அரபு தேசத்தையே அசத்திவிட்டு வந்திருக்கிறார் இளையராஜா.
எப்போதும் ‘தனிமை உலகத்தி’லேயே இருக்கும் ராஜாவை என்ன மந்திரம் போட்டு எப்படி சம்மதிக்க வைத்தார்களோ கலைஞர் டி.வி.க்காரர்கள். பொங்கல் தினத்தன்று கலைஞர் டி.வி.யில் ஹைலைட்டான புரோக்ராமே இதுதானாம்!
அறுபதாயிரம் பேர் உட்காரக்கூடிய ஷார்ஜா ஸ்டேடியத்தில் இடமில்லாமல் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வெளியே நின்றிருக்கிறார்கள். எஸ்.பி.பி., சித்ரா, மனோ, ஸ்ரேயா, கோஷல், சாதனா சர்க்கம், விஜய் யேசுதாஸ், திப்பு, மஞ்சரி, மது பாலகிருஷ்ணன் உட்பட முன்னணி பாடகர்களோடு 87 இசைக் கலைஞர்கள் என ஆறுமணி நேரம் 80_90களில் வெளிவந்த பாடல்களைப் பாடி ரசிகர்களை சொக்க வைத்து விட்டார் ராஜா.
எஸ்.பி.பி. படு ஜாலியான மூடில் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவ்வப்போது பாடல் எப்படியெல்லாம் பதிவு செய்யப்பட்டது என்பதை கதை போல் சொல்லி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கார்த்திக் ராஜா, யுவன் இருவரும் மேடையேறி ‘‘என் பாட்டை பாடுங்க.. என் பாட்டை பாடுங்கன்னு’ ராஜாவை கலாய்க்க, ராஜா உடனே ‘‘அறியாத வயசு... புரியாத மனசு’’ என்று தொடங்க... அரங்கில் அப்ளாஸ் அள்ளிக் கொண்டது.
ஆனால் யுவன், ‘‘இதுல்ல என்பாட்டு’’ என்றதும், கார்த்திக்கும் அதையே திரும்பச் சொல்ல, ராஜா சட்டென்று ‘‘ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா’’ என்று தொடங்க, மூவரும் சேர்ந்து பாடி முடிக்கும் வரை அரங்கில் உற்சாகம் கரை புரண்டது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜெயராமும், குஷ்புவும் எஸ்.பி.பி.யிடம் ஒரு பாடல் கேட்க, ‘‘நான் பாட்டுப் பாடினால் நீங்க ஆடணும்’’ என்றதும் குஷ்பு தயாராகி விட்டார். ‘ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரீயா’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களையும் ஆட வைத்து விட்டனர் குஷ்பு, ஜெயராம், கூடவே மனோவும்.
இளையராஜா பேசும் போது ‘‘என்னிடம் ஃபாஸ்ட் ஃபுட் இசையை எதிர்பார்க்காதீர்கள். தலைவாழை இலை போட்டு நிதானமாகப் பரிமாறும் கல்யாணச் சாப்பாடுதான் கிடைக்கும்!’’ என்றார். இப்படி கச்சேரியில் களைகட்டிய சமாச்சாரங்கள் ஒருபுறமிருக்க, இந்தப் பயணத்தில் ராஜாவைக் கடுப்பேத்தும் விதமாகவும் ஒரு காரியம் நடந்திருக்கிறது.
ராஜா தன்னுடைய இசைக்குழுவினருடன் ஷார்ஜா போய் இறங்கியதும், கடலுக்குள் அமைந்திருக்கும் அதிநவீன ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்திருக்கிறார்கள்.
அரபு நாடுகளுக்கு உண்டான விதிகளின் படி அந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறைக்குச் செல்லவும் ஒரு உடை அணிய வேண்டும். வேஷ்டி சட்டை அணியக் கூடாதாம்!இதைக் கண்டிப்பாகச் சொல்லி விட்டது ஹோட்டல் நிர்வாகம். இந்த நிபந்தனையால் கடுப்பான இளையராஜா அங்கு தங்குவதற்கே மறுத்து விட்டார். இது ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தெரிந்து பதறிப்போய் ராஜாவுக்கு மட்டும் விதியைத் தளர்த்தியிருக்கிறார்கள்..
:kumudam: