-
வயிறு குலுங்க சிரிக்க வைத்த....
'காசி யாத்திரை'
சீரியஸான குடும்பச்சித்திரமான ‘பெத்த மனம் பித்து’ படத்துக்குப்பின் அதே குகநாதன் யூனிட்டால் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் 'காசி யாத்திரை'.
'ஆஞ்சனேய பவன'த்தில் குடியிருக்கும் பரமசிவம் (வி.கே.ராமசாமி) ஒரு தீவிர ஆஞ்சனேய பக்தர். தான் திருமணம் செய்துகொள்ளாததோடு, தன்னைச் சேர்ந்தவர்கள் யாருமே திருமணம் செய்துகொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருப்பவர். அவரது அண்ணன் மகனான ராமு (ஸ்ரீகாந்த்) சித்தப்பாவையே அண்டி வாழ்க்கை நடத்துபவர். அவரை கல்லூரியில் படிக்க வைத்தது முதற்கொண்டு எல்லாமே சித்தப்பாதான். தன்னைப்போலவே தன் அண்ணன் மகன் ராமுவும் பெண் வாடையே அறியாத பிரம்மச்சாரியாக வாழவேண்டும் என்று போதித்து வளர்க்கிறார். ஆனால் ராமுவுக்கும், சோவின் அண்ணன் மகள் சீதா (ஜெயா) வுக்கும் காதல் உருவாகிறது. சித்தப்பாவுக்குத்தெரியாமலேயே காதல் வளர்கிறது.
சித்தப்பாவின் பிடிவாதத்தால். தாங்கள் ஒன்று சேர முடியாது என்று நினைத்து ராமுவும், சீதாவும் ஒருவருக்குத்தெரியாமல் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ளப்போகும் நேரத்தில், வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்துகொள்ள இருந்த சுருளியைக் காப்பாற்றி, தன் சித்தப்பாவிடம் தங்கள் காதலை எடுத்துச்சொல்லி சம்மதம் வாங்க சுருளிதான் சரியான ஆள் என்று முடிவெடுத்து, அவரை தீவிர ஆஞ்சநேய பக்தன் என்றும் பிரம்மச்சாரிக்கேற்ற உணவு சமைப்பதில் வல்லவர் என்றும் சித்தப்பாவிடம் பொய் சொல்லி, சுருளியை தன் வீட்டிலேயே வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்.
உண்மையில் சமையல் தெரியாத சுருளியும், ஏதோ தன் கைக்கு வந்ததை சமைத்துவிட்டு, வி.கே.ஆர். கேட்கும்போதெல்லாம் 'இது பிரம்மச்சரியத்துக்கு ரொம்ப நல்லதுங்க' என்று சொல்லியே வாயடைத்து விடுகிறார். ராமு, சீதா காதல் விவகாரம் சோவுக்குத்தெரிய வர, தன் தம்பி மகளின் திருமணம் பற்றிப்பேச வர, ஆஞ்சனேய பவனத்தில் திருமணப்பேச்சாவது, தன் அண்னன் மகனை தன்னைப்போலவே பிரம்மச்சாரியாக வளர்க்கப்போவதாகச் சொல்லி, சோவை வி.கே.ஆர். விரட்டி விடுகிறார்.
(திருமணம் பேச வரும் சோ. வி.கே.ஆரிடம் சுவரில் மாட்டியிருக்கும் சீதை ராமர் கல்யாண படத்தைக்காட்டி 'என்ன இது?' என்று கேட்க, அதற்கு வி.கே.ஆர் 'இதுகூடத்தெரியாதா? இதுதான் சீதா ராம கல்யாணப்படம்' என்று சொல்ல, 'அது எனக்குத்தெரியாதா?. இதுக்குப்பக்கத்திலே இன்னொரு சீதா ராமு கல்யாணப்படத்தை மாட்டணும். புரியலே இல்லே? அது சரி, என் பேச்சு எவனுக்குப் புரிஞ்சுது?').
சித்தப்பா இப்படி 'அடமெண்ட்'டாக இருக்கவே, அவரை ஒரு பெண்ணை வைத்துக் கவிழ்த்துதான் தங்கள் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் ராமு (ஸ்ரீகாந்த்), சுருளியின் உதவியுடன், நாடக நடிகையான மனோரமாவை விட்டு, வி.கே.ஆருக்கு காதல் கடிதம் எழுத வைத்து, அவரை மனோரமா வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கிடையே முடிச்சுப்போட்டு, கடைசியில் வி.கே ஆர். உதவியுடனேயே தங்கள் கல்யாணத்தை முடித்துக்கொள்வதை இரண்டரை மணி நேரம் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்கள்.
நகைச்சுவைப்படமென்பதால் ஸ்ரீகாந்த், ஜெயா தவிர மற்ற பாத்திரங்கள் அனைத்துக்கும் நகைச்சுவை நடிகர்களையே போட்டு, நம்மை நகைச்சுவையில் முழுகடித்திருப்பார்கள். ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக வரும் வி.கே.ஆர்., அவர்கள் வீட்டு சமையல்காரனாக வரும் சுருளி, ஜெயாவின் பெரியப்பாவாக வரும் சோ, நாடக நடிகையாக வரும் மனோரமா, அவரது ஆல்-இன் -ஆல் கூஜாவாக வரும் எம்.ஆர்.ஆர்.வாசு., மனோரமாவை நாடகத்துக்கு புக் செய்ய வரும் (திக்குவாய்க்காரர்) தேங்காய் சீனிவாசன் என அனைவரது வசனங்களிலும் நகைச்சுவைதான். உதாரணத்துக்கு சில:
தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளப்போகும் சுருளி தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருப்பார் : "அம்மா, உன் பிள்ளைக்கு இந்த உலகத்துல வாழ வழியில்லே. ஒரு வீட்டுத்திண்னையில் உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல வீட்டுக்காரன் வந்து திண்ணையில் உட்கார்ந்ததற்கு வாடகை கேக்கிறான். இவ்வளவு மோசமான பட்டணத்துல எப்படி வழ முடியும். நீ போன இடத்துக்கே வந்துடுறேன். நீ எங்கே இருக்கே?. சொர்க்கத்திலேயா நரகத்துலேயா? என்னைப்பெத்த நீ சொர்க்கத்துலேயா இருப்பே?, நரகத்துலதான் இருப்பே, அங்கேயே நானும் வந்திடுறேன்".
சமையல்கார சுருளியிடம் வி.கே.ஆர். 'இன்னைக்கு என்ன சமையல்?' என்று கேட்க, சுருளி 'வெந்தய சாபார், வெந்தய ரசம், வெந்தய வத்தக்குழம்பு'.
'எல்லாம் சரி, ஆனா ஒரு தூக்குவாளிதானே கொண்டு வந்திருக்கே?'
'முதலாளி, இதையே மேலாக எடுத்தால் ரசம், கலக்கி எடுத்தால் சாம்பார், வத்த வச்சா வத்தக்குழம்பு'
இன்னொரு இடம்... பார்க்கில் நண்பனுடன் குடிபோதையில் இருக்கும் சோ, அந்தப்பக்கம் கையில் குழந்தையுடன் போகும் ஒரு பெண்ணிடம், 'ஏம்மா குழந்தை அழகா இருக்கே, உங்க குழந்தையா?".
"ஆமாங்க".
"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?".
அந்தப்பெண் 'பளார்' என்று அறை விடுவார். சோ தன் நண்பனிடம் "ஏண்டா நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?". அதற்கு நண்பன் "பின்னே என்னடா?. அவள்தான் குழந்தை அவளோடதுன்னு சொல்றாளே. பின்னே கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்கிறே. முதல்ல கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டுட்டு அப்புறம் குழந்தையைப்பத்தி கேட்டிருக்கணும்".
"அப்படியா?. இதோ இன்னொரு பொண்ணு வர்ரா, அவள்கிட்டே சரியா கேக்குறேன் பாரு".
"ஏங்க உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?".
"இன்னும் ஆகலீங்க".
"ஆகலியா? சரி, குழந்தை அழகா இருக்கே, உங்க குழந்தையா?". மீண்டும் அந்தப்பெண்ணும் 'பளார்' என்று அறைவிடுவார். "என்னடா இது? இப்படி கேட்டாளும் அறையிறாளுங்க, அப்படி கேட்டாலும் அறையிறாளுங்க". (இவை பானை சோற்றுக்கு சில சோறு பதங்கள். மற்றபடி படம் முழுக்க வயிறு குல்ங்கவைக்கும் சிரிப்புத்தான்).
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான இப்படத்தை வி.சி..குகநாதன் தயாரித்திருந்தார். இசையமைத்தவர் வி.குமார் என்பதாக நினைவு. பாடல் எதுவும் மனதில் நிற்கிறாற்போல இல்லை. கதாநாயகியாக ஜெயா வழக்கம்போல அப்பாவியான முகமும், வெகுளிச்சிரிப்பும், குழந்தைப்பேச்சுமாக வளைய வருவார்.
ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து, கருப்பு வெள்ளையில் மிகச்சிக்கனமாக எடுக்கப்பட்ட 'காசி யாத்திரை' திரைப்படம் நகைச்சுவையின் துணை கொண்டு வசூலை அள்ளியது.
-
சாரதா,
வழக்கம் போல் நல்ல பதிவு. இந்த படம் நமது தங்கப்பதக்கம் வெளியான நேரத்தில் [1974 ஜூன்] ரிலீஸ் ஆனது என்று நினைவு. நான் மதுரை அலங்காரில் பார்த்தேன். மறக்க முடியாத இன்னொரு வசனம் - எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் சோவை பரிசோதிக்கும் டாக்டர் இனிமேல் குடிக்கக் கூடாது என்பார். சோ சிரித்துக் கொண்டே "என்ன சார் இது? ஒரு டாக்டர் குடிக்க சொல்றாரு! இன்னொரு டாக்டர் குடிக்க கூடாது-னு சொல்றாரு. யார் சொல்றதை கேட்கறது?" என்பார். தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் இருக்கும்.
[புரியாதவர்களுக்கு - தலைமுறை தலைமுறையாக குடி என்னவென்றால் தெரியாமல் வாழ்ந்த தமிழகத்தில் 1971 ஆகஸ்ட் 30 முதல் மது கடைகள் "டாக்டர்" கலைஞரால் திறக்கப்பட்டு நடந்து வந்ததை கேலியாக சுட்டிக் காட்டிய வசனம் இது].
அன்புடன்
-
சாரதாவின் சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம் இங்கே மீள்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நன்றி, சாரதா!
http://awardakodukkaranga.wordpress....980;ர-3/
-
Dear Murali,
Thanks for your response for the review of the movie 'Kaasi Yaathirai'
Dear RV,
thanks for the re-post, in your blog.
-
சாரதாவின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் விமர்சனம் இங்கே மீள்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நன்றி, சாரதா!
http://awardakodukkaranga.wordpress....#3021;க/
-
சாரதா, பெயர் என்பவர் ஒரு மறுமொழி எழுதி இருக்கிறார்.
// படத்தின் நிறைவுப் பகுதியில் கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய ‘நடிகை பார்க்கும் நாடகம் – அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்’
That song was by Jolly Abraham and B.S.Sasirekha and not by KJD.You can listen to that in thiraipaadal.com or in dhool.com
under Song of the Day Archives //
-
சுட்டிக்காட்டலுக்கு மிக்க நன்றி RV & Peyar....
படம் பார்த்து வெகுநாளாகி விட்டதாலும், படம் பார்க்கும்போதே அது ஜேசுதாஸின் குரல்தான் என்று நான் நம்பியதாலுமே இந்தக் குழப்பம். 'ஜேசு'வின் குரலும் 'ஜாலி'யின் குரலும் ஒன்றுபோல அமைந்து நம்மை ஏமாற்றும். இதே போல என்ன ஏமாற்றிய இன்னொரு பாடல் 'ஒரு கைதியின் டைரி' படத்தில் வரும் "பொன்மானே... கோபம்... ஏனோ..". ரொம்ப நாள்வரையில் அது ஜேசுதாஸின் குரல் என்றே நம்பியிருந்தேன், அதைப்பாடியவரே சொல்லும் வரை.
(RV..., உங்கள் ரசனைக்கேற்ற 'இவர்கள் வித்தியாசமானவ்ர்கள்' என்ற இன்னொரு ஆய்வும் இங்குள்ளது. படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்).
-
மூன்று திரிகளையுமே படித்தேன். இவர்கள் வித்தியாசமானவர்கள் பார்த்ததில்லை, உங்கள் விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது.
-
கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது படம்
'திருமாங்கல்யம்'
கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது படம் எது என்பதில் ஏற்பட்ட குழப்பம் பற்றியும், அப்போது நடந்த சுவையான நிகழ்வுகளையும் ஏற்கெனவே ரவிச்சந்திரன் திரியில், 'பாக்தாத் பேரழகி' படத்தினுடைய பதிவின் தொடர்ச்சியில் குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில், ஜெயலலிதாவின் 100-வது படமாக முடிசூட்டப்பட்டு வெளியானது 'திருமாங்கல்யம்'. இவரோடு கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் திரையுலகுக்கு வந்த இன்னொரு நட்சத்திரம் 'புன்னகையரசி' கே.ஆர்.விஜயாவின் 100-வது படமான 'நத்தையில் முத்து' திரைப்படமும் இதே ஆண்டில்தான் வெளியானது. (ஒரே சமயத்தில் நுழைந்தவர்கள் என்றால் ஒரே ஆண்டில் அல்ல. கற்பகம் 1963, வெண்ணிற ஆடை 1965). இன்னொரு ஒற்றுமை, இவர்களில் ஒருவர் மக்கள் திலகத்துடனும், இன்னொருவர் நடிகர்திலகத்துடனும் அதிகப்படங்களில் ஜோடியாக நடித்திருந்த போதிலும் இவர்களின் 100-வது படங்களில் அவர்கள் இருவருமே இல்லையென்பது மட்டுமல்ல. இரண்டிலும் ஒரே நாயகனாக நடித்தவர் 'நவரசத்திலகம்' முத்துராமன்.
முத்துராமன், சிவகுமார் இருவரும் சகோதரர்கள். அவர்களின் முறைப்பெண் லட்சுமி. லட்சுமியின் தங்கை வாய் பேசமுடியாத ஸ்ரீதேவி. லட்சுமி பருவமடைந்த ஒரு விளையாட்டுப்பிள்ளை. அவருக்கு எல்லாமும், எப்போதும் விளையாட்டு. அவரை சிவகுமாருக்கு திருமணம் முடிக்கலாமென்றால், சிவகுமாருக்கோ ஏழைப்பெண் ஜெயலலிதா மீது காதல். அப்பா இல்லாமல் அம்மா பண்டரிபாயுடன் வாந்துவருபவர் ஜெயலலிதா. சிவகுமாரை ஜெயலலிதாவிடமிருந்து பிரிக்கும் நடவடிக்கையாக, ஜெயலலிதாவுக்கு மயக்க மருந்து கொடுத்து தானே அவருக்கு தாலி கட்டிவிடுகிறார் (??) முத்துராமன். இதனால் ஏற்படும் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் மீண்டு வருவதுதான் கதை.
சரி, இதில் ஸ்ரீகாந்த் எங்கே வந்தார்...?. இப்படத்தில் ஸ்ரீகாந்த் ஜெயலலிதாவின் சொந்தத் தம்பி. கொள்ளைக்கும்பலுடன் சேர்ந்து சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஸ்ரீகாந்துக்கு எப்போதும் போலீஸ் வலைவீச்சுதான். வலையில் சிக்காத கெண்டை மீனாக மறைந்து மறைந்து ஓடிக்கொண்டிருப்பார். இடையிடையே அம்மாவையும், அக்காவையும் சந்திக்க வரும்போதெல்லாம் அவருக்கும் அக்கா ஜெ.க்கும் வாக்குவாதம்தான். ஆனாலும் பண்டரிபாய் மகனை எதுவும் கடிந்துகொள்ள மாட்டார். பெற்ற மனசு அல்லவா?. (ஜெ.வின் முதல் படத்தில் கதாநாயகனாக வந்தவர் 100-வது படத்தில் தம்பி. திட்டமிடப்படாமல் எப்படியோ இரண்டிலும் இடம் பெற்றுவிட்டார். இப்படத்தில் ஜெ.வின் உருவத்துக்கும், ஸ்ரீகாந்தின் உருவத்துக்கும் 'அக்கா - தம்பி' உறவு பொருத்தமாகவே இருக்கும்). ஸ்ரீகாந்தின் கொள்ளைக்கும்பல் பாஸ் ஆக வரும் பாலாஜி தலையில் புஷ் குல்லாவும்(?), கண்களில் கறுப்புக்கண்ணாடியுமாக (?) 'யாரையோ' நினைவுபடுத்தினார். அவர் மதுவருந்தும்போது வாயில் வைத்து கொப்பளித்து விழுங்குவது போன்ற இடங்களில் அசோகனின் கோமாளித்தனம் நினைவுக்கு வந்தது.
இப்படத்தில் உணர்ச்சிகரமான கட்டம் ஒன்று. அம்மா பண்டரிபாய் இறந்தது மகன் ஸ்ரீகாந்துக்கு தெரியாது. மகனை எதிர்பார்த்து காத்திருந்து, வராமல் போகவே இறுதிச்சடங்குக்காக பிரேதத்தை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது, அதே நேரம் போலீஸின் துரத்தலில் ஓடி வரும் ஸ்ரீகாந்த், ஒரு புதர் மறைவில் தன்னுடைய பேண்ட் சட்டையை கழற்றிவிட்டு வேஷ்டி, பனியனுடன் ஓடிவந்து, அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருக்கும் பிரேத ஊர்வலத்தில் (அது தன் தாயின் உடல் என்றே தெரியாமல்) போலீஸில் இருந்து தப்பிக்க அந்த உடலைத்தூக்கி வருபர்களில் ஒருவராக கலந்துகொள்வார். அந்த இடத்தில் 'செத்தும் தன் மகனைக்காப்பாற்றும்' தாயாக பண்டரிபாய் விளங்குவார்.
திருமாங்கல்யம் படத்துக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். தோழியின் திருமண வரவேற்பில் ஜெயலலிதா பாடும்
'யோகம் நல்ல யோகம்.. மங்கை நல்லாள் வந்த யோகம்'
பாடலை பி.சுசீலா பாடியிருந்தார்.
முத்துராமன் ஜெயலலிதாவுக்கு டூயட் பாடல் ஒன்று (கனவுப்பாடல்)
'பொன்னான மனமிங்கு போகின்றதே
சொல்லுங்கள் மேகங்களே'
இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். இப்பாடலை பிரம்மாண்டமான செட்டில் படமாக்கியிருந்தனர். அந்த செட் 'பிரேம் நகர்' (இந்தி வசந்த மாளிகை) படத்துக்காகப் போடப்பட்டது. (இதே செட்டில் தான் பாலாஜியின் 'என் மகன்' படத்தில் 'சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே' என்ற கவர்ச்சிப்பாடல் படமாக்கப்பட்டது).
தன் கழுத்தில் முத்துராமன் கட்டிய திருட்டுத்தாலியைப் பார்த்து அதிர்ந்து, தன் மனச்சாட்சியுடன் நடத்தும் போராட்டமாக ஜெயலலிதா பாடும் பாடல்
'திருமாங்கல்யம் கொள்ளும் முறையில்லையோ
மனம் அறியாமல் வரும் தாலி தவறில்லையோ'
இப்பாடலையும் சுசீலாதான் பாடியிருந்தார். (இப்பாடல் கிட்டத்தட்ட சவாலே சமாளியில் வரும் 'என்னடி மயக்கமா சொல்லடி' பாடலை நினைவுபடுத்தும்).
லட்சுமி தன் தோழிகளுடன், பார்ட்டியில் பாடும்...
'உலகம்... நமது வீடென்று சொல்லுங்.....கள்..ள்..ள்'
என்ற பாடலை எல்.ஆர் ஈஸ்வரி தனக்கே உரிய நெளிவு சுளிவுகளோடு பாடியிருந்தார்.
இவைகளோடு, பண்டரிபாயின் உடலை ஸ்ரீகாந்த் தூக்கிச்செல்லும்போது பாடப்படும் அசரீரிப் பாடல் ஒன்றும் உண்டு. பாடியவர் மெல்லிசை மன்னர்தான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
ஜெயலலிதா, முத்துராமன், சிவகுமார், ஸ்ரீகாந்த், பாலாஜி, லட்சுமி, ஸ்ரீதேவி, பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்திருந்த இப்படத்தை, மாபெரும் வெற்றிப்படமான 'வசந்த மாளிகை' படத்தைத் தயாரித்த டி.ராமாநாயுடு தயாரிக்க, ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் இயக்கியிருந்தார்.
சற்று பிரம்மாண்டமாக வண்ணத்தில் தயாரான 'திருமாங்கல்யம்' பெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சுமார் வெற்றியையே பெற்றது.
-
saaradha_sn, Kase dhan kadavuLada matrum veettukku veedu cover paNNittIngaLA?
(in the 3 series yu are doing - RaviC, JaiS nad SriK)