கசக்குமோ மருந்து என்றே கடினமாய் முகஞ்சு ளித்து
பசப்பலும் செய்தொ ளிந்து பாட்டியால் பிடியும் பட்டு
விஷமிலை குட்டி கொஞ்சம் வாயினைத் திறடி என்றே
வசம்புபோல் ஏதோ இடவும் ஓடியே பறந்தது சுரமும்..
Printable View
கசக்குமோ மருந்து என்றே கடினமாய் முகஞ்சு ளித்து
பசப்பலும் செய்தொ ளிந்து பாட்டியால் பிடியும் பட்டு
விஷமிலை குட்டி கொஞ்சம் வாயினைத் திறடி என்றே
வசம்புபோல் ஏதோ இடவும் ஓடியே பறந்தது சுரமும்..
சுரமும் விட்டபாடில்லை
வாய் கசப்பும் போகவில்லை
பெண்ணினம் கொதிக்குது
கவசமின்றியே தவிக்குது
இன்னும் எத்தனை பேர்
தொங்கவேண்டும் தூக்கிலே
தூக்கிலே போட்டு
மேல் வைக்கப் பட்டிருக்கும்
முறுக்குகளை
பாட்டி அறியாமல் ஏறி
நான்கைந்து கை நிறைய அள்ளி
மாடிக்கு எடுத்துப் போய்
கடக் மொடக் என்று கடித்து
ருசித்த காலம் போயின..
இன்று
பளபளக்கும்ப்ளாஸ்டிக் டப்பாவில்
கைக்கெட்டிய படி சிரிக்கும்
முறுக்குகள்..
திட்டுவதற்கு பாட்டி இல்லை
எடுத்துச் சாப்பிட த்ரில் இல்லை..
கடக் மொடக்கென கடிக்க
இல்லை பற்கள்..
பற்கள் தெரிய சிரித்தோம்
சிரித்துக் கொண்டேயிருந்தோம்
பள்ளிக்கூடப் பருவத்திலே
பாட்டி வீட்டில் கூடியாடிய
பழைய சொர்க்கத்தையே
கண்டது போல் களித்தோம்
அக்கா பேரன் திருமணத்தில்
சந்தித்த உறவுத் தோழிகள்
தோழிகள் செவிகள் எல்லாம்
...தொய்வுறும் வண்ணம் நன்றாய்
நாழிகைப் பொழுது நின்று
..நயம்பல உரைத்துப் பின்னே
ஊழிபோல் அவளை உள்ளே
...தள்ளியே விடவும் அங்கே
நாலையும் தொலைக்க வைக்கும்
..நல்லறம் தொடர்ந்த தன்றோ..
தொடர்ந்த தன்றோ வர்த்தக தந்திரம்
மக்கட்தொகை பெருகிய நாடிதில்
மகளிர் மாவையும் களிம்பையும்
பூசிப் பூசி அழகு சிலைகளாய் மிளிர
அமெரிக்க அரங்கில் இந்திய அழகி
சூட்டப்பட்டாள் அலங்கார கிரீடம்
கிரீடத்தைத் தலைதனிலே அணிந்து அங்கே
..கிடுகிடென்றே கனமதனை உளத்தில் வாங்கி
விறுவிறுப்பாய் வாலியுந்தான் அவையில் சொன்னான்
...வெண்ணிலவாம் தம்பிமனை தாரைதன்னை
பற்றிடுவேன் எனக்கொன்றும் பழியும் வாரா
..பார்த்திடலாம் சுக்ரீவன் செயல்கள் எல்லாம்
சுற்றமெல்லாம் திகைத்திடவே செய்த தீமை
...சுற்றிவந்து அவனுயிரை எடுத்த தன்றோ..
உயிரை எடுத்த தன்றோ
உள்ளே சென்ற திரவம்
கண்ணில் படவில்லையோ
குடித்துவிட்டு ஓட்டாதீர்
எச்சரிக்கைப் பலகை
மதுவை ஒழிக்க முயல்
முயல்வதில் வேகங் கூட்டி மூச்சுகள் தன்னை விட்டு
புயலென முயலும் பாய்ந்தே போட்டியில் ஓடிய வேகம்
சுயத்திலே சிந்தை கர்வம் சொக்கியே கொண்ட தாலே
வியப்புகள் பலதைச் சேர்த்தே வென்றது ஆமை அங்கே..
அங்கே தேடி
இங்கே தேடி
எங்கே போனது
என் மூக்குக்கண்ணாடி
பாட்டியின் அடையாளம்
வெளுப்பது பரிதாபம்
பரிதாபமாய் பசியோடுதான் பழக்கத்திலே கரங்கள்
வரியோடிய முதுமையதன் வழக்கத்தையே உரைக்க
பரிவானவர் சிலபேரெதும் தருவாரென நீட்ட
கரிபூசிய முகத்தோடதைக் காணாதுசெலல் தவறே
தவறே அதிசயமான தவறே
பூந்தளிர் பாதந்தான் நடந்தது
அதில் பூகம்பம் விளைந்தது
பசி தாகம் தூக்கம் தொலைந்தது
அளவிட முடியாத சேதாரம்
அதுவே வாழ்வின் ஆதாரம்
ஆதாரந் தனைக்கேட்டு முதியவரின் குற்றம்
..அழகுறவே தவறென்றே சுந்தரனும் சொல்ல
மோதாதே சிறுபயலே என்னிடமா கேட்பாய்
..முக்கியமாய்ச் சான்றிதழும் இங்கிருக்கு தப்பா
பூதாகர மெனவே காட்டிவிட்ட ஓலை
..புனிதமனச் சுந்தரனின் பெற்றவரின் ஒப்பம்
வேதாந்தம் பலச்சொல்லும் கிழவனென ஈசன்
..வித்தையன்று புரிந்ததுவும் விளையாட்டுத் தானே..
விளையாட்டுத் தானே காட்டுது என் செல்லப் பறவைகள்
ஆப்பிரிக்கக் கிளி அழகிய கிளி இரு ஜோடி இரு வண்ணம்
பயந்து பானைக்குள் பதுங்கும் பக்கம் சென்று பார்க்கையில்
காத்துக் கிடந்தேன் எப்போது முட்டையிடும் பொரிக்கும்
என்ன வண்ணத்திலே எத்தனை குஞ்சு பிறக்குமென
பக்குவமாய் ஊறிய பயிறுகளை கருத்தாய் ஊட்டினேன்
அறிகுறியே இல்லை என் ஆசை நிறைவேறவெனவே
மெத்த வருந்தி நிதமமும் நான் கவனித்து வருகையிலே
ஆஹா! நேற்று கண்டேன் ஐந்தாவதாய் ஒரு பறவை
பச்சை வண்ணத்திலே முழு இறகுகளுடனே அழகாய்
முட்டையிட்ட சுவடில்லாமல் குஞ்சு குரல் கேளாமல்
ரகசியமாய் வந்துதித்த அதிசயம் எனக்கு பேரின்பம்
பேரின்பம் சிற்றின்பம் என்றெல்லாம் சொல்லி
..பிரித்துத்தான் பேசுவது என்னென்று அங்கே
ஊரிலிரு நண்பர்கள் சந்தித்த போது
..உளமார மனமாரச் சொன்னானே ஒருவன்
தேரினிலே வருகின்ற முருகனவன் அழகை
..திகட்டாமல் பார்ப்பதுவே பேரின்பம் என்றான்
வாரிவிடும் வள்ளலனெ பிரம்மனவன் தந்த
..வஞ்சிமுகம் கொஞ்சுமொழி எனச்சொன்னான் ஒருவன்
காரிருளில் கன்னியுடன் சுகிப்பதல்ல இன்பம்
...கண்மல்க இறைவனிடம் கொள்வதுவே இன்பம்
தூறிவரும் சாரலென தோகையவள் இன்பம்
..துவண்டுவிடும் வறண்டுவிடும் எனப்பேச்சு கூட
நேராக அறிவதற்கு எந்த இடம் என்றே
..நெடுநேரம் பலவிதமாய் யோசனைகள் கொண்டு
தேரினையே இழுத்துவரும் திருவிழாவின் போது
..தெரிந்துகொள்வோம் எனச்சொல்லி பிரிந்திடவும் செய்தார்..
சிவந்தநிறம் சிரித்தவிழி சிறுமழலைத் தோற்றம்
..சிந்தனையில் வந்துவிடும் சீர்மிகுந்த ஏற்றம்
உவந்தபடி முருகனையே பார்த்தவனின் நெஞ்சோ
..உணர்வுடனே வஞ்சியிடம் சென்றவனை எண்ண
துவண்டயிடை துடிக்குமிதழ் திரண்டவுடல் கொண்ட
..தேவியவள் அருகினிலே ஆர்வமுடன் வந்தும்
குவலயத்தின் குமரனையே இன்னொருவன் எண்ணி
..கொள்ளாத பேரின்ப நிலையினையே பெற்றான்
பெற்றான் உலகத்தார் நன்றியை
இணையத்தை கண்டுபிடித்தவன்
தூரங்களைத் தொலைத்தவன்
இதயங்களை இணைத்தவன்
இணையில்லாதோர் சேவகன்
இன்றிங்கோர் இனிய நாயகன்
நாயகனைப் பற்றியொரு பாட லிங்கு
.. நலமுடனே எழுதுவென்று சொல்லி விட்டார்
ஆயர்குல்த் தில்உதித்து அரிய செயலை
..அழகுறவே செய்துவிட்ட கண்ணன் மற்றும்
தூயமனம் கொண்டராமன் என்று மேலும்
..துள்ளிவரும் கோபநிறை பரசு ராமன்
பாயாமல் பதுங்கிநின்ற கூர்மத் தோற்றம்
..பன்றிமுகம் மச்சமென மேலுங் கொண்டே
நடுஙகவைக்கும் நரசிங்கத் தோற்ற மொன்று
..நல்லவித பலராமன் தோற்ற மொன்று
ஒடுங்கித்தான் வாமனனாய் வரங்கள் கேட்டே
..ஓங்கியகால் உலகளந்த தோற்ற மொன்று
முடுக்கிவிட்ட கோபத்தால் மூர்க்கங் கொண்டு
..மோதிமோதி உலகினையே அழிக்கும் தோற்றம்
தொடுத்தநற் பெருமாளே சிவந்த உந்தன்
..தாமரைப்பூப் பொற்பாதம் பணிந்தேன் நானே..
நானே நானே என முந்தி எழுந்தால்
மண்டையில் குட்டு முந்திரிக்கொட்டை
குட்டியும் மட்டந்தட்டியும் தணியாது
முனைப்பு ஆர்வம் ஆச்சர்யம் வீரம்
வீரமுடன் வேலெடுத்து எதிரியின்மேல் தானெய்து
..வெற்றிநகை புரிந்தவந்த மன்னனவன் தன்னுடைய
ஊரென்று அழைக்கின்ற தலைநகரம் நுழையுங்கால்
..உணர்ச்சியெலாம் மிகக்கோண்டு கோஷங்கள் பலவாக
காரிருளாம் பொழுதெனினும் கண்விழித்துக் கூடியங்கே
..களிப்புடனே வாழ்த்துகளை மக்களலை சொல்லிடவே
வேர்முதலாய் மகிழ்ச்சியுடன் வீடடைந்தால் நீள்பிரிவால்
..வேல்விழியாள் பார்வைசுட விக்கித்தே நின்றானே..
விக்கித்தே நின்றானே
விண்ணகம் ஏகிய காந்தி
ஜப்பானிய குரங்கு மூன்று
கண்ணை காதை வாயை
மூடிக் காத்த தீமையை
திக்கெட்டும் பரப்பிடும்
பரபரப்பான ஊடகங்கள்
ஆற்றிடும் சேவையிலே
சேவையிலே மோர்க்குழம்பு
ஊற்றி சாப்பிட்டால் நல்லா இருக்கும்டா
அது என்ன பிடிக்கலைங்கற..
திட்டிக் கொண்டே உண்டது அந்த்க் காலம்..
இன்று
ஹார்லிக்ஸ் நூடுல்ஸாம் நல்லதாம்
சாப்பிடு என்கிறாள் மனைவி
ம்ஹீம்
பேசவில்லையே மறுபேச்சு!
மறுபேச்சு பேசாமல்
தரக்குறைவைத் தாங்கி
மக்கள் மாக்களாய்
மாறுகின்ற கொடுமை
நெஞ்சு பொறுக்குதில்லையே
காடழிக்க காத்திருக்கு
அக்னி குஞ்சொன்று
ரௌத்திரம் பழகியே
என்னென்று சொல்ல
எப்படி விவரிக்க
பொங்கும் ஆத்திரம்
வார்த்தை தின்றதோ
வாய் செத்ததோ
பித்தாகி திகைக்க
அனலாய் மூச்சு
துருத்தியாய் வீச
அக்கிரமத்தை சொல்ல
அமைதியை தேட
தவிக்கிறேன் நழுவும்
நிதானத்தைப் பற்ற
முயல்கிறேன் நானும்
முடியலையே இன்னும்
குலக்கொழுந்தொன்று
பசுந்தளிரொன்று எங்கள்
பால்வடியும் முக செல்வன்
ஒன்பது வயது பாலகன்
பாட்டியுடன் கொஞ்ச வந்த
அழகிய விடுமுறையில்
பத்து நாளுக்கு முந்தைய
வயிற்றுபாதை திரும்பவே
கூர்மதி கொண்டவளாம்
அனுபவமுள்ளவளாம்
என் பின்னே பிறந்தவளாம்
மருத்துவம் பயின்றவளாம்
எதற்கும் ரத்த பரிசோதனை
பார்த்திடலாமென பரிந்துரைக்க
கையில் கொடுக்கப்பட்ட
சோதனை முடிவுத்தாள்
அணுகுண்டை போட்டது
கிட்டதட்ட நான்கு பங்கு
வெள்ளை அணுக்கள்
சொல்ல நா கூசும்
பொல்லாத நோயின்
காலனின் கைப்பிடியை
கொடிய வேதனையை
சுட்டிக் காட்ட அதிர்ந்தோம்
சிதைந்தோம் மொட்டையாய்
எச்சரிக்கை முறையாய்
சுமக்காத சீட்டினை கண்டு
சீறிய என் தங்கையும்
வேறிடத்தில் மறுபரிசோதனை
செய்திட பணிக்க இரவும்
துவங்கிட காத்திருந்தோம்
மறு நாள் மறு சோதனை
முடிவை கையில் வாங்க
வார்த்தது பாலை வயிற்றில்
அந்த இரண்டாம் சோதனை
ஒரு கோளாறுமில்லையென
கண்ணகியாய் எரிக்கக்
கிளம்பியவளை நிறுத்தி
பொறுமை புகட்டினர்
நகரின் உச்ச தரம் கொண்ட
சோதனை கூடத்தில்
மறுநாள் மூன்றாம் முறை
சோதனை முடித்து அதிலும்
இருக்கவில்லை பிழையேதும்
சிறந்த குழந்தை நிபுணரையும்
கண்டு தெளிந்த பின்னும்
ஆறவேயில்லை எனக்கு
நுகர்வோர் நீதிமன்றத்தில்
தண்டனை பெற்றுத் தராது
குடும்பம் அடைந்த துயர்
கொஞ்சமும் ஆறாது
என்றே ஒற்றைக்காலில்
நின்றவள் முதல் சோதனை
மையத்தின் தலைமையை
தொலைபேசியில் அழைத்து
நடந்ததை விவரித்தேன்
இது நீதியா நியாயமா
நெஞ்சு பொறுக்குமா
அடுக்குமா இக்கொடுமை
பத்திரிகையில் கிழிக்கட்டுமா
கோர்ட்டில் வழக்காடட்டுமா
தொழில் தர்மம் இதுதானா
குமுறினேன் கொதித்தேன்
மழை இன்னும் பெய்திட
காரணனாய் ஒரு நல்லவன்
மறுமுனையில் இருந்து
என் எரிமலையை
அப்படியே உணர்ந்து
கண்ணியமும் கொள்கையும்
கொண்ட கனவானாய்
கொள்ளை பணிவாய்
மன்னிக்கக் கோரி
எளிதில் மன்னிக்கும்
சாமானிய குற்றம்
இதுவல்லதான் என்றும்
உடனடியாய் விசாரித்து
நடவடிக்கையாய் அக்கொடிய
தவறு செய்த அலுவலரை
பத்து நாள் பணிநீக்கம் செய்து
பழிவாங்கும் திட்டத்தை என்
மனதிலிருந்து துடைத்தானே
நொந்த மனமும் உடலும்
என்று முழுதாய் தேறுமோ
தேறுமோ இல்லை என்றால்
..தெளிவுடன் சொல்க ஐயா
ஆருடம் சொலலக் கையில்
..அரைமணி பார்க்க லாமா
மாறுதல் வருமா தந்தை
..மருந்தினில் குணமாய் போமா
ஊரிடம் கேட்ட போது
..உள்ளதைச் சொல்வீர் என்றார்...
காரிருள் படர்ந்த கண்கள்
..கலங்கவெ வைக்கு தய்யா
மீறியே வந்த அழுகை
..மென்மையாய்ப் பீற ஜோஸ்யர்
பாரிலே உனது தந்தை
..பலதினம் இருப்ப ரென்றார்
வாரியே மகனும் தந்து
..வசந்தமாய்த் தாவிச் சென்றான்..
சொன்னது பொய்தான் என்றே
..சிந்தையில் படுது என்றே
வண்ணமாய் மனைவி கேட்க
..வருத்தமாய் அவரும் சொன்னார்
என்னதான் சொல்ல இவளே
..இவனது ஜாத கத்தில்
திண்ணமாய் இவனின் முடிவு
..தெரிவதை என்று சொன்னார்..
சொன்னார் சிந்தனை சிற்பி சாக்ரடிஸ் அன்றே
சமூகம் கெட்டதே சீரிய கலாசாரம் அழிந்ததே
அதர்மமும் அக்கிரமமும் தலைவிரித்தாடுதே
இன்று வாழ்வது போல் கணக்காய் சொன்னாரே
ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னும் கலிகாலம்
சுற்றி உருளுது மாற்றமின்றி இக்காலச்சக்கரம்
சக்கரம் சுற்றச் சுற்ற
..சடக்கெனப் பானை அங்கே
பக்குவம் கொண்ட வாறே
..பாங்குடன் எழவும் அங்கே
சக்கையைத் துடைத்து மெல்ல
..சங்கடம் கொளாத வாறு
வெக்கையில் வைக்க பானை
..விம்மியே மிளிரு மன்றோ..
சொக்கிடும் அழகு கொண்ட
..சுந்தரப் பானை எல்லாம்
தக்கன வாக வைத்து
..தகுந்ததாய்ப் பணமுங் கேட்டால்
பக்கெனச் சிரிக்கும் ஆட்கள்
..பார்த்திடேன் இவனை இங்கே
சொக்கிடும் தங்கம் போன்று
..சொல்கிறான் விலையை என்றே
திக்கெனச் சோல்லும் போதில்
..தேகமும் சோர்ந்து போக
மிக்கவும் துக்கம் வந்து
...மென்மையாய் மனதில் ஏற
சிக்கலை நீக்கப் பானை
..சிரிப்பது போலத் தோன்றி
பக்குவம் கொள்வான் நெஞ்சை
..பாவமக் கலைஞன் தானே..
கவிஞன் தானே
காண்கிறானே
கலைக்கண்ணாலே
ஒளிந்திருக்கும் அழகை
கலைந்திருக்கும் ஒழுங்கை
அத்திறமையும் கண்ணும்
வடிக்கும் நேர்த்தியும்
வாய்க்குமோ எல்லோர்க்கும்
எல்லோர்க்கும் நமஸ்காரா
ஐ யாம் ரியல்லி ப்ரெளட் டு
மீட் யூ டாமில் பீப்பிள்..
இஃப் யூ ஆர் நாட் தேர் ஐயாம் ஆல்ஸோ நாட் தேர்.
டாமில் குட் மொழி லாங்க்வேஜ்
என்னை இந்த டாமில் கான்ஃபெரன்ஸிக்கு
கூப்பிட்டு ஹானர் பண்ணியமைக்கு தாங்க்ஸ்
ஐ லவ் யூ ஆல்
ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் என சொன்னால்
தேகம் முழுதும் சிலிர்க்கும்
ஜவான்களின் அணிவகுப்பு
அவர் நடையின் மிடுக்கு
அணிந்த உடையின் எடுப்பு
காதர் சட்டைகள் குல்லாக்கள்
அந்நியனைத் துரத்திய
ஆண்டுக்கணக்கில் நடத்திய
செக்கடியிலும் குண்டடியிலும்
தூக்கு மரத்திலும் செத்து
பல வழியில் போராடிய
மாவீரர்களும் அவர்கள்
பெற்றுத் தந்த சுதந்திரமும்
நினைவுக்கு வருகுதே
வருகுதே மன்னர் தேர்தான்
..வாசலில் நிற்கா தேடா
உருக்கிடும் வெய்யில் அங்கே
...உளமுடன் உடலை வாட்ட்
பருவமோ விளையாட் டென்றால்
..பற்பல அடிகள் எல்லாம்
பருகுவாய் எந்தன் பிடியில்
..பாங்குடன் சிக்கி விட்டால்..
சொல்லச் சொல்லக் கேட்காமல்
..சிறுவா நீயும் நின்றாயே
வில்லில் சென்ற அம்பைப்போல்
..வேகங் கொண்ட தேரதுவும்
கொள்ளை கொண்ட துன்னுயிரை..
..கொவ்வை ஆனது என்விழிகள்
கல்லாய்ப் போன நெஞ்சம்தான்
..காலன் கொண்டான் என்மகனே..
எத்தனை பணந்தந் தாலும்
..என்னுயிர் சென்ற தய்யா
சத்தமும் சந்தங் கொண்டு
..சலங்கையின் ஒலிகள் போல
முத்தெனப் பிறந்த அந்த
..மூத்தவன் மரித்து விட்டான்
பித்தென ஆன தய்யா
..பாவியென் மனமும் இன்று..
குறுக்கிலே வந்த எந்தன்
..குறுகுறு மைந்தன் காலன்
விரித்தவவ் வலையில் நன்றாய்
..விழுந்ததை என்ன சொல்ல
மறுகுதே எந்தன் நெஞ்சம்
..மன்னவர் நீரும் இதற்கு
பொறுப்பெனச் சொல்லு கின்றீர்
..பொறுப்பெலாம் விதிதான் ஐயா...
ஐயா புது யுகமிதில்
படித்தவன் பாமரன்
யார் அறிவாளியென
அறிந்தேன் கதையிதில்
குறுக்கு சந்தொன்றில்
ஒருநாள் ஷோக்கான
குட்டிப்பூனையொன்று
தன வாலை உயர்த்தி
சுற்றி சுழன்று நெடுநேரம்
ஆடக் கண்டது ஓர்
பெரிய பூனையுந்தான்
என்ன செய்கிறாய் என்றது
மிடுக்குடன் குட்டிப்பூனை
பெரிய படிப்பு படித்தேன்
வாலில் உள்ளது சந்தோசம்
என்றே கற்றதையொட்டி
பிடிக்க முயல்கிறேன் அதை
என்றவுடன் சொன்னது
பெரிய பூனை எளிமையாய்
நான் பெரிய படிப்பேதும்
படித்தேனில்லை ஆயினும்
அறிவேன் சந்தோசம் என்
வாலில் உள்ளதென என்
வேலைகளை நான்பாட்டுக்கு
செய்து வர வால்பாட்டுக்கு
என் பின் வருகிறதாக்கும்
அதனுடன் சந்தோசமும்
சாதாரணமாய் சொல்லிவிட்டு
கிளம்பியது சோலியைப் பார்க்க
பார்க்கப் பார்க்க
வெகு அழகாய் இருக்கும்
விதம் விதமாய் வட இந்திய இனிப்புகள்
விலை அதிகம் என
எனக்குத் தெரியாத பருவம்
எச்சில் ஊறும் நாவில்
கேட்டால்
அம்மா அதெல்லாம் வேண்டாம்
நான் பண்ணித்தரேன் நம்ம மைசூர்பாகு..
பண்ணியும் தருவாள்..
ம்ம்
இப்போதோ
ஸ்வீட்ஸ்டாலே வைக்கலாம்
சம்பாத்யம் அதிகம்
ஆனால் முடியாது..
வீட்டுக்காரருக்குச் சர்க்கரை..
ஏதோ என்னால் முடிந்த
தியாகம்..
தியாகம் செய்யணுமாம்
மகள் வளர்ந்ததும்
அலங்காரமாய் பூணுவதை
மருமகள் வருமுன்
ருசியாய் தின்னுவதை
அவ்விருவர் தடை
இன்பம் அனுபவிக்க
எந்த நொந்த கிழம்
சொன்னதிது அறியேன்
நேரெதிர் என் வாழ்வில்
என்வாழ்வில் வந்துவந்த தீபா வளியை
...எண்ணயெண்ண நெஞ்சினிலே உற்சா கந்தான்
பொன்னாக மின்னிவரும் புதிதாய்த் தைத்த
..பாவாடை தாவணியில் இளமை கொண்ட
பெண்ணுடைய கண்களிலே மின்ன லைப்போல்
..பூரிக்கும் துடிப்பான துள்ள்லைப் போல்
வண்ணமெனப் பொங்கிவரும் என்றும் தானே
..வார்த்தைகளில் சொல்லவொண்ணா எழிலும் தானே..
எழிலும் தானே இடம் பிடித்தது
இதழோர சின்னப் புன்னகையில்
பேரெழில் கண்டிட பெரிதாய்
சிரிக்கத் தூண்டிய பேராசையில்
பேரழிவே நிகழும் பெண்ணே
தவிர்த்திடுக பெருந்துன்பம்
பெருந்துன்பம் கண்களிலே கொண்ட அந்தப்
..பாவையிடம் பெரியவரும் சென்று கேட்டார்
பருவத்தின் வாயிலிலே நிற்கும் பெண்ணே
..பார்வையிலேன் சோகத்தைக் காட்டி நின்றாய்
உருவத்தில் குமரியென இருக்கும் உந்தன்
..உணர்வினிலே துயரமேந்தான் வந்த திங்கே
குருவெனவே நினைத்துநீயும் சொல்வாய் நானும்
..கூறிடுவேன் ஏதேனும் நன்மை என்றால்..
உருவாக்கி விட்டபெற்றோர் யாரோ அறியேன்
..உணர்வுகளைத் தூண்டிவிட்ட வல்ல நண்பன்
சுறுசுறுப்பாய் என்னுடனே ஆடி நின்றே
..சோர்விலாமல் பலகதைகள் பேசி வந்தான்
துரும்புக்கும் துயர்செய்யா தூய உள்ளம்
..தோற்றுத்தான் போனதையா பாழும் விபத்தால்
முறுவலிக்கும் அதிர்ஷ்டமது எனக்கு இல்லை..
..மேனியுடன் நானிருக்க அதுவும் தொல்லை..
காதலனின் மரணத்தால் கலங்கி நிற்கும்
..கன்னியவள் கைபற்றிச் சொன்னார் அவரும்
பாதகந்தான் பெருந்துயர்தான் அறிவேன் நானும்
..பாவியான எமனுந்தான் பழியைச் செய்வான்..
வாதஞ்செய வரவில்லை உனக்கு பெண்ணே
..வாழ்க்கையது இருக்கிறது எழுந்து நிற்பாய்..
மோதவ்ரும் துயரங்களை நின்று ஏற்று
..மேய்ப்பதுவே வாழ்க்கையெனச் சொன்னார் நன்றாய்.
உப்பென்றும் காரமென்றும் உடலில் ஏற
...உணர்வுகளில் துயரந்தான் மறந்துபோகும்
சப்பென்று இருந்தாலது தயிரில் ஊறி
..சாரமில்லா புளிப்பான சாதமன்றோ
தொப்பென்று இதயத்தை விட்டி டாதே
..தோல்விகளும் துயரங்களும் நிலைத்து நிற்கா
முப்பொழுதும் இறைவனையே நினைக்கும் போதில்
..முன்னிற்கும் வாழ்க்கையது விரைந்து போகும்..
சொன்னவரோ பெரியவர்தான் ஆனால் என்ன
..சோர்வதனை நீக்கினரே ஆஹா நன்று
வண்ணமயில் சற்றுசற்றாய் தேறிக் கொஞ்சம்
..வாகாகக் கேட்டுவிட்டாள் ஐயா நீர்யார்..
எண்ணமதில் வைக்குவண்ணம் நானும் ஒன்றும்
..ஏற்றமிகு பெரியவனா ஒன்றுமில்லை..
உன்னைப்போல் பேரழகாய் பெண்கள் ரெண்டு
..அழகான சம்சாரம் இரண்டு பிள்ளை..
சின்னதான வியாபாரம் சொத்து கொஞ்சம்
..சோர்விலாமல் வாழ்க்கைதான் சென்ற தம்மா
கண்வைத்தார் யாரென்றால் காலம் தானே
..காலத்தில் மாற்றத்தில் விபத்து ஒன்றில்
என்குடும்பம் மரித்திடவும் இலக்கில் லாமல்
..எங்கெங்கோ சுற்றுகையில் கண்ணில் பட்டாய்
என்றேதான் சொல்லியவர் செல்லப் பார்த்தால்
..எளியவரின் கைகளிலே ஒன்று இல்லை....
ஒன்று இல்லை ரெண்டு இல்லை
பலகாரக்கடையே போலிருக்கும்
சுட்டு வைத்த பட்சணங்கள்
ஆளுக்கொன்று பிடிக்கும்
அனைவரும் ருசித்துண்பதை
கண்டு மனம் முழுதும் இனிக்கும்
இன்று பிள்ளைகள் வராததால்
எண்ணைசட்டி அடுப்பிலேறாமல்
பண்டிகையில்லா சாதாரண நாள்
வரும் வருடம் வரமாகட்டும்
வரமாகட்டும் மக்களுக்கு
என் அறிவும் அனுபவமும்
என்று தான் இந்தப் பதவியை ஏற்றேன்..
அது ஏனோ சாபமானது..
மெளனத்தின் மூலம்
சில பல விஷயங்களைச்
சமாளிக்கலாம் என நினைத்தது
பூசியது முகத்தில் கரி..
ஓய்வு பெறும் நாள் நெருங்க
நெருங்க என் முகத்தில் கூடுகிறது
பிரகாசம்..
நாட்டிலும் அது ஏற்படும் என
பலர் எண்ணுவது
எனக்கு வேதனை..
மற்றவர்க்ளுக்கு ம்ம் நம்பிக்கை..
நம்பிக்கை தொலைத்த ஆசாமிகள்
அகங்காரம் தொனிக்கும் குரல்கள்
அர்த்தம் அதிகமில்லா தீர்ப்புகள்
பட்டினிச்சாவு நாட்டில் நடக்க
கோடிகளைக் கொட்டி சாட்டிலைட்டா
அரசுக் கொட்டிலின் பாதுகாப்பு
ஆடம்பர செலவை விட கம்மியடா
குரங்காய் மரத்தில் வாழ்ந்தவன்
சொகுசாய் காரில் பயணிப்பதெப்படி
ஓயாத விஞ்ஞான ஆராய்ச்சியாலடா
ஆராய்ச்சியால் அடா
எல்லாம் என்னுழைப்பு
நான் தான் செய்தேன்
இந்த நோய்தீர்க்கும் மருந்தினை
என விஞ்ஞானி முழங்க
உதவியாளன் கண் நிலம் நோக்க
தட்டுப்பட்டன
மீளா உறக்கத்தில் இருந்த வெள்ளெலிகள்..