Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பங்களிப்பாளர்களின் உழைப்புக்கு என் வந்தனம். அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    'என் தம்பி'

    'தட்டட்டும்....கை தழுவட்டும்' பாடல் சிறப்புப் பதிவு.



    (நடிகர் திலகத்தின் நளின நடிப்பில் மனம் சொக்கியபடி)

    தோட்டத்தில் கண்ணனும், ராதாவும். அந்த இனிய மாலைப் பொழுதில் காதலர்கள் களிப்போடு பேசிக்கொண்டிருக்க, சட்டென்று கண்ணனின் மீது ஒரு சாட்டை வீச்சு. சற்றே நிலை குலைந்து போன கண்ணன் நிமிர்ந்து பார்க்கிறான். அங்கே சாட்டையும் கையுமாக அவனுடைய திருந்தாத தம்பி விஸ்வம்.

    தன் சொத்துக்காகவும், சுயநலத்திற்காகவும் தன் அன்பான சொந்த அண்ணனையே சாகடிக்க முயற்சித்தவன் தம்பி. ஆனால் விதியின் விளையாட்டு வேறு. சில நாட்களுக்குள் அண்ணன் கண்ணன் திரும்ப உயிருடன் அவன் குடும்பத்துடன் இணைகிறான். தம்பி நம்பினானில்லை. ஆனால் சூழல் நம்பித்தான் ஆக வேண்டும்.

    படகில் செல்லும்போது ஆற்றில் கண்ணெதிரே அண்ணனை திட்டமிட்டு தண்ணீரில் கவிழ்த்தவன் தம்பி. கண்டிப்பாக அண்ணன் உயிரோடு இருக்கவே முடியாது. அவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனால் கண்ணன் அண்ணனாக மறுபடி உயிர் பிழைத்து வந்திருக்கிறான். எப்படி சாத்தியம்? நிச்சயமாக இவன் அண்ணன் கண்ணன் இல்லை. கண்ணன் மாதிரி உருவம் கொண்ட வேறு ஒருவன் தன் அண்ணனாக இங்கே நடிக்க வந்து தனக்கு சேர வேண்டிய சொத்தை அபகரிக்க பிரமாதமாக நடிக்கிறான். ம்ஹூம்...இவனை விடக் கூடாது. இவன் வேஷத்தைக் கலைத்து இவன் டூப்ளிகேட் என்று அனைவரிடமும் நிரூபித்து அவனை வீட்டை விட்டு துரத்தி மீண்டும் சொத்து முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும். இது தம்பியின் தீர்மானமான முடிவு.

    இறந்த தன் அண்ணனுக்கு தன்னைப் போலவே பல வீர வித்தைகள் தெரியும். வாள் வீச்சு, குதிரை ஏற்றம் இப்படி பல. சரி! போலியாய் வந்திருக்கும் கண்ணனுக்கு இவையெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை வைத்து அவனை மடக்க வேண்டும். இப்போது காதலி ராதாவுடன் காதல் புரிகிறான். இதுதான் சரியான சந்தர்ப்பம் வந்திருப்பவன் போலி என்று நிரூபிக்க.

    இறந்ததாக கருதப்படும் ஒரிஜினல் கண்ணனுக்கு ராதா சுழன்று ஆடும் போது அவள் கூந்தலில் கொலு இருக்கும் மலர்களை தன் கையில் உள்ள சாட்டையால் அசால்ட்டாக மலர்கள் கசங்காமல் பறிப்பது கைவந்த கலை.

    இப்போது மகன் மாட்டினான்.

    தம்பிக்குக் கொண்டாட்டம். நிச்சயம் கண்ணன் போல் இவனுக்கு சாட்டையால் மலர்களை பறிக்க தெரியாது. இப்போது ஒரு டெஸ்ட் செய்து பார்த்து விடுவோமே! அப்படியே ராதாவும் வந்திருப்பவன் போலி என்று உண்மையை தெரிந்து கொள்வாள் அல்லவா!

    போலி என்று நினைக்கும் கண்ணனிடம் தம்பி 'ராதா ஆட, அவள் தலையில் இருக்கும் மலர்களை சாட்டையால் அவளை காயப்படுத்தாமல் கொய்ய வேண்டும்' என்று ஆணை பிறப்பிக்கிறான். அவன் நினைத்தது போலவே கண்ணனாக வந்திருப்பவன் தம்பியின் சவாலை எதிர் கொள்ளத் தயங்குகிறான். ஆனால் தம்பி விடவில்லை. காதலியும் கண்ணனிடத்தில் பெரும் நம்பிக்கை வைத்து தம்பியின் சவாலை எதிர் கொண்டு வெற்றி காணச் சொல்கிறாள். மலர்களை சாட்டையால் கொய்து தம்பியின் மூக்கை உடைக்க சொல்கிறாள். அந்த அப்பாவி அவன் போலியோ அல்லது அசலோ செய்வதறியாது மறுக்கப் பார்க்கிறான். தம்பி இதை சாக்காக வைத்து வந்திருப்பவன் போலி என்று எள்ளி நகைக்கிறான். ஆனால் காதலியின் பிடிவாதத்தால் சவாலை அரைமனதுடன் எதிர் கொள்ளத் தயாராகிறான் அண்ணன்.

    ராதா ஆட ஆரம்பிக்க, தான் 1..2...3 என்று சொன்னதும் ராதாவின் தலையில் உள்ள மலர்களை கண்ணன் சாட்டை கொண்டு கொய்ய வேண்டும் என்று தம்பி விஸ்வம் கட்டளை பிறப்பிக்க, ஒன்றுமே செய்யத் தோன்றாமல் சாட்டையை வாங்குகிறான் கண்ணன். ராதா பாடியபடியே ஆட, தம்பி பாடலின் நடுவில் ஒன்...டூ...திரீ சொல்ல,

    தம்பியின் சவாலை ஏற்று கண்ணன் காதலியின் கூந்தலில் உள்ள மலர்களைப் பறித்தானா? இல்லையா? பரிட்சையில் வெற்றி வாகை சூடினானா இல்லையா? தம்பியின் மூக்கு அறுபட்டதா இல்லையா?

    அட்டகாசமான இந்த சிச்சுவேஷன் பாடலைப் பாருங்கள்.


    இருங்க... இருங்க.. பார்ப்பதற்கு முன்னாடி மூலவரைப் பற்றி சொல்லாமல் எப்படி?! அவரின்றி ஓர் அணுவும் அசையாதே!

    கண்ணனாக யாரென்று நினைக்கிறீர்கள்? கண்ணான நடிகர் திலகம்தான். நடிப்பின் மன்னனான மாயக் கள்வன்தான்.


    தம்பியாக பாலாஜி. காதலியாக எனதருமை ராஜேஷ்ஜிக்கு மிகவும் பிடித்த சரோஜாதேவி. மூவர் கூட்டணி. முடிவு முத்தான பாடல். அம்சமான ஆடல். இருக்கை நுனிக்கு அனைவரையும் வரவழைக்கும் சஸ்பென்ஸ் பாடல்.



    பாடல் ஒருபுறம், சிச்சுவேஷன் ஒருபுறம் இருக்கட்டும். அதைத் தாண்டிய நம் அண்ணனின், ஸாரி... கட்டழகு கண்ணனின் ஸ்டைல் இருக்கிறதே! அதைப் பற்றி சொல்லாமல் பாடல் எப்படி எடுபடும்? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்.


    செதுக்கி வைத்த அஜந்தா ஓவிய சிற்பங்கள் பிச்சை வாங்க வேண்டும் இந்த ஆண்மை நிறைந்த அழகனிடம். வீரம் நிறைந்த விவேகனிடம். கோட்டுக்காகவே பிறந்த கோமகனிடம். படிய வாரிய அழகான ஒரிஜினல் சுருள்முடி. அளவெடுத்தாற் போன்ற தேகக் கட்டு. அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்தாற் போன்ற மாணவனின் தோற்றம். கொஞ்சும் இளமை. அப்பழுக்கில்லாத அழகு முகம். சுழலும் விழிகள். அதே போன்று கைகளில் சுழலும் சாட்டை. சாட்டையோடு கூடிய சாதிப்பு நடை. எள்ளல். முடிவில் துள்ளல். இவ்வளவும் மூன்றே நிமிடங்களில் நமக்களிப்பது நடிப்பின் வள்ளல்.

    எப்போது தம்பி 'ஒன்...டூ...திரீ' சொல்வானோ என்று லேசான பயம் கலந்த நடுக்கம். சாட்டை கொண்டு மலர்களைப் பறிக்க முடியுமா என்ற சந்தேகம். பந்தயத்தில் தோற்று விடுவோமோ என்ற பயம். தன் நிலை கண்டு பரிதாபப்பட்டு காதலி ஆட, அவளின் மேல் செலுத்தும் வாஞ்சையான பார்வை. கொஞ்சம் கொஞ்சமாக தான் யார் என்று நிரூபணம் செய்யும் சாமர்த்தியம். முதலில் தோற்பது போலக் காட்டி, பின் வெற்றி வாகை சூடி, பின் தம்பியை வாட்டி எடுக்கும் வஞ்சம். மலர்களைப் பறித்து மட்டும் வெற்றி வாகை அல்ல. என்றும் போல நடிப்பிலும், ஸ்டைலிலும் பார்ப்பவர் மனதைப் பறித்து நிரந்தர வெற்றி வாகைதான்.

    பாடல் ஆரம்பிப்பதற்கு முன் பாலாஜி சாட்டையை தன் மார்பின் மேல் வீசியவுடன் திடுமென அதிர்வுற்று, பின் சுதாரித்து,

    'எதையும் தட்டிப் பறிக்கற்தில தம்பிக்கு ரொம்ப ஆசை'

    என்று நடிகர் திலகம் பாலாஜியை நக்கல் விடும் இடம் நயமான அற்புத ஆரம்பம். ஒவ்வொரு முறையும் அவர் பாலாஜியை தன் ஓர விழிகளால் பார்க்கும் கட்டங்கள் வெகு சுவை. எப்போது பாலாஜியின் வாயிலிருந்து 'ஒன்...டூ...திரீ' வந்து விழுமோ என்று அச்சத்துடன் அவர் ஓரக் கண்களால் பாலாஜியை கவனித்துக் கொண்டிருக்கும் வித்தைப் பார்வைகள் அமர்க்களம். சாட்டையை வளைத்து சுற்றிப் பிடித்தபடி அவர் நிற்கும் அந்த கம்பீர ஸ்டைல் காந்தம். பாலாஜி ஜாடையால் அவரை சைகை செய்து அழைத்தவுடன் சாட்டையை இரண்டுமுறை மிக அழகாக வலது கையால் தூக்கிக் காண்பிப்பார். (இதே போல 'சிவந்த மண்'ணிலும் 'பட்டத்து ராணி'யில் செய்து காட்டுவார்.)

    "வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்".... என்று தேவி பாடும் போது சைட் போஸில் மிக அழகாக புருவத்தைத் தூக்குவார் உடலை சற்றே திருப்பியபடி. உடன் 'தட்டட்டும்' என்று பாடல் மறுபடி பல்லவிக்கு வரும் போது ரொம்ப அழகாக கவனத்துடன் கண்களை ஒரு வினாடி இமைத்துக் காட்டுவார். இந்த நூற்றில் ஒரு விநாடிக் காட்சியை pause செய்து திரும்பப் பாருங்கள். பாடலுக்கே போக மாட்டீர்கள். அந்தக் காட்சியிலேயே ஒன்றிப் போவீர்கள்.



    "நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ" என்ற வரிகளின் போது அதே போல ஒரு செகண்ட்... ஒரே ஒரு செகண்ட் சிறு நடுக்கத்துடன் தொண்டையில் விழுங்கிக் காண்பிப்பார்.

    அடடா! என்னய்யா நடிகன் இவன்! ஒரு வினாடியில் கூட இவரின் முகம் எத்துணை உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பார்வையாளனை உறைய வைக்கிறது! அவனுக்கு அந்த கேரக்டரின் நிலைமையைப் புரிய வைக்கிறது! ஈரேழு லோகங்களில் அலசி எடுத்தாலும் இப்பேற்பட்ட நடிகன் கிடைப்பானா?!!!

    என்ன தவம் செய்தோம் உம்மை நாங்கள் இங்கு பெற.


    இப்போது பாருங்கள். நடிப்பின் சாம்ராஜ்யம் விரிவடையும். பாலாஜி முதன் முதல் 'ஒன்...டூ...திரீ' சொன்னவுடன் இந்த மனிதர் செய்து காட்டும் சர்க்கஸ் வித்தை ஒன்று இருக்கிறதே. முதல் முயற்சி தோல்வியடைவது போல காட்சி. சாட்டையால் பூவை எடுப்பாரோ இல்லையோ என்று ஒவ்வொருவரும் நகம் கடிக்கும் நேரம். ஆனால் தோற்பது போல காட்டி பாலாஜியை அந்த சொற்ப நேரம் மட்டும் தற்காலிக சந்தோஷப்பட வைக்க வேண்டும். இவன் ஒரிஜினல் கண்ணன் இல்லையோ என்று பார்வையாளனும், ஏன் தேவியும் கூட சந்தேகப்பட வேண்டும்.

    அதற்கு இந்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி நடிப்பில் சாமர்த்தியம் காட்டுவதைக் காணுங்கள். முதலில் பாடலின் ஆரம்பத்தில் சாட்டையை விடத் தெரியாதவர் போல சாட்டையை ஓங்காமல் கைகளால் கீழிருந்தபடி அதாவது மார்புக்கு நேராக விட்டு பூவை இழுக்க முயற்சிப்பார். என்ன ஒரு புரிந்து புரிய வைக்கும் தன்மை. சாட்டை கையாளத் தெரியாதவர் போன்று இவர் செய்யும் நடிப்புச் சேட்டை நமக்கு நல்ல வேட்டைதானே!

    முதல் முறை பூ கொய்ய முடியாமல் இவர் தோல்வியுறும்போது பார்வையாளர்கள் 'உச்' கொட்டி பரிதாபப் படாமல் இருக்க முடியாது.

    பாலாஜியின் பின்னாலேயே வெகு ஸ்டைலாக நடந்து வந்து அடுத்த 'ஒன்...டூ...திரீ' க்குத் தயாராகும் போது ஒரிஜினல் கண்ணனின் குணாதிசயத்தை நமக்கு உணர்த்த ஆரம்பிப்பார். ஆரம்பத்தில் நிற்கும் ஸ்டைலுக்கும், இப்போது கம்பீரத்துக்கு வரும் போது நிற்கும் ஸ்டைலுக்கும் வித்தியாசம் இருக்கும். (கால்களை சற்றே அகற்றி வைத்து லேசாக தலையை சாய்த்தபடி அலட்சிய தோரணை காட்டுவார்.)

    அடுத்த 'ஒன்...டூ...திரீ' க்கு வெற்றிகரமாக சரோஜாதேவியின் தலையில் இருந்து பூவைப் பறித்து ஸ்டைலாகப் பிடித்தவுடன் அவர் முகத்தில் தெரியும் அந்த வெற்றிப் பெருமிதம்...அந்த நிம்மதிப் பெருமூச்சு. பூவை ஒருவழியாக எடுத்து விட்டோம் என்று சற்றே வளைந்த முதுகுடன் அவர் நிற்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சி. பார்த்துக் கொண்டே உயிரை விடுபவன் புண்ணியவான். உயிர் போனால் அப்படித்தான் போக வேண்டும். என் தலைவனின் முகத்தை பார்த்து ரசித்தபடியே உயிர் பிரிய வேண்டும். பின் அவனடி சேர வேண்டும்.



    'பதமாக கால் பின்னி நடிக்கின்றதே... பரிதாப உணர்வோடு நடக்கின்றதே' என்று தேவி பாடும் போது இடது கையால் மிக அழகாக மலரை தேவியின் பக்கம் நீட்டுவார் பின் பக்க போஸில். அள்ளிக் கொண்டு போகுமய்யா. கரையாத மனமும் கரையும் இந்தக் காட்சியில்.




    அடுத்து வரும்,

    'வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்'

    வரிகளின் போது மலரைக் கையால் பிடித்தபடி (காமெரா மெதுவாக அவரிடம் குளோஸ்-அப்புக்கு நகரும்) அதை ஆமோதிப்பது போல் சிறு தலையசைவில் கண்களை இமைத்துக் காட்டுவார்.

    கொன்று விடுவார் கொன்று. அங்கிட்டு இங்கிட்டு திரும்பினீர்களோ போச்சு...போச்சு. மிகப் பெரிய இழப்பை சந்தித்தவர் ஆவீர்கள். அமர்க்களமான சீன். அவர் கண் இமைக்கும் போது நீங்கள் கண் இமைக்கவே கூடாது.
    அப்போதுதான் சொர்க்கம் என்றால் என்னவென்று உணர்வீர்கள்.

    இப்போது வரும் 'நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ ஏனோ' வரிகளில் படு அலட்சியம் காட்டுவார். முன்பிருந்த நடுக்கம் இருக்கவே இருக்காது. மாறாக எகத்தாளம் பண்ண ஆரம்பிப்பார். சிகரெட்டை ஒரு 'பப்' இழுத்துவிட்டு பின்னால் நிற்கும் பாலாஜியைப் பார்க்காமலேயே சிகரெட்டை நக்கலாக அவரிடம் நீட்டுவார்.

    பாடலின் முடிவில் வரும் 'ஒன்...டூ...திரீ' யின் போது மூன்று முறை மிக அழகாக, அம்சமாக தேவியின் கூந்தலில் இருந்து மலர்களை சாட்டையால் தொடர்ந்து கொய்வார். நான்காவது முறை யாரும் எதிர்பாராத வகையில் சட்டென்று பாலாஜியின் பக்கம் திரும்பி பாலாஜியின் கையில் உள்ள சிகரெட் கேஸை பதம் பார்ப்பார். அதுவரை கொடி கட்டிப் பறக்கும் 'மெல்லிசை மன்னரி'ன் இசை அப்படியே நின்று நிசப்தமாகி விடும். சாட்டை சப்தம் மட்டுமே ஒலிக்கும். அடுத்து பாலாஜி வாயருகே சிகரெட்டைக் கொண்டு போகும் போது சிகரெட்டை சாட்டையால் ஒரு விளாசு விளாசி தட்டி விடுவார். பின் சரோஜாதேவி ஓடி வந்து அணைத்துக் கொண்டவுடன் (தேவியை ஒரு அன்பான பார்வை ஒன்று பார்ப்பார்) ஒரு அம்சமான ஸ்டெப்பை வீரமாக வைத்தபடி பாலாஜியின் கோட்டில் ஒரு அடி விடுவார். பின் காலை சற்றே தாங்கியபடி மீண்டும் ஏக ஸ்டைலாக நடந்து வந்து பாலாஜியை சாட்டையால் வளைத்து அங்குள்ள கம்பத்தில் கட்டுவார். நடிப்பால் நம்மைக் கட்டுவார். பின் கூத்தாடியின் நக்கல் தலையாட்டல்.

    வார்ரே வா! நடிகர் திலகமே! உங்கள் நடிப்பையெல்லாம் ரசிக்க இந்த ஜென்மம் என்ன நூறு ஜென்மம் பத்தாது.


    இப்போது பாடலுக்கு வருவோம். கண்ணதாசனின் கவின்மிகு வார்த்தைகள் வரிகளில் ஜொலிக்க, சுசீலா அம்மா வெகு கம்பீரமாகப் பாட, (அதுவும் 'பரிதாப உணர்வோடு நடக்கின்றதே' எனும் போது பரிதாப உணர்வு பாந்தமாய் நம்மை பணிய வைக்கும். உச்சரிப்பின் உமையாள் அல்லவா இந்த தெய்வப் பாடகி! ) அபிநய சரஸ்வதி அழகான இளமையுடன் அழகான அசைவுகள் கொடுக்க, பாலாஜி வில்லத்தனத்தை நேர்த்தியாகக் காட்ட, (பாலாஜியின் பெயர் விஸ்வம். 'ராஜா' வில் நாடகக் காவலர் மனோகர் 'விஸ்வம்'. பாலாஜி படங்களில் ராசியான வில்லன் பெயர். 'விஸ்வம்' என்றாலே வில்லத்தனமான வெற்றிதானோ) மறக்கவே முடியாத சிச்சுவேஷனுக்குத் தகுந்த பாடல் வரிகள்.

    குறிப்பாக,

    'மலர் கூட உனைக் காக்க நினைக்கின்றதே'

    வரிகள். மிக அழகாக காட்சியின் நேர்த்தியை உணர்த்தும் வரிகள். பரிதாப உணர்வு கசிவதை இந்த வரிகளிலேயே உணரலாம்.

    மொத்தத்தில் எம் நடிக சாம்ராஜ்ய ஒரே ஒரு நிரந்தர சக்கரவர்த்தியின் நடிப்புக்காக அல்ல... அசைவுகளுக்காகவே ஆயிரம் முறை பார்த்து ரசிக்க வேண்டிய பாடல்.


    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் திலகம் திரி பாகம் 15-இல் மனமகிழ்ச்சியோடு இதைப் பதிகிறேன். அனைவருக்கும் என் நன்றி.



    அன்புடன்
    நெய்வேலி வாசுதேவன்
    Last edited by vasudevan31355; 4th May 2015 at 08:24 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •