Quote:
மாடல் அழகிக்கு வந்த சோதனை
விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், ரோஜாக்கூட்டம்.
வித்தியாசமான ஐந்து பெண்கள். அவர்களுக்கென்று தனித்தனி வாழ்க்கை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வுக்குள்ளும் ஏதேனுமொரு ரகசியம் இருட்டு மூலையொன்றில் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரேயடியாய் அதை கொன்றுவிட முடியாமலும், அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமலும் திணறும் இந்த பெண்களின் போராட்டத்தை சொல்லிச் செல்கிறது, ரோஜாக் கூட்டம்.
கூடவே தொடர்கிறது, சிறு முட்களின் கூட்டமும். திருமணமானவர்கள், குழந்தைகள், கணவன், மாமனார், மைத்துனர் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் உள்ளதுபோல் இந்த ஐந்து பெண்களுக்கும் இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டதாலேயே அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கையாளும்விதமே தொடரை சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கிறது.
தொடரில் மாடல் அழகியாக வரும் மானஸா எதற்கும் அஞ்சாத கேரக்டர். தமிழகத்தின் முன்னணி மாடல்களில் ஒருத்தி. அபார்ட்மெண்டில் தனியாக வசிப்பவள். எந்நிலையிலும் தனது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் விட்டுத் தராதவள்! ஒற்றையாய் வாழும் பெண்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் இவளுக்கும் உண்டு. அனைத்தையும் லாவகமாய் கடக்கும் திறமை இவளிடம் உண்டு.
அப்படியிருந்தும் மாடலிங் துறையில் மாடல் அழகிகளுக்கு எந்தவித பிரச்சினைகள் வருமோ அதேமாதிரியான பிரச்சினை மானஸாவுக்கும் வந்தது. ஆனால் மானஸா அதற்காக மூலையில் உட்கார்ந்தெல்லாம் அழுது கொண்டிராமல் தனது அபார்ட்மென்ட்டில் வசிக்கும் புகைப்பட நண்பருடன் சேர்ந்து சாதுர்யமாக இப்பிரச்சினையை முறியடிக்கிறாள்.
மாடல் அழகியாக நடிப்பவர் பூஜா. இந்த கேரக்டர் பற்றி பூஜா கூறும்போது, "எத்தனையோ கேரக்டர்களில் நடித்தாலும் சிலது மட்டும் வித்தியாசமாக நமக்கே தனித்து தெரியும். அப்படியொரு கேரக்டர் தான் இந்த மானஸா கேரக்டர். நான் ரொம்பவே இன்வால்வாக நடிக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் எனக்குள் உட்புகுந்து விட்டது'' என்கிறார்.