-
நெஞ்சில் கபம்
கொடியதோர் சாபம்
உலுக்கும் இருமல்
நாட்டு காட்டு மருந்து
அனைத்தும் முயன்றும்
இல்லையோர் பலன்
சாவின் விளிம்பில்
ஊசலாடும் உயிர்
கொல்லாமல் கொல்லும்
கொடியதோர் வதை
உச்சி வான் ஓசோன்
உடம்புக்கு நல்லதாம்
தரையில் உலாவுவது
இப்படி வாட்டுமாம்
பனி வாடை காத்து
பக்குவமாய் இருந்து
தப்ப முடியவில்லை
மூப்புடன் கைகோர்த்து
மார்கழி இளிக்கிறது
மூச்சிரைத்தே சாவதல்ல
என் இறப்பின் கனவு
மதியை வெல்லும் விதியே
ஏன் என்னை சோதிக்கிறாய்
-
சோதிக்கிறாய் சுடரேந்திய சேல்விழிகளைக் கொண்டே
மேதினியில் மென்மூச்செலாம் குளிர்தென்றலாய் ஆக்கி
சேதிசொலும் உணர்வைநிதம் செழிப்பாய்க்கலைத் திங்கே
வாதியென வாதம்பல புரிகின்றனை அழகே
-
அழகே தன்னை அறியாது
காண்பவரே பாக்கியசாலி
முழுதாய் ரசிக்கவல்லார்
சால சிறந்ததும் அதுவே
தன் அழகில் சொக்கியவன்
கண்ணெடுக்காமல் ஏங்கி
உருகியே செத்தொழிந்தான்
கருத்துள்ள கதை தான்
இறைந்து கிடக்கு அழகு
பக்குவமாய் பருகப் பழகு
-
பழகு எனச்சொன்னீர் பக்குவமாய் நயந்தே
அழகாய்க் கவித்துவமாய் அங்கே – நலத்துடனே
பேசினேன் அப்பா பெரிதாய்ப் பயனில்லை
ஏசுகிறார் என்கணவர் ஆம்..
-
ஆம் என்றால் ஆமாம்தானா
இல்லையென்றால் இல்லைதானா
வஞ்சியரின் வார்த்தையிலே
அர்த்தமும் அகராதியும்
வேறென்ற விபரமறிவான்
அனுபவசாலி ஆண்பிள்ளை
-
ஆண்பிள்ளை வேண்டு மென்று
..அரசினைச் சுற்றி ச்சுற்றி
வீண்பேச்சுப் போல நெஞ்சில்
..வியத்தகு ஆசை கொண்டு
ஊண்முழுதும் விரதம் மங்கை
..ஒட்டியே செய்த காலம்
வேண்டாமல் போயே போச்சு..
..பெண்வரம் கேட்க லாச்சு
-
கேட்கலாச்சு குத்தல் பேச்சு
மாமியும் நாத்தியும் பிசாசு
குறை சொல்வர் மூச்சுக்கு மூச்சு
வாய்த்தது களிமண்ணாய் ஆச்சு
மொத்தமாய் நிம்மதி போச்சு
வந்தவளுக்கு வயசுமாச்சு
வாழாமலே வெந்துபோயாச்சு
வீணாகுமோ அவள் பெருமூச்சு
-
பெருமூச்சு சிறுமூச்சு விட்டு விட்டே
…பெரியவளும் ஓடிவந்தாள் என்னைக் கட்டி
விறுவிறுப்பாய் முகமாற்றம் செய்த வாறே
…வேகத்தில் சொல்லிவிட்டாள் குற்றந் தன்னை
சிறுபெண்ணும் முகங்கோணி நெருங்கி வந்தாள்
..தீர்க்கமாகத் தமக்கைபொய் சொன்னாள் என்றே
துறுதுறுத்த கண்களிலே நீரும் ஓட..
..துன்பத்தில் அவள்சொலவும் எடுத்தேன் தூக்கி
பெரியவளே வாயிங்கே எனக்கூப் பிட்டால்
..பிகுபலவும் செய்தவண்ணம் வந்தாள் பின்னர்
தெரியும்ப்பா எப்போதும் குட்டிப் பெண்ணைக்
..திகட்டாமல் சீராட்டிச் செல்வீர் என்று
சிரித்தேன்நான் மனக்கவலை மறந்து போக
…சின்னவளே பெரியவளே நீங்கள் எந்தன்
பிரியாத விழிகளன்றோ சொல்லும் போதில்
…பிரியமான மனைவிகேட்டாள் நாந்தான் யாராம்..?!
-
யாராம் வெல்வது
சக்தியா சிவனா
சிவனென்பது கதை
நம்புபவன் பேதை
-
பேதை எனச்சொல்வீர் பல்விதமாய் என்னிடத்தில்
..பெண்ணே நீயின்னும் வளரத்தான் இல்லையென
வாதை வாலிபத்தில் வாட்டாமல் இருந்திடுமோ
..வஞ்சி உன்னிடமே மையலது கொண்டதுவும்
போதை நெஞ்சினிலே நீர்கொள்ள வேண்டாமே
..பொறுமை மிகக்கொண்டு என்னழகை என்படிப்பை
சீதை போல்குணத்தை எந்தந்தை செல்வத்தை
..சிந்தை கொண்டிடுவீர் சொல்லிடுவீர் பதிலைத்தான்..
பதிலைத்தான் கேட்கின்றாய் அழகாக பாவாய்..
..பார்த்தவிழி மூடாத பேரழகுப் பெண்ணே
நதியைப்போல் நங்கையுந்தன் உடலோடும் நாணம்
..நன்றாகத் தெரிகிறது உன்வார்த்தை தன்னில்
விதிசெய்த கோலமெனச் சொல்லத்தான் செய்வேன்
..விழிமீனால் பேசுகின்ற உன்னிடமே பெண்ணே
மதிவதனங் கொண்டவொரு மங்கையிடம் முன்பே
..மனதைநான் கொடுத்துவிட்டேன் மன்னிப்பாய் பெண்ணே..
-
பெண்ணே சின்னப் பெண்ணே
கண்ணே செல்லக் கண்ணே
விளையாட்டுக்குண்டு விதி
உனக்கு மட்டும் தனி வழி
வென்றுவிடுகிறாய் தாத்தாவை
மெச்சுகிறேன் உன் சமர்த்தை
-
சமர்த்தை
மெச்சிக்கணும்
என்பாள் சித்தி அடிக்கடி
அவள் பேச்சில் அடிபடுவது
சித்தப்பா..
வெண்டைக்காய் இரும்புக் கம்பி
கொத்தவரங்காய் நேராய்க் காயலாம்
வாழக்காய் கருத்திருக்கு
ஆப்பிள் ஒரே புளிப்பு
ஒண்ணு பாத்து வாங்கத் தெரியுதா
மனுஷனுக்கு..
சின்னப் பிள்ளைகளாய்
நாங்கள் பேசாமல் இருந்த காலம் போய்
ஆறாப்பு படிக்கும்போது
ஒரு நாள் சித்தி பையன்
சொல்லியே விட்டான்
ஆ,மாம்மா நீ சொல்றது சரி..
என்னடா சொல்ற
கேட்ட குரலில் கனல்..
பின்ன
சமர்திருந்தா உன்னைக்கட்டியிருப்பாரா
முதலில் விழிசிவந்த சித்தி
அதன் பின்
பேசுவதில்லை அந்த வார்த்தை.
-
வார்த்தை கொட்டும் அருவியாய்
வண்ணங்கள் அதில் மிளிரும்
தடையில்லா அக்காட்டாற்றில்
உருண்டு வரும் கற்பனைகள்
திகட்டாத தூய கற்கண்டுகள்
மொழியின் எண்ணற்ற அழகுகள்
வழங்கும் அரிய பெரிய வரகவிகள்
என் மனம் கவர்ந்த தெய்வங்கள்
-
தெய்வங்கள் எல்லாம் உன்னைத்
.தேடித்தான் அருகில் வந்து
பொய்யேதும் கண்டி டாத
…பூப்போன்ற மெலிய நெஞ்சின்
தொய்வேதும் கொண்டி ராத
..தூய்மைகள் கொண்ட வெண்மை
பெய்திடும் தன்மை கண்டே
..பெருமைகள் கொண்டு நிற்கும்..
குழவியாய் இருக்குங் காலம்
..குறுகுறு விழிகள் கொண்டே
உழன்றிடும் விளையாட் டுக்காய்
.உணர்விலே விஷமம் மட்டும்
கலகலப் பான தன்மை
…கண்களில் கவிதை பேசும்
நலமுடன் இருக்க அன்னை
..நயமுடன் வளர்ப்பாள் உன்னை..
-
உன்னை சுற்றிய உலகம்
உண்மையில் ஒரு பம்பரம்
உற்சாகமாய் அது சுற்றும்
சாட்டை கயிறுன் சுற்றம்
-
சுற்றமும் நட்பும் வந்து
…சுற்றியே நின்றி ருந்து
உற்றநல் லெண்ணங் கொண்டு
…உணர்வுடன் ஆசி கூற
பற்றினேன் உந்தன் கைகள்
…பாவையே சேர்ந்தோம் இன்று
பற்றுடன் இனிதாய்த் தானே
…பக்குவம் பெறுவோம் பாரில்
-
பாரில் தான் காண எத்தனை வேடிக்கை
கிடைக்கப் பெற்றேனொரு வாட்ஸப் வீடியோ
கொண்டை வைத்த பெரிய கிளியொன்று
உடம்பை குலுக்கி குலுக்கி ஜோராய் ஆடுது
பின்னால் ஒலித்த லுங்கி டான்ஸ் பாட்டுக்கு
விந்தை நிறைந்த உலகமிதை வியக்கிறேன்
-
வியக்கிறேன் வெண்ணிலவே உன்னழகை எனச்சொன்னாய்
…வீண்பேச்சா அறியாமல் விழுந்தேனே வலைக்குள்ளே
பயமென்ன பாவைக்கு பார்த்துவிடு விழியிலென்றாய்
…பார்த்ததனால் நோக்கிழந்த பாவியென ஆகிவிட்டேன்
நயத்துடனே தான்சொன்னாய் நங்கைநீ கலங்காதே
..நாயகனாய் நான்வருவேன் என்றெல்லாம் நவின்றிடவும்
சுயமிழந்தேன் சொக்கியுனை நெஞ்சினிலே தான்வைத்தேன்
…சொல்லாமல் போனவிதம் மன்னவனே நானறியேன்..
-
நானறியேன் உலகம் செல்லும் திசை
சிறு வயதில் படித்தேன் பூகோளத்தில்
கிழக்கே ஜப்பானில் நாள் பிறக்கிறது
மெதுவாய் மேற்கும் கண் திறக்கிறது
கடிந்து விரையும் நவீன வான ஊர்திகள்
விரலால் நொடியில் தொலைதொடர்புகள்
கிழக்கு மேற்கு பார்க்கவேண்டாம்
தெற்கு வடக்கு தெரியவேண்டாம்
கிராமமாய் சுருங்கிய கோளமிதில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மெய்யானது மூத்த தமிழன் வாக்கு
வேகமிது கொஞ்சம் அச்சமாயிருக்கு
-
அச்சமா இருக்குதுன்னு அகலமாய் விழிகாட்டி
…அருகேதான் துள்ளிவந்து அணைச்சது நினைப்பிருக்கா
துச்சமா நினைப்பேன்னு தூக்கலாய்ப் பார்வையொண்ணு
..சும்மாதான் மாமான்னு சோடிச்ச நினைவிருக்கா
மிச்சமா தரமாட்டேன்னு மலங்கவே முழிச்சவண்ணம்
..மீண்டுந்தான் அழுந்திமுத்தம் பதிச்சியே நினைப்பிருக்கா
சொச்சமாய் இடிமழைப்போது கூட்டுதே ஒன்நெனப்ப
.. தொக்கித்தான் நிக்குதுபுள்ள நெஞ்சிலுன் நெனப்புமட்டும்
-
நெனப்புமட்டும் குமரின்னு கும்மாளமா
குத்துது குடையுது குறுக்கும் மூட்டும்
பத்து நாள் மகன்கள் வீட்டில் கூடியாடி
இப்பாடு என்றால் அக்கரை போவதெப்படி
அமெரிக்க மகளுடன் குலவுவதெப்படி
மனம் குதித்தாலும் கடுப்பு என்னுடம்பு
-
என்னுடம்பு என்னழகு என்றெல்லாம் தான்நினைத்து
..மென்னுடம்பை புண்ணாக்கல் நியாயமா - அடி
என்கனவை நீகரைக்க லாகுமா
வெண்ணிலவு மிகவளர்ந்து முழுநிலவாய் ஆவதுவும்
.வேகமாகத் தேய்வதுவும் இயற்கையே - சகி
பெண்ணிலவு நீமறக்க லாகுமா
சொன்னதுயார் செயற்கையிலே அழகெல்லாம் மிளிருமென
..சொல்லிவிடு என்னினிய பைங்கிளி - பின்
மின்னலெனக் கேட்டிடுவேன் அவரையே..
வண்ணமிகு இதழைவிட மழைத்துளியாய் தாமரையில்
..வக்கணைகள் செய்யுமிதழ் பிடிக்குமே - சகி
அன்னநடைப் பெண்ணுனக்குத் தெரியுமே!
-
தெரியுமே தெள்ளத்தெளிவாய்
சமுதாயத்தின் மேடுபள்ளங்கள்
அலமாரி நிறைக்கும் சேலைகள்
இரண்டாம் முறை உடுத்த அலுப்பவை
மாற்றுத் துணியில்லா அபலைகள்
ஜனநாயகத்தின் கொடிய அவலங்கள்
-
அவலங்கள் எல்லாமே அடியோடுதான்
..அவனியிலே எப்போதும் ஒழிந்திட வேண்டும்
புவனமிது பூலோகம் சொர்க்க மென்றே
…புவியதுவும் சீக்கிரமாய் மாறவேண்டும்
அவதிமிகும் கொடியநோய்ப் பேய்களெல்லாம்
…ஆர்ப்பட்ட மிட்டலறி ஓட வேண்டும்
நவதான்யம் மற்றுபல செல்வமெல்லாம்
..நரருக்கு அருள்புரிவாய் சக்தி யம்மா
-
சக்தியம்மா ஊறுதம்மா
உச்சி முதல் பாதம் வரை
பிடித்த வேலைகள் இப்போது
பிடித்த சந்திப்புக்கள் இன்று
சவாலான சாதனைகள் பல
இருக்க தினமும் நல்ல நாள்
-
நல்லநாள் பார்த்திடவா என்று கேட்டால்
…நானென்ன சொல்லிடுவேன் அப்பா உங்கள்
வல்லமை நானறிவேன் வெளியு லகத்தில்
…வாகான தொடர்புகளும் தெரியு மென்றால்
பலமென நீர்நினைக்கும் விஷய மெல்லாம்
…பணத்தோடு சேர்ந்திருக்கும் படிப்பு என்றும்
அழகுடன் இருக்கின்ற மனமும் சேர்ந்த
..அற்புதமாம் நண்பனெனப் பார்ப்பீர் நீரே..
-
நீரே பகுத்தறிய வேண்டும்
நேரே மேலே கீழே உள்ளே
பரந்த மனதுடன் பார்ப்பீர்
யானை தடவிய குருடன்
ஓர் அரைகுறை அறிவாளி
தேவை நமக்கு முழுமதி
-
முழுமதி சிரிக்கும் நேரம்
…மூக்கிலே நகையும் மின்ன
சிலுசிலுக் காற்றும் மேனி
;...சிலிர்த்திட வைத்து உன்னைத்
தழுவிட நீயும் கொஞ்சம்
..தள்ளியே நின்று கொண்டே
குலுங்கிடச் சிரிப்ப தென்ன
..கூறிடு உண்மை தன்னை
காற்றினில் கலையும் கேசம்
..காரணம் தெரியும் அன்பே
கூற்றுவன் போலக் கண்கள்
.குட்டியாய் முகத்தில் தாடி
தீற்றலாய் நெற்றி வேர்வை
..திரிந்துதான் கன்னம் வீழ
சீற்றமும் கொண்ட வில்லன்
…சீரிய தோற்றம் கண்டேன்..
-
கண்டேன் மோடி மஸ்தான் வேலையென
அமெரிக்காவில் என் சுற்றம் நகைப்பதிலே
ஐபோன் ஐபாட் லாப்டாப் ஏதேனும் வேணுமா
ஒபாமாகிட்ட குடுத்தனுப்புறேன் என்கிறாள்
என் மகள் அங்கிருக்கும் தங்கை மகளிடம்
அவரிடம் பக்கோடா முறுக்கு வாங்கிவர
சொல்லியிருக்கேன் உனக்கென்ன வேணும்
என வினவ கோகோ மிட்டாய் தேன் மிட்டாய்
அவள் பதில் வருகிறது சும்மா பேசிவிட்டு
போகிறவர் செய்யட்டும் இதை என வாதம்
பிளேன் காலியாய் இருக்கும் நானும் போறேன்
அவருக்கு ஆலோசகராய் என்கிறார் மாப்பிள்ளை
-
மாப்பிள்ளை இவரென்று தந்தை சொல்ல
.மணப்பெண்ணும் தலையாட்டும் காலம் போச்சு
வாய்ப்பில்லை இன்றிருக்கும் சூழல் முன்னர்
..வஞ்சியர்கள் தானெழுப்பும் கேள்வி முன்னே
ஆய்ந்தீரா யாரென்று அப்பா பின்னும்
..அவருடைய படிப்பென்ன மாதம் என்ன
ஏய்ப்பாரா என்றெல்லாம் பல்வி தமாக
..ஏந்திழையர் கேட்கின்றார் இக்கா லத்தில்.
-
இக்காலத்தில் சொர்க்கத்தின் சாயல்
கடிகாரமும் நாட்காட்டியும் பாராமல்
உறங்க விழித்திருக்க தோன்றாமல்
அவசரமும் அவதியும் இல்லாமல்
தன சின்ன வட்டத்தை தாண்டாமல்
நீடிக்கட்டும் ஒய்வு காலம் கசக்காமல்
-
கசக்காமல் இருப்பதற்குப் பாகற் காயை
..கடகடென்றே உப்புநீரில் ஊறப் போட்டு
பதமாக வெளியெடுத்து பேப்ப ரின்மேல்
..பக்குவாமய்ப் போட்டுவதைக் காய வைத்து
இதமாகச் சாம்பாரில் தானா கத்தான்
…இச்சையுடன் போட்டுவைப்பாள் பாட்டி அன்று
வசம்பாய்த்தான் கசக்குமென்று வாயிலிட்டால்
..வழுக்கிசெலும் சுவையாக வயிற்றுக் குள்ளே
-
வயிற்றுக்குள்ளே பகாசுரன்
அது வளரும் பிள்ளைகள்
பசியெடுக்கா பருவமொன்று
அதன் பேர்தான் வயோதிகம்
-
வயோதிகம் மெல்ல நடக்கும்
இளமை வேகமாய் ஓடும்
வயோதிகம் தேம்பி அழ வைக்கும்
இளமை கெக்கலி கொட்டிச் சிரிக்கும்
வயோதிகம் திரும்பிப் பார்க்கும்
இளமை முன்னே பார்க்கும்
வயோதிகம் சேச்சே
இளமை ஆஹா..
ஆனால் இளமையில் இல்லாதது
வயோதிகத்தில் உண்டு
அது
அனுபவம்…
-
அனுபவம் இருக்காம் பெருசுகளுக்கு
முடி இல்லாதவனுக்கெதுக்கு சீப்பு
பல் போனவனுக்கெதுக்கு பக்கோடா
தான் பிடித்த முயலுக்கு மூணு கால்
அப்படித்தான் செய்வேன் போடா
யதார்த்தம் புரியாத தலைமுறை
அனுசரனையில்லா பிடிவாதம்
அகண்ட உலகமிதில் இக்காலத்தில்
அணுவளவும் உதவாத அனுபவம்
பார்த்து அனுபவிப்பவர்தான் பாவம்
-
பாவந்தேன் இல்லேங்கல
பின்ன
நெதக்கும் இந்தக் குடிகுடிச்சுட்டு
புச்சு புச்சா
வெஞ்சனம் வேணுமின்னு
துட்டு கொடுக்காம
ஆர்ப்பாட்டம் பண்ணா
நா இன்னா செய்வேன்
அது இன்னா..பொரிமை
அதுக்கும் லிமிட் உண்டுல்ல
இன்னிக்கு வுட்டேன் பாரு ஒரு அடி
தாவாங்கட்டைல
சுருண்டுடுச்சு
கொஞ்சம் முழிச்சுட்டு
சர்த்தான் புள்ள நாளக்கி பாக்கலாம்னு
சொல்லிப்போட்டு
பாயப்போட்டு தூங்கிடுச்சு
குடிச்சுட்டு கொட்டிக்காம தூங்கினா
கொடல் என்னத்துக்காவாங்காட்டியும்
எய்ப்பினா ம்க்கும் எந்திரிக்கலையே
சரி சரி
நாளைக்கு வெரசா எந்திருச்சு
மார்க்கெட் போய் மீனு வாங்கி
இட்லி மாவும் அய்ர்வூட்ல வாங்கி
இட்லியும் மீன்கொயம்பும் கொடுக்கலாம்
பாவி மனுஷனுக்கு…
இன்னாங்கற…..
-
இன்னாங்கற நா நெதமும் நடக்கணும்
என்னோட மூட்டுவலி மோசமாகாதுங்கற
பொத்தாம் பொதுவா சொல்லுற பத்தியம்
ஆச்சே எனக்கு ஆகாத வைத்தியம்
ஏட்டு சுரக்கா கறிக்கு உதவுமா தம்பி
நான் விழுந்து கெடுக்கவா அதை நம்பி
மூச்சுதான் வாங்குது இரைக்குது
இங்கிட்டும் அங்கிட்டும் தள்ளுது
நிமிர்ந்து நடக்கவே நடுங்குது
நாலு சுவத்துக்குள்ளே இக்கிழவி
புத்திசாலி பூனை நடையழகி
-
நடையழகி தான்
ரெட்டைத் தெரு நாலாவது வீட்டு சுகந்தி
கொஞ்சம் தேர்
கொஞ்சம் தென்றலில் அடிபடும் ரோஜா
கொஞ்சம் சீறிச் செல்லும் சிறுத்தை
கொஞ்சம் தலைகுனிந்த சிந்தனை
கொஞ்சம் நேர்ப்பார்வை சுருள்முடி நெற்றியில் தவழ
விடலை வயதில்
வக்கீல் வீட்டு ராதாகிஷணுடன்
அந்தத் தெரு போனால்
பார்த்திருக்கிறோம் ரசித்திருக்கிறோம்.
இன்னிக்கு எப்படி நடப்பாடா..
ம்ம் வாத்து மாதிரி இருக்குமா என்றால்
செல்வா முறைப்பான்
அவனுக்கு அவள் மேல் கண்
எங்கள் வர்ணிப்புகள்
அவளுக்குத் தெரியுமாஎன்ன
எங்களுக்குத் தெரியாது
சூழ் நிலையில்
திருமணமாகி
அவள் வீட்டிலிருந்து
கிளம்பும் போதும்
நாங்கள் எதிர்வீட்டிலிருந்தோம்..
ம்ம் எங்கடா போறா
எங்கயோ விஸ்கான்சின்னாம்
எங்க இருக்கு
ஆஸ்த்ரேலியா என்றான்
முகப்ப்ரகாச செல்வா
என்னிடம்கிள்ளு வாங்கினான்
அது அமெரிக்காடா..
வெளியில் வந்தவள்
காரில் ஏறாமல் எங்களைப் பார்த்து
சாலையை க் கடந்து வந்து
“என்னை மறக்காதீங்கடா”
பேசிய முதலும் கடைசியுமான வார்த்தை
திரும்பிப் புள்ளிமான் துள்ளல் நடை
காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.
-
சென்றுவிட்டாள் வேறகம்
வென்றுவிட்டாள் புது களம்
விம்மி புடைக்கும் தாய் மனம்
சுகமாய் சோகமாய் ஒரு கனம்
-
கனமாய்த் தான் இருக்கும்
ஒவ்வொரு முறை
அக்கா வரும்போதும்
அவருடைய பெட்டி..
வேணாண்டா எனப் பதறப் பதற
காரிலிருந்து
தூக்கமுடியாமல் தூக்கி
வீட்டினுள் கொண்டு வைப்பது
ஒரு வித சுகம்..
அவரைப் பார்த்த மகிழ்வுடன்
எப்போது பெட்டி திறப்பார்
என்ற ஆவலும் கூடும்..
இந்தா இந்த ப்ளாக்ல டாட் வெச்ச
சட்டை உனக்கு
என
வந்த மாலைப்பொழுதில் நீட்டும் போது
பரம் குஷி..
ஒரு மாதம் ஓடிவிட
கிளம்பும் போது
பார்த்துப் படிடா..என்ன
அடுத்த வருஷம் தான் வருவேன்..
ஓகே என்ன வேணும் எழுது
ஒண்ணும் வேணாம்க்கா
ச் அப்படிச் சொல்லாதே
எழுது கொண்டாரேன்..
வாசிலில் கிளம்பி காரிலேறி
விமான நிலையத்துள் விட்டுத் திரும்ப
கனம் மறுபடியும் சூழும்
மனதுள்..