பேரெழில்.
உறவை விடவும் பிரிவில்-
களிப்பை விடவும் துயரில்-
ஆரவாரத்தை விடவும் எளிமையில்
வலுப்பெறுகிறது அன்பின் நீள்சுவர்.
பொய்மையை விடவும் வாய்மையில்-
அழிவை விடவும் ஆக்கத்தில்-
தண்டித்தலை விடவும் மன்னித்தலில்
இசைக்கப்படுகிறது கடவுளின் சங்கீதம்.
-Sundar
-
11th November 2014, 11:53 PM
#37
Junior Member
Devoted Hubber
அதனதன் இடம்
அதனதற்கு.
இசைக்குக் காற்று.
அமைதிக்கு மலை.
புதிருக்கு வனம்.
நகர்வுக்கு நதி
என்பதே போல்-
துளிர்த்தெழ மன்னிப்பும்
மன்னிக்க ஞானமும்
ஞானத்திற்குப் பணிவும்
பணிவுக்கு எளிமையும்
எளிமைக்குத் துறப்பும்
துறப்புக்குத் தெளிவும்
தெளிவுக்குத் திறப்பும்.
காப்பதற்கு மெய்யும்
அழிப்பதற்குப் பொய்யும்
பொறுப்பதற்கு பூமியும்.
நெடுவழி கடக்க
நாணயமும் நேர்மையும்-
நெடுதுயில் ஆழ்ந்தபின்
நிலைக்கக் கொடையும்.
அதனதன் இடம்
அதனதற்கு.
-
20th November 2014, 01:31 AM
#38
Junior Member
Devoted Hubber
அழகின் இலக்கணத்தைக்
கேட்பவர்களுக்கு
எப்படி உருவமாய்
காட்ட முடியும்
எல்லையற்ற
அவள் அன்பை?
-
20th November 2014, 01:57 AM
#39
Junior Member
Devoted Hubber
பட்டுப்போய் விட்டதோ
எனப் பதறி நோக்குகையில்...
சிறியதாய்த் துளிர் விட்ட
அடிமரம் சொல்கிறது...
நம்பிக்கை வை
மலரும் உன் வாழ்வு என்று ....
-
20th November 2014, 02:13 AM
#40
Junior Member
Devoted Hubber
குளத்தில் மூழ்கிய
சிறு கல் அறியாது
குளத்தின் சலனம்.
கலைந்த குளம்
அறியாது
மடியில் உறைந்த
கல்லின் நிசப்தம்.
கல் மிதிக்காக்
குளமும் இல்லை.
குளம் விழுங்காக்
கல்லும் இல்லை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks