டியர் பம்மலார்.....Quote:
Originally Posted by pammalar
சாதனைச்சித்திரம் 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் சாதனைச்சரித்திர தொகுப்பு அருமை. கடந்த காலங்களில் இவ்வாறு சரியான நேரத்தில் இதுபோன்ற விவரங்கள் சொல்லப்படாததால்தான், சில வலைப்பூ பிரகஸ்பதிகளும், செய்தித்தாள்களில் கட்டுரை வரைபவர்களும், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைப்பற்றி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதத்துணிந்தனர். சகோதரர் ராகவேந்தர் அவர்கள் எப்போதும் ஆதங்கப்படுவதுபோல, யாரோ 'ஒருசிலரின்' படங்கள் மட்டும் வசூலை கோணிப்பைகளில் கட்டியது போலப் பேசத்துணிந்தனர். நடிகர்திலகத்தின் பக்தர்கள் கூட்டம் உங்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டுள்ளது.
நடிகர்திலகத்தை வைத்து 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' என இரு பெரும் வெற்றிக் காவியங்களைத்தந்த ஜி.என்.வேலுமணி, பின்னர் ஏன் நடிகர்திலகத்தை விட்டுப்பிரிந்தார்?. அதற்கும் கூட, நடிகர்திலகத்தின் படங்களே அவரது படங்களுக்குப் போட்டியாக வந்ததே காரணம். பாலும் பழமும் வெற்றிகரமாக 125 நாட்களை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அதே திரையரங்குகளில் ஏ.வி.எம். நிறுவனத்தாரின் 'பார்த்தால் பசிதீரும்' படம் வெளியிட முயற்சிகள் நடந்தன. ஆனால் வேலுமணி தனது படத்துக்கு இன்னும் கூட்டம் குறையாததால் அதை வெள்ளிவிழா வரை ஓட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவரது ஆசை நிறைவேறியிருந்தால், அவரது அடுத்தடுத்த இரண்டு படங்கள் வெள்ளி விழா என்பதோடு, அதைவிட முக்கியமாக, நடிகர்திலகத்துக்கு ஒரே ஆண்டில் மூன்று வெள்ளிவிழாப்படங்கள் என்ற பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கும்.
ஆனால் ஏ.வி.எம். நிறுவனத்தாரின் நச்சரிப்பு காரணமாக, பாலும் பழமும் 127 நாட்களில் (குறிப்பாக சென்னை சாந்தியில்) திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு, பார்த்தால் பசிதீரும் படம் திரையிடப்பட்டது. அதனால் மனம் வெதும்பிய வேலுமணி, 'இனி இந்த ஆளை வச்சு படம் எடுக்க மாட்டேன்' என்று விலகிப்போனார். (பந்துலுவுக்கு முன்ன்ர் இவரது விலகல்). அதோடு பீம்சிங்கை விட்டு கே சங்கரிடம் தாவினார். அதே கையோடு ஜெமினியை வைத்து 'பாத காணிக்கை', மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து 'பணத்தோட்டம்', அசோகனை கதாநாயனாக வைத்து 'இது சத்தியம்', மீண்டும் எம்.ஜி.ஆரை வைத்து 'படகோட்டி', 'கலங்கரை விளக்கம்', 'சந்திரோதயம்', 'குடியிருந்த கோயில்'... இவற்றுக்கிடையே ஜெய்சங்கரை வைத்து பஞ்சவர்ணக்கிளி, செல்வமகள் படங்களை தயாரித்தவர், பிற்காலத்தில் கே.ஆர்.விஜயாவை முக்கிய பாத்திரமாக வைத்து 'நம்ம வீட்டு தெய்வம்', 'அன்னை அபிராமி' ஆகிய பக்திப்படங்களை தயாரித்ததோடு அவற்றை அவரே இயக்கினார். கடைசிக்காலத்தில் ரொம்பவே நொடித்துப்போய், பஸ்ஸில் பிரயாணம் செய்தார் என்று செய்திகள் வந்தன.
'பேசும்படம்' மாத இதழில் வந்த செய்தி:
பாலும் பழமும் திரையிடப்பட்ட அன்று மாலைக்காட்சிக்கு இயக்குனர் பீம்சிங், சென்னை சாந்தி தியேட்டருக்கு வந்திருந்தார். ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு படம் அருமையாக அமைந்துள்ளது என பாராட்டுத் தெரிவித்தனர். அதோடு, வெளிநாட்டிலிருந்து தனது நண்பன் தன் மனைவியை குணப்படுத்த பார்சலில் மருந்துகள் அனுப்பியிருப்பதாக நடிகர்திலகம் சொல்வார். ஆனால் அவர் பார்சலைப்பிரிப்பதை குளோசப்பில் காண்பிக்கும்போது, அதில் இந்திய ஸ்டாம்புகள் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக்குறையை இயக்குனரிடம் ரசிகர்கள் சுட்டிக்காட்டியதும், சாந்தியில் ஓடிய பிரிண்டில் அந்த குளோசப் காட்சியை பீம்சிங் தன் கைப்படவே வெட்டிவிட்டார். (ஆதாரம் பேசும் படம் 1961 செப்டம்பர் இதழ்)
பட்டுக்கோட்டை முருகையாவில் வேறு படம் புக் ஆகிவிட்ட காரணத்தால், பாலும் பழமும் தவிர்க்க முடியாமல் 41 நாட்களில், பக்கத்திலுள்ள அதிராம்பட்டினம் ராஜராஜேஸ்வரி என்ற டூரிங் டாக்கீஸுக்கு மாற்றப்பட்டு அங்கு 25 நாட்கள் ஓடியதாக, நமது பட்டுக்கோட்டை ரசிகர் சிவசங்கர் தெரிவிக்கிறார். (அவர் நமது திரியில் நேரடியாக பதிவுகளைத்தர ஆசைப்பட்டு ரெஜிஸ்ட்டர் செய்து மூன்று மாதங்களாகியும், ரெஜிஸ்ட்ரேஷன் கிடைக்கவில்லையாம். அதனால் Hotmail-லில் விவரங்களைத் தருகிறார்).Quote:
Originally Posted by pammalar