Quote:
ரஹ்மானைப் பார்த்ததும் முதலில் நீங்கள் உணரும் விஷயம் அவரது எளிமை. உடன் படிக்கும் கல்லூரித் தோழன் போல் பேசத் துவங்கிவிடுவார். இந்த முறையும் அப்படியே...
‘‘இங்க சுவத்துல தொங்குற கீபோர்டும், மிக்சரும் நான் ‘ரோஜா’ படத்துக்காக பயன்படுத்துனது.
ஒரு ஞாபகத்துக்காக அப்படியே வச்சிருக்கேன்’’ என்று சுவரைச் சுட்டிக்காட்டுகிறார். ரஹ்மான் பழைய வாழ்க்கையை மறக்கவில்லை.
கலைஞர் டி.வி. பேட்டி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது ‘எளிமை, அடக்கம்னா அது ரஹ்மான்’னு சொன்னார். எப்படி உங்களால ஈகோ இல்லாம இருக்க முடியுது?
‘‘வேணும்னு திட்டம் போட்டெல்லாம் இதைப் பண்ண முடியாது. ஆன்மிகத்துக்குள் வந்துவிட்டாலே ஈகோ தானாகவே போயிடும். இந்துக்கள் ஏன் நெற்றியில் விபூதி வைக்கிறார்கள்? ‘நாமெல்லாம் ஒருநாள் சாம்பலாகப் போகிறோம்’ என்ற விஷயத்தை உணர்த்தத்தான். பணம், புகழ் எல்லாம் இருக்கிற வரைக்கும்தான். சாவை ஒரு மனிதன் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தாலே போதும்... பொறாமை, இன்னொருவனை அழித்து அதன் மூலம் வாழ்வது போன்ற கெட்ட சிந்தனைகள் போய் பயம், அடக்கம், எல்லாமே வந்துவிடும்.’’
உங்கள் பேச்சு ரொம்ப தத்துவார்த்தமாகயிருக்கிறதே?
‘‘வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. (சிரிக்கிறார்). ஒரு முறை குல்பர்கா போன போது, ‘இசி அகமதியா தீன்’ என்ற ஒரு புத்தகத்தை வாங்கினேன். ஆரம்பத்திலிருந்து இந்த உலகம் நமக்கு என்னென்ன பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதன் தொகுப்பு தான் இது. குட்டிக் குட்டி கவிதைகளில் படிக்க எளிமையாக இருந்தது. அதேசமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தது. படித்து முடித்ததும் ‘ச்சே’ இதுதானா வாழ்க்கைனு தோணிச்சு. இந்தப் புத்தகத்தை யார் படித்தாலும் மனம் பக்குவப்பட்டு விடும்.’’
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று ரொம்ப பிஸியாக இருக்கிறீர்கள். குடும்பத்துக்கு நேரம் இருக்கிறதா?
‘‘கஷ்டமாதான் இருக்கு. பலசமயம் இரண்டு மாசம், மூணு மாசம்னு ஃபேமிலி, குழந்தைகளை மிஸ்பண்ண வேண்டியிருக்கும். எதையாவது ஒண்ணை தியாகம் பண்ணித்தான் ஆகவேணுங்கற நிலைமையில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாகத்தான் குடும்பத்தினரிடம் பேச வேண்டியதாக இருக்கு.
10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய்க்கு ரொம்ப காஸ்ட்லியான பொருட்கள் மீது கூட என் குழந்தைகளுக்கு ஆர்வமில்லை. அப்பா எப்போதுமே தங்களோடு இருக்கணும். தூக்கிக் கொஞ்ச வேண்டும், பாராட்டணும்றது தான் அவங்களின் டிமாண்டாக இருக்கு. சமீபத்தில் என் இரண்டாவது மகள், ‘எங்க ஸ்கூல் விழாவுக்கு வாப்பா’னு கூப்பிட்டா. அப்போ நான் வெளிநாடு போக வேண்டியிருந்தது. உடனே அவள், ‘நீங்க என்னோட ஃபங்ஷனுக்கு வரமாட்டீங்க. ஆனா நான் மட்டும் உங்க மியூசிக்கை கேக்கணுமா. இனிமே நான் கேட்கமாட்டேன்’னு சொன்னா. எனக்கு என் நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்தது போல இருந்தது. சரின்னு இரண்டு நாள் என் டூர் புரோக்கிராமை தள்ளிப் போட்டுட்டு அவளோடு பள்ளி விழாவுல கலந்துக்கிட்டேன். அவளுக்கு மிகவும் சந்தோஷம்.’’
‘சக்கரக்கட்டி’ படத்திற்கு பாடல்களைப் போட்டுத் தராததால் தான் ரிலீஸாவதில் தாமதம் என்று சொல்கிறார்களே?
(சிரிக்கிறார்.) ‘‘அட அப்படி ஒரு பிட்டை போட்டுட்டாங்களா! இன்னும் ஒரு பாடல் தவிர மற்ற எல்லா பாடல்களின் ரெக்கார்டிங் முடிந்து விட்டது. டைரக்டர் கலா பிரபு, நீங்கள் தான் என் படத்திற்கு மியூசிக் பண்ணணும்னு வந்து கேட்ட போது நான், ‘உடனே என்னால் பண்ண முடியாது. லேட்டாகும்’ என்றேன். அதற்கு அவர், ‘பத்து வருஷமானாலும் பரவாயில்லை, நான் வெயிட் பண்றேன்’ என்றார். பத்து வருஷம் யாரும் லேட் பண்ண மாட்டாங்க இல்லையா? (சிரிக்கிறார்) ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்காங்கனுதான் ஒப்புக்கிட்டேன்.’’
உங்கள் குரு டி.வி. கோபாலகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் வந்ததும் உடனே கிளம்பிப் போயிட்டீங்களாமே?
‘‘அவருக்கு நான் வர்றதே முதல்ல தெரியாது. ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தான் போனேன். என்னைப் பார்த்ததும் டி.வி.ஜி ரொம்பவும் நெகிழ்ந்து போய்விட்டார். ஒரு ஹிந்தி படத்தின் பாடலுக்கு வயலின் செக்ஷன் சம்பந்தமான ரெக்கார்டிங் இருந்தது. அதனால் கிளம்ப வேண்டிய சூழ்நிலை. இது டி.வி.ஜி.க்கும் தெரியும்.’’
உங்களுக்கும் ஷாருக்கானுக்கும் என்ன பிரச்னை? ‘ஓம்சாந்தி ஓம்’ படத்தை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டீர்களாமே?
‘‘எங்களுக்குள் எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை. ஒரு காண்ட்ராக்ட் பிரச்னை காரணமாகத்தான் நான் அந்தப் படத்திற்கு இசையமைக்க முடியாமல் போய் விட்டது. அதுல இசைக்கப்படும் என்னோட மியூசிக்கை வேற ஹாலிவுட் படங்களுக்கு எடுத்துப் பயன்படுத்துனா ‘பெயர் மட்டும் போடுவோம் தவிர பணம் தரமாட்டோம்’னு சொன்னாங்க. இப்படிப் பண்ணா எனக்கு மட்டுமில்ல, இது எல்லா மியூசிக் டைரக்டர்களுக்குமே எதிர்காலத்துல பிரச்னை வரும். அதனால மறுத்துட்டேன்.
டெக்னாலஜி வளர்ந்துகிட்டிருப்பதால் எங்கிருந்து எதை எடுப்பாங்கன்னு சொல்ல முடியாது. சப்போஸ் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துட்டோம்னு வச்சிக்குங்க. எதிர்காலத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்கக் கூடாது இல்லையா! எத்தனையோ மியூசிக் டைரக்டர்ஸ் உயிரைக் கொடுத்து மியூசிக் பண்ணிட்டு வாடகை வீட்டில் இருக்காங்க. இவங்க மியூசிக் ரேடியோ, டீ.வி.க்களில் வராமலில்லை. ஆனால், அவங்களுக்கெல்லாம் ஒண்ணுமே சேருவதில்லை என்பதுதான் பரிதாபம். ஃபாரினில் ஒரு பாட்டு ஹிட்டானா போதும், அந்த மியூசிக் டைரக்டர் வாழ்க்கையில் பெரிய அளவில் செட்டிலாகிவிடுவார்.’’
இளையராஜா நிறையவே ஹிட்ஸ் கொடுத்து இருக்காரே? ஆனா இன்னைக்குள்ள இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடும்போது அவர் குறைவாதான் சம்பாதிச்சிருக்கார் இல்லையா?
‘‘ஆமாம். 500 படங்களுக்கு இசையமைத்து இருக்கார்னு வச்சிக்கிட்டாலும், ‘ஒரு படத்துக்கு ஆறு பாட்டுன்னா கிட்டத்தட்ட 3000 பாட்டு போட்டிருப்பார். ஆனா அதற்கான பணம் அவருக்குக் கிடைச்சிருக்கான்னு தெரியல. அப்படிக் கிடைத்திருந்தால் தமிழ் நாட்டையே விலைக்கு வாங்கியிருப்பார். எல்லோருமே ரொம்ப நொந்து போயிருக்கோம். இதுவரை ஓ.கே. இனிமேல் உஷாராய் இருக்கணும் என்பது தான் என்னோட அபிப்ராயம். கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஃபாரின்லே எல்லாமே இன்டர்நெட்டில் வந்தாலும் சட்டபூர்வமாக பணத்தை நம்ம அக்கவுண்ட்ல போட்டுடுவாங்க. ஆனா, இங்கே பாடல் எவ்வளவு சூப்பர் ஹிட்டானாலும் 5000 ரூபாய்க்குத் தான் போச்சு என்கிறார்கள்.’’
ரீ_மிக்ஸ் பாடல்கள் பத்தி என்ன நினைக்கிறீங்க?
‘‘ரீமிக்ஸ் செய்வதில் தப்பில்லை. அது ஒரு டிரெண்ட், இந்த பாட்டுகள் மக்கள் விரும்புகிற வரைதான். அப்புறம் ஆட்டோமெட்டிக்கா அதுவே காணாம போயிடும். நல்ல ரீ_மிக்ஸ§ம் இருக்கு. மோசமான ரீ_மிக்ஸ§ம் இருக்கு. பழைய பாடலின் தன்மை கெடாமல் பண்றது வேற. கெடுத்து குட்டிச்சுவராக்குறது என்பது வேற’’ (சிரிக்கிறார்).
சமீபத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் ஒரு மேடையில் பேசும் போது, ‘இப்போதுள்ள மியூசிக் டைரக்டர்கள் எம்.எஸ்.வி. சாப்பிட்டு விட்டு போட்ட மிச்சத்தைத்தான் சாப்பிடுகிறார்கள்’ என்று கொஞ்சம் காட்டமாக சொல்லி இருந்தார். அது பற்றி?
‘‘அவர் சொன்னதை ஒரு பாராட்டா ஏன் எடுக்கக்கூடாது? அவர் நல்லவிதமாகத்தான் சொல்லியிருப்பார். எம்.எஸ்.வி. ஒரு முன்னோடி. அவர் வழியைப் பின்பற்றுங்கன்னு கூட சொல்லி இருக்கலாம். அதுதான் உண்மை. கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் எச்சில், கிச்சில்னு சொல்லியிருக்கலாம். நிச்சயமாக தவறா பேசியிருக்கமாட்டார் என்பதுதான் என்னோட அபிப்ராயம்.’’.