மக்கள் திலகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா எடுத்தனர். இப்போது நேரு ஸ்டேடியம் இருக்குமிடம் அப்போது காலி இடமாக இருந்தது. அங்குதான் பாராட்டு விழா நடந்த்து. பிரமாண்டமான அரங்கம் அமைத்து அந்த விழா நடந்தது.
பாரதிராஜா, பாக்யராஜ். டி.ராஜேந்தர் என்று மக்கள் திலகம் மீது மரியாதை கொண்ட அனைவரும் வந்து மனதார வாழ்த்தினர். நடிகை ரேவதி உட்பட பலர் நடனம் ஆடினார்கள்.
இந்த விழா நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் சின்ன விழா நடந்தது. அங்கேயும் திரை பிரபலங்கள் குவிந்திருந்தார்கள். மக்கள் திலகம் அப்போது முதல்வர் என்பதால் அவர் வர மாட்டார் என்ற நினைப்பில் நான், ஜெய்சங்கர் உட்பட சிலர் டிரிங்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
திடீரென்று மக்கள் திலகம் வந்துவிட்டார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த்தால் அவர் கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் வந்ததும் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரிங்ஸை மறைத்துவிட்டோம். நான் அவசரம், அவசரமாக ஓட்டல் ஊழியரிடம் சென்று டூத் பேஸ்ட்டு வாங்கி பல் துலக்கிவிட்டு வந்து மக்கள் திலகத்திற்கு வணக்கம் வைத்தேன்.
“எப்படியிருக்கு சினிமா..?” என்று கேட்டார் மக்கள் திலகம்.
“நல்லாயில்லை..” என்றேன்..
“ஏன்..” என்றார்.
“நீங்கதான் சி.எம். ஆகிட்டீங்களே ஸார்..” சிரித்துக் கொண்டே என் தோளில் கை போட்டார்.
மக்கள் திலகம் சில கலைஞர்களுடன் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தார். நான் படம் பிடித்தேன். அப்போது டைரக்டர் பாலு மகேந்திரா மக்கள் திலகம் தோள் மீது கை போட்டுவிட்டார். அவர் தோளில் கை போட்ட அடுத்த நிமிடமே பட்டென்று மக்கள் திலகம் அவரது கையைத் தட்டிவிட்டார். அவசரத்தில் அதையும் நான் படம் பிடித்துவிட்டேன். மக்கள் திலகம் இதைக் கவனித்துவிட்டார்.
“நடிகை ஷோபா, பாலுமகேந்திராவில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று பேசப்பட்ட நேரம் அது. முதல்வர் என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்க மக்கள் திலகத்திற்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக அப்படி தோளில் கை போட்டு படம் பார்க்கப் பார்த்திருக்கிறார் பாலுமகேந்திரா..” என்று முணுமுணுத்தார்கள். “பெருந்தன்மையாக எல்லோருடைய தோளிலும் முதல்வர் கை போடுகிறார். இதற்காக அவர் தோளிலேயே கை போடலாமா..?” என்று சிலர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விழா நடந்த அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாசலில் ஜேப்பியார் நின்று கொண்டிருந்தார்.
“என்ன ஸார்.. எம்.ஜி.ஆர்., நெகடிவ் ரோலை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரா..? என்று கேட்டேன். “அதெப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க..?” என்றார் ஜேப்பியார். “இத்தனை வருஷமா அவர்கூட இருந்திருக்கேன். இது தெரியாதா ஸார் எனக்கு..? பாலுமகேந்திரா தோளில் கை போட்டதும் நான் படம் எடுத்ததை மக்கள் திலகம் பார்த்துவிட்டார். நிச்சயம் பிலிம் ரோலை வாங்கிக் கொள்வார்ன்னு தெரியும்..” என்று சொல்லிவிட்டு பிலிம் ரோலை ஜேப்பியாரிடம் கொடுத்தேன்.
அதை வாங்கிக் கொண்டதும், “தலைவர் கொடுக்கச் சொன்னார்..” என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தார் ஜேப்பியார். பிரித்துப் பார்த்தேன். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து இருந்தன.
நன்றி :
“தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.”
எழுதியவர் : புகைப்படக் கலைஞர் திரு.ஏ.சங்கர்ராவ்
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் : 264
விலை : ரூ.150