கண்ணா,
தொழில்முறைப் பாடல்களில் செம்மீன் படம் மற்றும் பாடல்கள் பற்றி அழகாக ஆழமாக எழுதி என் நினைவுகளை கிளறி விட்டீர்கள். அன்றைய நாட்களில் தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடிய படம் செம்மீன். படம் கேரளத்தில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது. நமது ஊரில் மீனாட்சி டாக்கிஸில் வந்தது என்று என் நினைவு. அப்போது நான் மிகச் சிறுவன் என்பதனால் படம் பார்க்கவில்லை. ஆனால் கடலினக்கர போனோரே பாடலும் மானஸ மைனே வரு பாடலும் மதுரையிலும் வெகு பிரபலம். மானஸ மைனே வரு பாடல் மூலமாகத்தான் மன்னாடே என்னும் நல்ல பாடகரை நான் அறிந்துக் கொண்டேன். அதே போன்று சலில் சௌத்ரி பற்றியும்.
பிற்காலத்தில் கேரளத்தில் வேலை செய்தபோது இந்தப் படத்தை பார்த்தேன். தமிழகத்தை ஒப்பிட்டு பார்த்தால் கேரளத்தில் தியேட்டர்கள் வெகு குறைவு. மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை திரையிடுவதற்கே இருக்கின்ற தியேட்டர்கள் போதாது. அப்படியிருக்க பழைய படங்களை எங்கே திரையிடுவது? தமிழகத்தை தாண்டி ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் பயணம் செய்யும்போது அந்த மாநிலங்களிலும் பழைய தெலுங்கு மற்றும் கன்னடப் படங்கள் ஓடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் கேரளத்தில் வெகு அபூர்வமாகவே பழைய மலையாளப் படங்கள் திரையிடப்படும். அப்படி ஒரு வாய்ப்பு 90-களின் துவக்கத்தில் கிடைத்தது.
அதற்கு முன்னரே என் சக ஊழியர்கள் செம்மீன் படத்தை பற்றியும் சத்யன் அவர்களின் நடிப்பைப் பற்றியும் மிக பிரமாதமாக சிலாகித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். செம்மீன் படத்தில் மட்டுமல்ல பல படங்களில் [நீலக்குயில், கர காண கடல், வாழ்வே மாயம், அனுபவங்கள் பாளிச்சகள், கடல் பாலம், ஒடயில் நின்னு, நிங்கள் என்னே கம்யூனிஸ்ட்டாகி என்று லிஸ்ட் போடுவார்கள்] சத்யன் அவர்களின் நடிப்பைப் பற்றி விமர்சையாக் பேசுவார்கள். 1912-ல் நாகர்கோவிலில் பிறந்து இளம் வயதிலே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி பின் ஓய்வு பெற்று [வயது 58 ஆக வேண்டிய அவசியமில்லை. இளம் வயதிலே ஓய்வு பெறலாம்] பின் சினிமாவில் சேர்ந்து அங்கே கொடி கட்டி பறந்த சத்யன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1971-ம் ஆண்டு (ஜூன் மாதம் என்று நினைவு) காலமானார். என்ன ஆச்சரியம் என்றால் 71-ல் காலமான அவரை அவரின் நடிப்பை பற்றி 80-களிலும் 90-களிலும் பெருமையாக பேசுவார்கள். அதிலும் இளைஞர்கள். பேசுவார்கள் பேசும் தெய்வம் படத்திலும் நமது நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்திருப்பார் சத்யன். இனி விஷயத்திற்கு வருகிறேன்.
நான் வசித்த கோட்டயம் நகரில் ஆனந்த் என்ற தியேட்டரில் ஒரு வார காலத்திற்கு செம்மீன் வெளியானது. ஒரு நாள் நூன் ஷோ போயிருந்தேன். ஹவுஸ் புல். அரங்கில் நிறைய இளைஞர்கள். படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு பின் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் படகுகளில் திரும்பிவர அவர்களுடன் துடுப்பு போட்டுக் கொண்டே சத்யன் அறிமுகமாகும் காட்சி. பலத்த கைதட்டல். ஆச்சரியமாக இருந்தது. படம் முழுக்க பார்த்தேன். பிடித்திருந்தது.
மறுநாள் ஒரு சக ஊழியரிடம் இதைப் பற்றி சொன்னேன். முதல் கேள்வியே சத்யன் அறிமுக காட்சியில் கைதட்டல் இருந்ததா? என்று கேட்டார். சொன்னேன். படத்தை பற்றி சொன்னேன். பிறகு ஒரு விஷயம் சொன்னேன், பாருங்கள் அவர் டென்ஷன் ஆகி விட்டார்.
வேறொன்றுமில்லை, அந்த காலகட்டத்தில் மம்மூட்டி நடித்து பரதன் இயக்கத்தில் அமரம் (Amaram) என்றொரு அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதுவும் கடலோரத்து மீனவர்களின் வாழ்வை, அவர்கள் சுகங்களை துக்கங்களை, காதலை நட்பை சொன்ன படம். மிக பிரபல திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் [கிரீடம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா போன்ற பல்வேறு படங்களின் திரைக்கதை எழுதியவர்] அவர்களின் அருமையான திரைக்கதையில் மம்மூட்டி அந்த அச்சுட்டி என்ற பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
நான் என்ன சொன்னேன் என்றால் செம்மீன் பழனியை விட அமரம் அச்சுட்டிதான் டாப். என்றேன். அதற்கு என்னுடன் சண்டைக்கே வந்துவிட்டார். அது மட்டுமல்ல நான் சொன்னது அவரிடமிருந்து வேறு பலருக்கும் பரவி பலரும் என்னுடன் விவாதத்திற்கு வந்துவிட்டனர். நான் முதலில் குறிப்பிட்ட சத்யனின் பல படங்களை சொல்லி அது பார்த்திருக்கிறீர்களா இது பார்த்திருக்கிறீர்களா என்று தொடர்ந்து சில நாட்கள் என்னிடம் வாதம் செய்துக் கொண்டேயிருந்தனர்.
அன்றைய நாட்களில் Satellite television ஒளிப்பரப்புகள் தொடங்கப்பட்டிருக்கவில்லை. பின்னாட்களில் அந்த நண்பர்கள் சொன்ன அனைத்துப் படங்களையும் பார்க்க முடியாவிட்டாலும் கணிசமானவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சத்யன் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நமது நடிகர் திலகம் அளவிற்கு அந்த range ல் வருவாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் அவர்களின் மாநில மொழி நடிகர் எனும்போது ஒரே குரலில் அவர் பெருமையை பறைசாற்றுகின்றனர். ஆனால் நமது தமிழகத்திலோ நமது மக்களே அற்ப காரணங்களுக்காக நடிகர் திலகத்தை தரம் தாழ்த்துவார்கள். என்ன செய்வது நடிகர் திலகத்தின் ராசி அப்படி!
ஸாரி கண்ணா, மிக நீண்ட பதிவாக போய்விட்டது. உங்களின் செம்மீன் பற்றிய பதிவு(கள்) பல நினைவுகளை தூண்டி விட்டது. பொறுமையாக படித்ததற்கு நன்றி.
அன்புடன்