Thankyou Sir
warm welcome .
I am waiting
Printable View
http://www.dinathanthiepaper.in/3132...8567-MDS-M.jpg
31.03.2016 - இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் நிழற்படம் தினத்தந்தி ஈபேப்பரிலிருந்து...
முத்தையன் அம்மு சார்,
'இல்லற ஜோதி' பதிவுகள் பலே ஜோர். பாராட்டுக்கள். அற்புதமான படத்தின் அருமையான பாட்டு புத்தகத்தின் கதைச் சுருக்கம். நன்றிகள் ஆயிரம் தங்களுக்கு
இதோ நான் முன்னம் எழுதிய 'இல்லற ஜோதி' படத்தின் ஆய்வினை மீள்பதிவாக இங்கு அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதோ....
'இல்லற ஜோதி'
http://i2.ytimg.com/vi/4g-4V2TjqA8/0.jpg
வெளியான நாள் - 09.04.1954
கதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன்
'அனார்கலி' நாடக வசனம் – மு.கருணாநிதி
இசையமைப்பு – ஜி.ராமநாதன்
தயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ்
இயக்கம் – ஜி.ஆர். ராவ்
மேற்பார்வை – டி.ஆர்.சுந்தரம்
நடிகர் திலகத்தின் பதினோராவது காவியம். நிஜமாகவே இப்படம் ஒரு காவியம்தான்.
கதை:
நெட்டிலிங்கம் (கே.ஏ.தங்கவேலு) ஒரு ஏழை குமாஸ்தா. அவர் மனைவி அனந்தா (சி.கே.சரஸ்வதி). இருவருக்கும் மனோகர் (நடிகர் திலகம்) என்ற மகன். வாலிபன். எந்த வேலையும் பார்க்காமல் சதா சர்வ காலமும் நாடகம், கதை, கவிதை என்று கலைக்காகவே வாழும் கலாரசிகன். மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன். ஆனால் படிப்பறிவில்லாத அவன் தாய் தந்தையர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு. அவன் பெற்றோர் அவன் நிலைமை கண்டு கவலை கொள்கின்றனர்.
கல்யாணமானால் சரியாகி விடுவான் என்று சொந்தத்தில் காவேரி (ஸ்ரீரஞ்சனி) என்ற பெண்ணைப் பார்த்து அவனுக்கு திருமணமும் செய்து வைக்கின்றனர். ஆனாலும் மனோகரனின் குணம் மாறவில்லை. மனைவியைக் கூட கண்டு கொள்ளாமல் காகிதமும், பேனாவுமாக நாடகம், கவிதை என்று கிடக்கிறான். மனைவி காவேரி கண்ணீர் வடிக்கிறாள்.
மருமகள் நிலைமை கண்டு மனோகரனின் பெற்றோர் கவலை கொள்கின்றனர். மனோகரனுக்கு பைத்தியம் என்றே முடிவு கட்டி தேவையே இல்லாமல் அவனுக்கு வைத்தியமும் பார்க்கின்றனர். நெட்டிலிங்கமும் தன் குமாஸ்தா வேலையை விட்டு விடுகிறார். அதனால் மனோகரன் ஒரு கம்பெனியில் கணக்காளனாக விருப்பமில்லாமல் பணிபுரிகிறான்.
காவேரி ஒருநாள் தன் கணவன் சேமித்து வைத்துள்ள கதை, நாடகம், கவிதைகளை அவனறியாமல் பழைய பேப்பர்காரனிடம் போட, அதில் ஒரு பேப்பர் பெருமாள் (பெருமாள்) என்ற புரபொசரிடம் கிடைக்கிறது. அவர் மகள் சித்ரலேகா (பத்மினி) மிகுந்த கலாரசிகை. அந்த பேப்பரில் சிறப்பான கவிதை எழுதப்பட்டிருப்பதைக் கண்டு சித்ரா மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமும் அடைகிறாள். புரபொசர் மனோகரனைக் கண்டு பிடித்து வரச் செய்து அவனைப் பாராட்டி அவனை ஒரு நாடகமும் எழுதப் பணிக்கிறார், அவனுக்கு பலவகையிலும் உதவி செய்கிறாள் சித்ரா.
சித்ராவும், மனோகரும் சேர்ந்து 'அனார்கலி' என்ற நாடகத்தில் நடிக்கின்றனர். மனோகரின் 'சுகம் எங்கே' என்ற நாடகத்தை புத்தகமாக வெளியிட வேண்டிய உதவிகள் செய்கிறாள் சித்ரா. புத்தகம் அமோகமாக விற்பனை ஆகிறது. புத்தகத்திற்கான ராயல்டி தொகையாக நிறைய பணம் பதிப்பகத்தார் மூலம் மனோகருக்குக் கிடைக்கிறது. மனோகரை வேலையை விடச் சொல்லி அழைத்து வருகிறாள் சித்ரா. அவனுக்கு ஒரு வசதியான பங்களா ஒன்றைத் தந்து அதில் தங்கி நிறைய எழுதச் சொல்கிறாள். மனோகரும் நிறைய புத்தகங்கள் எழுதிப் புகழ் பெறுகிறான். பணம் சம்பாதிக்கிறான்.
இப்போது மனோகர் பெரும் செல்வந்தன். கார், வீடு, வசதி என்று அருமையான வாழ்க்கை. மனோகருக்கும், காவேரிக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கிறது.
http://3.bp.blogspot.com/-B_I0HEgXBz...lara+Jothi.JPG
கலைப்பித்து கொண்ட மனோகரும், சித்ராவும் ஒன்றுபட்ட கலா ரசனையால் தங்களை அறியாமல் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். செய்வது தவறென்று தெரிந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக விரும்புகிறார்கள். சித்ரா மேல் கொண்ட காதலால் மனைவி காவேரியை வெறுக்கிறான் மனோகர்.
சித்ராவின் முறைமாப்பிள்ளை மோகன் (எஸ்.ஏ.அசோகன்) சித்ராவை விரும்புகிறான். ஆனால் சித்ரா அவனை வெறுக்கிறாள். மனோகர் சித்ரா காதல் காவேரிக்குத் தெரிய வந்து துடிதுடித்துப் போகிறாள் அவள். அதே போல் சித்ரா மனோகரை விரும்புவதை அறிந்து கொண்ட மோகன் சித்ராவைக் கண்டிக்கிறான். அது தவறென்று எடுத்துக் கூறுகிறான். அவனை எடுத்தெறிந்து பேசுகிறாள் சித்ரா.
சித்ரா, மனோகர் காதலை காவேரியிடம் வந்து எடுத்துச் சொல்கிறான் மோகன். தன் நிலைமையும், காவேரி நிலைமையும் மோசமான சூழ்நிலையில் இருப்பதை எடுத்துரைக்கிறான். இரு குடும்பங்களும் இதனால் சந்திக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறுகிறான். ஆனால் எல்லாம் தெரிந்தும் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசி அவனை அனுப்பி விடுகிறாள் காவேரி.
மனோகருடன் இதுபற்றி பேசுகிறாள் காவேரி. ஆனால் சித்ரா மேல் கொண்ட கண் மூடித்தனமான காதலால் அவளைத் துச்சமாக மதித்து பேசுகிறான் மனோகர்.
இரு குடும்பங்களிலும் புயல் வீசுகிறது. சித்ராவும் மனோகரும் வீட்டை விட்டு கிளம்பி ஓடிப் போக முடிவு செய்கின்றனர். இதைத் தெரிந்து கொண்ட காவேரி சித்ராவிடம் ஓடி வருகிறாள். தன் கணவனைத் தனக்கே தந்து விடும்படி அவள் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்கிறாள். ஆனால் மனோகர் மீது கொண்ட தீவிரக் காதலால் சித்ரா முதலில் மறுக்கிறாள். தங்கள் காதல் 'இனக் கவர்ச்சியானால் உண்டாக வில்லை... அழகைக் கண்டு ஏற்படவில்லை....கலை ரசனையால் உதித்த காதல் அது' என்று கூறுகிறாள். இதனால் வேதனையுறும் காவேரி 'தன் கணவனே இனி தனக்கில்லை... இனி அவன் கட்டிய தாலி எதற்கு?' என்று தன் தாலியை கழற்ற எத்தனிக்கிறாள். அதைக் கண்டு பதைபதைக்கும் சித்ரா காவேரியிடம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதோடல்லாமல் இனி தான் மனோகரைச் சந்திப்பதில்லை என்று சத்தியமும் செய்து தருகிறாள். தன் தந்தையின் இஷ்டப்படி வேறு வழி இல்லாமல் மோகனை திருமணம் செய்யவும் மனமே இல்லாமல் சம்மதமளிக்கிறாள் சித்ரா.
சித்ரா சொன்னபடி தன்னுடன் கிளம்பி வராமல் போனதால் அவளைத் தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் மனோகர். ஆனால் சித்ரா தான் காவேரியிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவனை சந்திக்காமல் தவிர்த்து விடுகிறாள். தன் காதல் வாழ்வு சிதைந்து போனதற்காக அனலிடைப் புழுவாகத் துடிக்கிறாள் அவள். சித்ராவைச் சந்திக்க முடியாமல் குழப்பத்துடன் திரும்பும் மனோகர் எதிர்பாராவிதமாக மோகனின் காரில் பலமாக அடிபடுகிறான். மரணப் படுக்கையிலும் சித்ரா பெயர் சொல்லிப் புலம்புகிறான். டாக்டர் சித்ரா வந்தால்தான் மனோகர் பிழைப்பான் என்று கூறுகிறார்.
தன் கணவன் உயிர் காக்க திரும்ப சித்ராவிடம் ஓடோடி வருகிறாள் காவேரி. தன் கணவனுக்கு அவள்தான் மருந்து என்று சித்ராவை கணவனைச் சந்திக்கும்படி அழைக்கிறாள் காவேரி. ஆனால் சித்ரா தான் செய்து கொடுத்த சத்தியத்தின்படி வர மறுக்கிறாள். தன் வாழ்வு சீர்குலைந்ததற்கு காரணம் காவேரிதான் என்று அவளை வாய்க்கு வந்தபடி பேசி ஆத்திரத்தில் அடித்தும் விடுகிறாள். மனோகரை மறக்கவும் முடியாமல், அவனை பார்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாள் சித்ரா. நடைபிணமாய் நடக்கிறாள்.
மோகன்தான் வேண்டுமென்றே காரை ஏற்றி மனோகரைக் கொலை செய்ய முயன்றான் என்றெண்ணி அவன் மீது கோபம் கொண்டு தனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தைத் தன் தந்தையிடம் சொல்லி நிறுத்தச் சொல்கிறாள் சித்ரா. விவரம் புரியால் விழிக்கும் புரபொசரிடம் சித்ராவுக்கு மனோகர் மேல் உள்ள காதலை கூறி அவரைக் கோபப் படுத்துகிறான் மோகன். புரொபசர் மிகுந்த கோபத்துடன் மனோகர் வீடு சென்று காவேரியிடம் மனோகர் செய்த காரியத்தை சொல்லி சீறுகிறார்.
காவேரி அவரிடம் நடந்த தவறுகளுக்கு தானும் புரபொசருமே காரணம் என்று கூறுகிறாள். 'ஆரம்பத்திலேயே சித்ராவையும், மனோகரையும் இரு குடும்பத்தாரும் கண்டித்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது' என்று கண்ணீர் சிந்துகிறாள். இப்போது எல்லை மீறி விட்டதாகவும், சித்ராவும், மனோகரும் தங்கள் காதலுக்காக தங்கள் இருவரின் உயிரையே அர்ப்பணிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டதால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து மணமுடிக்கவும் புரபொசரிடம் மன்றாடுகிறாள் அந்த உத்தம மனைவி.
மனைவி என்ற தன் ஸ்தானத்தையே இழக்கத் துணிந்து தன் கணவனின் காதலை நிறைவேற்ற, அவன் உயிரைக் காபபாற்ற, அவனுடைய காதலியின் தந்தையிடம் மன்றாடும் அந்த மாசில்லா மாணிக்கத்தின் உணர்ச்சிகரமான உரையாடல்களை மரணப் படுக்கையில் இருந்து கேட்கும் மனோகர் மனம் திருந்துகிறான். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறான். தன் மாதரசியிடம் மன்னிப்புக் கேட்கிறான். இதுநாள்வரை தன் மனைவியைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்று புலம்புகிறான். இனி சித்ராவை தன் தங்கையாக நினைப்பேன் என்றும் புரொபசரிடம் உறுதி கூறுகிறான்.
இதற்கும் மனோகரனின் நிலைமை கேட்டு துயருறும் சித்ரா இனி வாழ வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். தன் காரை எடுத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள வேகமாக செல்கிறாள். அவளைத் தேடி வரும் மனோகர் தன் காரில் அவளைப் பின் தொடர்கிறான். ஆனால் சித்ரா காரை மலைப் பாதையில் மோதி அடிபடுகிறாள்.
மனோகர் அவளைக் காப்பாற்றி மோகனுக்கும், அவளுக்கும் இடையே வந்து குழப்பம் விளைவித்ததற்காக மன்னிப்புக் கோருகிறான். மேலும் சித்ராவை மோகனை மணந்து கொள்ளும்படியும் வேண்டுகிறான். சித்ராவும் முழுமனதுடன் சம்மதிக்கிறாள். குழப்பங்கள் முடிவுக்கு வந்தன. சித்ராவைத் தங்கையாக ஏற்றுக் கொள்கிறான் மனோகர்.
பஞ்சும் நெருப்புமாக பற்றிக்கொண்ட கணவன் மனோகர், சித்ரா காதலை தக்க தருணத்தில் காவேரி நீராய் வந்து அணைத்து, இருவரையும் நல்வழிப்படுத்தி, இரு குடும்பங்களும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர இல்லற ஜோதியாய்த் திகழ்கிறாள் காவேரி.
கலையின் மீது தீவிர காதல் கொண்ட, ஒரே ரசனையில் ஊறிய இரு உள்ளங்கள் தங்கள் சொந்தங்களை மீறி முறையற்ற காதலை அறியாமல் புரிவதால் அதனால் இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை அற்புதமாகப் பறை சாற்றுகிறது இந்தப் படம். கலை மட்டும் வாழ்க்கையல்ல...கலை ரசனை மட்டுமல்ல... எல்லாவற்றையும் மீறி 'மாசற்ற அன்பு என்ற ஒன்று இருக்கிறது.... அது அனைத்தையும் வெற்றி கொள்ளும்' என்பதை அருமையாக உணர்த்துகிறது இப்படம்.
முள்ளின் மேல் போட்ட சேலையை எடுப்பது போன்ற துணிச்சலான கதை. அதை அற்புதமாக அதைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜி.ஆர்.ராவ். அதுவும் அந்தக் காலத்திலேயே. இயக்கம் மேற்பார்வை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். பின்னாட்களில் பாலச்சந்தர் அவர்கள் இயக்கி பெருவெற்றி பெற்ற சிந்து பைரவி' படத்திற்கு இப்படம் முன்னோடி எனலாம்.
மனோகராக நடிகர் திலகம்.
http://i1.ytimg.com/vi/w3Bl1TQn2JA/hqdefault.jpg
மனைவிக்கும் காதலிக்கும் இடையே திண்டாடும் பரிதாப பாத்திரம் நடிகர் திலகத்திற்கு. தன் கலைரசனை பெற்றவர்களுக்கும், ஏன் மனைவிக்கும் கூட தெரியவில்லை என்று வேதனைப்படுவதாகட்டும்...
தன் ரசனைக்கேற்ற ரசிகை கிடைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் வசம் இழக்கும் பாங்கைக் காட்டுவதில் ஆகட்டும்....
காதலியுடன் சேர்ந்து நடிக்கும் 'அனார்கலி' நாடகத்தில் சலீமாக தூள் பரத்துவதாகட்டும்...
காதலி தன்னை மன்னர் அக்பர் பாதுஷாவின் மகன் என்று அறிந்த போது அவளை சமாதானப் படுத்துவதாகட்டும்...
அனார்கலி உயிருடன் சமாதியில் வைக்கப்பட்ட பிறகு நெஞ்சு துடிக்க காதல் மகத்துவத்தைப் பேசி அவள் மேல் தான் கொண்டிருந்த அன்பை உணர்ச்சிகளின் பிழம்பாய் வெளிப்படுத்துவதாகட்டும்....(அனார்கலி உயிருடன் சமாதி வைக்கப்பட்ட பிறகு அந்த சமாதியின் அருகே குரல் வெடித்து அவர் கதறும் வசனங்கள் அருமையிலும் அருமை. குரல் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். 'மொகல்-ஏ -ஆசம்' இந்திப்படத்தில் படம் முழுக்க பொம்மை போல் சலீமாக நடித்த திலீப்குமார் எங்கே? பத்தே நிமிடங்களில் 'அனார்கலி' ஓரங்க நாடகத்தில் நம்மைக் கட்டிப் போட்ட நடிகர் திலகம் எங்கே?)
'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' கனவுப் பாட்டில் திருவிளையாடல் 'பாட்டும் நானே... பாவமும் நானே' சிவாஜிகள் போல இரு சிவாஜிகள் வயலின் மற்றும் வீணை வாசிக்கும் அழகாகட்டும்...
'களங்கமில்லாக் காதலிலே' பாடலில் அழகு சலீமாக பத்மினியுடன் சேர்ந்து நம் உள்ளங்களைக் கிறங்கடிப்பதாகட்டும்...
காதலி மீது உள்ள வெறியால் மனைவியை வெறுத்து ஒதுக்கும் வெறுப்பை சம்பாதிப்பதாகட்டும்....
இறுதியில் மனைவியின் தூய்மையான அன்பைப் புரிந்து கொண்டு அவளிடம் கதறி தன் குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதாகட்டும்...
சிவாஜி சிவாஜிதான் என்று தன் திரைப்பட வரலாற்றில் பதினோராவது முறையாக நிரூபிக்கிறார் இந்த அற்புத திறமைகள் கொண்ட மாமனிதர்.
கலைவெறி கொண்டவர்கள் குடும்பம், அது, இது என்று எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பார்கள் என்பதை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார் இந்த நடிப்பின் இமயம். தன் கவிதையை முதன் முதலாக பத்மினி ரசித்துப் பாராட்டும் போது அந்த முகத்தில் பரவும் சந்தோஷ ரேகைகளைப் பார்க்க வேண்டுமே! தங்கவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளிலும் தான் திலகம்தான் என்று நிரூபிக்கிறார்.
நடிகர் திலகத்திற்குப் பிறகு நம் மனதில் இடம் பிடிப்பவர்கள் சித்ரலேகாவாக வரும் பத்மினியும், காவேரியாக வரும் ஸ்ரீரஞ்சனியும்.
பத்மினி
http://i1.ytimg.com/vi/L-zuhcyBblY/hqdefault.jpg
நல்ல கலாரசிகையாக நடிகர் திலகத்திடம் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் வயப்படுவதும், அதைத் தட்டிக் கேட்கும் மோகனான அசோகனை அலட்சியப்படுத்துவதும், ஸ்ரீரஞ்சனி நடிகர் திலகத்தை விட்டுத் தரும்படி கெஞ்சும் போது விட்டுக் கொடுத்தால் காதல் போய்விடுமே என்றும், விட்டுக் கொடுக்காவிட்டால் பழிபாவத்திற்கு ஆளாக வேண்டுமே என்றும் இரண்டு மன நிலைகளில் குழம்புவதும், கணவனின் உயிருக்காக ஸ்ரீரஞ்சனி மன்றாடும் போது தன் நிலைமையை எண்ணி எரிமலை போல் வெடித்து குமுறுவதும் 'பலே பத்மினி' என்று சொல்ல வைக்கிறது.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போன்று நடிகர் திலகத்துடன் அழகு சுந்தரி அனார்கலியாக வெகு பொருத்தமாக ஜோடி சேர்ந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, உறங்க விடாமல் செய்கிறார் பத்மினி. ராஜா மான்சிங்கிடம் தன் காதலை விட்டுத் தர முடியாது என்று ஆத்திரம் பொங்கக் கூறும் போதும், ஒரு சிப்பாயாக தன்னை ஏமாற்றிய சலீமின் மீது பாயும் பாய்ச்சலிலும் தான் நாட்டியத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் பேரொளி என்று நிரூபிக்கிறார் பத்மினி. நடிகர் திலகத்திற்கு சரியான இணை. பாத்திரத்தைப் புரிந்து கொண்டு பட்டை கிளப்புகிறார் பத்மினி.
ஸ்ரீரஞ்சனி
https://i.ytimg.com/vi/umcQYLdUPHg/hqdefault.jpg
'பராசக்தி'யில் குணசேகரனின் தங்கை கல்யாணியாய் நம் நெஞ்சில் நிலைத்தவர் 'இல்லற ஜோதி' யில் இல்லற ஜோதியாக வெளுத்து வாங்குகிறார்.. இவருக்கு இத்தகைய வேடம் அல்வா சாப்பிடுவது போல, குடும்பப் பாங்கான முகம் வேறு இவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. தன் கணவனை விட்டு விடும்படி பத்மினியிடம் மன்றாடும் போது கல்லையும் கரைய வைக்கிறார். கணவன் காலடியில் குழந்தையை போட்டு இதை விட சிறந்த கலை கிடையாது என்று வாதாடும் கட்டம் அற்புதம். இவர் சிரித்துப் பாடும் அபூர்வ பாடல் காட்சியும் இப்படத்தில் உண்டு. (எல்லாப் படத்திலேயும் அழுகாச்சி ரோல்களே பண்ணியவர்)
மோகனாக அசோகன் இளமையாக வருகிறார். வில்லனா அல்லது நல்லவனா என்று சற்றே குழப்பமான பாத்திரம். நடிகர் திலகத்தின் தந்தையாக 'டணால்' தங்கவேலு 'மிஷ்டேக்' என்று அடிக்கடி கூறி நம்மை விலா நோக சிரிக்க வைக்கிறார். நடிகர் திலகத்திற்கு தந்தையாக அவர் அந்த இளம் வயதில் 'பணம்' படத்திற்குப் பிறகு நடித்தார். அவர் மனைவியாக சி.கே.சரஸ்வதி வழக்கத்திற்கு மாறாக நல்ல பெண்மணியாக, தங்கவேலுவின் மனைவியாக வருகிறார்.
'அன்பு' படத்திற்குப் பிறகு 'அனார்கலி' ஓரங்க நாடகம் இப்படத்தில் இடம் பெற்று இன்றுவரை அனைவரது நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்று திகழ்கிறது. கே.கே. சௌந்தர் என்ற குணச்சித்திர நடிகர் இப்படத்தில் இடம் பெறும் 'அனார்கலி' நாடகத்தில் ராஜா மான்சிங்காக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.
மற்றும் கே.கே.பெருமாள், திருப்பதிசாமி, கொட்டாப்புளி, ராமாராவ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
'கல்யாண வைபோக நாளே'
'பார் பார் பார்... இந்த பறவையைப் பார்' (பத்மினியின் அற்புத நடனத்தில்)
'சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே'
'பெண்ணில்லாத ஊரிலே'
'களங்கமில்லா காதலிலே' ('அனார்கலி' நாடகத்தில் சலீம், அனார்கலி காதல் பாட்டு)
'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' (நடிகர் திலகம் இருவராக வீணை, மற்றும் வயலின் வாத்தியங்களை வைத்து இசைக்கும் அற்புதம்)
'சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின்' (அருமையான தாலாட்டுப் பாடல்)
'கண்கள் இரண்டில் ஒன்று போனால்'
'கலைத் தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன்'
'உனக்கும் எனக்கும் உறவு காட்டி' (1956 இல் எம்ஜியார் நடித்து வெளிவந்த 'மதுரை வீரன்' படத்தில் பி.பானுமதி குரலில் ஒலிக்கும் 'அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி' பாடல் இந்தப் பாடலை அப்படியே ஒத்துப் போகும்).
என்ற காலத்தை வென்ற கலக்கல் பாடல்கள். ஜி.ராமனாதனின் தேனூறும் இசை இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றும் கூறலாம். பி.லீலா, ஜிக்கி, ஸ்வர்ணலதா, காந்தா, கஜலக்ஷ்மி, ஆண்டாள், ஏ.எம்.ராஜா இவர்கள் குரல் தேனமிர்தமாய் இப்படத்தின் பாடல்களில் ஒலித்தது.
கதை, வசனம், பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். வசனங்கள் புரட்சிகரமாக மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்தன.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்தை ஜி.ஆர்.ராவ் இயக்கியிருந்தார். டி ஆர்.சுந்தரம் அவர்கள் இயக்க மேற்பார்வை பணியினைச் செய்திருந்தார்.
http://i1.ytimg.com/vi/SzXvWdOuYbk/hqdefault.jpg
இப்படத்தைவிட இப்படத்தில் இடம் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகம் மிகப் புகழ் பெற்று விட்டது. இசைத்தட்டு வடிவிலும் வெளிவந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. இலங்கை வானொலியில் இந்நாடகத்தை அடிக்கடி ஒலிபரப்பி நாம் கேட்டு மகிழ்ந்ததுண்டு.
இதில் மிக சிறப்பம்சம் என்னவென்றால் இந்த 'அனார்கலி' ஓரங்க நாடகத்திற்கு மட்டும் கலைஞர் கருணாநிதி மிகச் சிறப்பாக வசனங்களைத் தீட்டி இருந்ததுதான். நடிகர் திலகம், கலைஞர் கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி இந்த நாடகம்.
நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட.
இக்கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.
நன்றி!
வாசுதேவன்.
Courtesy :facebook
சேகர்பரசுராம் பக்கத்தில் இருந்து... மனதில் நிலைத்திருக்கும் நிகழ்வு,
அப்போதைய காலகட்டத்தில் விவரங்கள் தெரியவில்லை,
1980 வருடத்தின் துவக்கத்தில் நடிகர்திலகத்தின் போஸ்டர் சுவரில் ஒட்டப்பட்டு சுற்றி ஏராளமான கூட்டம் ஸ்தம்பித்து பார்த்து கொண்டிருந்தது,
தலையில் அடிபட்டு குருதி வழியும் தலைக்கட்டுடன் நடிகர்திலகத்தின் காட்சி,
தேர்தல் பிரசாரத்தில் மேடையில் பேசிக்கொண்டு இருந்த போது அதிமுக குண்டர்களால் தாக்கப்பட்டார்( தென் மாவட்டம விவரங்கள் தெரிந்தவர்கள் பதிவு செய்தால் நன்று)
அப்போது நடக்கவிருந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய
நடிகர்திலகம் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் வழிந்தது, காங்கிரசு டன் திமுக இணைந்து தேர்தலில் போட்டியிட்டது, பிளவு பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் உற்சாகமாக களப்பணி ஆற்றினார் கள்( நடிகர்திலகத்தின் ரசிகர்கள் திமுக விலும் நிறைந்து இருந்தனர்)
அப்போது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் அன்னை இந்திரா, கலைஞர், ஆகியோர் அமர்ந்திருந்த மேடையில் நடிகர்திலகம் பேச்சை துவங்கிய போது எழுந்த ஆரவாரம், நடிகர்திலகம் பேசும்போது, " எனது பிறந்த வீடும் புகுந்த வீடும் இன்று ஒன்று சேர்ந்தது" என்றவுடன் கூட்டம் ஆர்ப்பரித்தது, சிறிது நேரம் கழித்தே அமைதி திரும்பியது, திமுக காங்கிரஸ் என தொண்டர்கள் இருந்த அந்த கூட்டம் முழுதும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் என மெய்ப்பிக்கும் விதமாக இருந்தது,
தொடர்ந்து தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய துவங்கினார்
வெற்றி உறுதி என அறிந்த அதிமுக குண்டர்கள் அதற்கு காரணம் நடிகர்திலகம் என்பதனால் தொடர்ந்து பிரசாரம் செய்ய முடியாதபடி இருக்க மேடையில் அவர்மீது தாக்குதல் நடத்தி இடையூறு செய்தனர்,
இருப்பினும் தொடர்ந்து கூட்டணி யின் வெற்றிக்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி யினை 40/38 என்ற கணக்கில் பறித்து கொடுத்தார்
பின்னர் கலைஞர் அவர்கள் கொண்ட அவசரநிலை அதிமுக ஆட்சி கலைப்பு, அதனால் ஏற்பட்ட அனுதாபம் அதிமுக மீண்டும் வெற்றி பெற வழி வகுத்தது,
நடிகர்திலகத்தின் யோசனையை காங்கிரஸ் மேலிடம் உதாசீனம் செய்தது என பேச்சுக்கள் கேட்டிருக்கிரேன், அதனால்
பின் காங்கிரஸ் தேயவும் செய்தது
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் என்று இருந்த மூப்பா, பாசீ, தபா இன்னும் சிலர் காங்கிரஸ் வளர்ச்சி க்காக என்ன செய்தார்கள் என தேடுகிறேன் , ஒன்றும் அகப்படவில்லை
எண்ணற்ற சேவைகளை வழங்கி உத்தமனாய் மட்டுமே இருந்தார் நடிகர்திலகம் என்பதை வலியுறுத்தும் விதமாக மட்டுமே என் பதிவு,
சத்திய மூர்த்தி பவனில் சிலையை நிறுவ கோரிக்கை வைக்கும் நிலையை கண்டு மனம் வருந்தி வந்த பதிவு
http://i1039.photobucket.com/albums/...psmevd01ep.jpg
http://i1039.photobucket.com/albums/...psazizzkzz.jpg