'கத்தி' பட பாணியில் ஒரு கிடு கிடு போராட்டம்!
கத்தி திரைப்படத்தில், எம் என் சி நிறுவனங்கள் குளிர்பான தயாரிப்பிற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்த்து, தன்னூத்து எனும் கிராம மக்கள்போராடுவதாக காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் நிஜத்தில் திருச்சி அருகே சூரியூர் என்ற கிராம மக்கள், திருச்சி எல்.ஏ பாட்டிலர்ஸ் எனும் பெப்சி தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக பல வருடங்களாக போராடி வருகின்றனர் என்பது பலரும் அறியாதது.
திரைப்படம் என்பதால் தன்னூத்து கிராம மக்களுக்கு 3 மணி நேரத்திற்குள் ஒரு தீர்வு கிடைத்தது. ஆனால் வருடங்கள் பல கடந்தும் சூரியூர் மக்களின் போராட்டங்களுக்கு இன்னமும் ஒரு விடிவு பிறக்கவில்லை என்பது செவிட்டில் அறையும் வேதனை.
Quote:
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தின் பின்புறம், சூரியூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010 ல் துவக்கப்பட்டது எல்.ஏ பாட்டிலர்ஸ் என்ற இந்த பெப்சி தயாரிப்பு நிறுவனம். முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜுக்கு சொந்தமான இந்த நிறுவனம், தற்போது அவரது மகன்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்குவது கிணற்று பாசனம்.
ஆனால் இதெல்லாம் எல்.ஏ பாட்டிலர்ஸ் வருவதற்கு முந்தைய நிலவரம். எல்.ஏ பாட்டிலர்ஸ் வருகைக்குப்பின் எல்லாமே தலைகீழானது. தங்கள் கிராமங்களை மீட்டெடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இந்த நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.
சூரியூர் பஞ்சாயத்து தலைவரான சாரதாதேவி ராமையா, “எங்க ஊர் எல்லைக்குள் இருக்கும் கம்பெனி வளாகத்திற்குள் 6 போர்வெல், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்கள் என ராட்சத போர்களை அமைத்து 24 மணிநேரமும் கணக்கின்றி நீரை உறிஞ்சி எடுக்கின்றனர் அந்த நிறுவனத்தினர். இதனால இப்பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றாக பாழாகிடிச்சி. சகல சவுகர்யங்களுடன் நிறுவனம் இயங்கிக்கிட்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்த நாங்க தினந்தோறும் தண்ணீருக்காக தவியா தவிக்கிறோம்“ என்றார் வேதனையான குரலில்.