http://i1065.photobucket.com/albums/...psh4mhwkom.jpg
Printable View
நண்பர் திரு C S குமார் அவர்களுக்கு,
இன்றைய தினம் உங்கள் பதிவுகளில் ஒன்றில் 1980 பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நடைபெற்ற சில சம்பவங்களை விவரிக்கும் நேரத்தில் துள்ளி வருகுது வேல் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். அதில் ஒரு தகவல் பிழை இருக்கிறது. பொதுவாக திமுக அதிமுக பற்றிய பதிவுகள் இடம் பெறும்போது அதில் தகவல் பிழைகள் இருந்தாலும் அதை சுட்டிக் காட்ட நான் விரும்புவதில்லை. ஆனால் இன்றைய பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள துள்ளி வருகுது வேல் படத்தில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருந்ததால் இதை சுட்டிக் காட்ட விழைகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு சற்றே பின்னோக்கி போனோமென்றால் அதாவது 1979 ஜூன் மாதம். தஞ்சை நாகை மக்களவை தொகுதிகளான இடைத்தேர்தல் நடைபெற்ற நேரம். 1978-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிக்மகளூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னை இந்திராகாந்தி அவர்கள் அன்றைய ஜனதா அரசால் impeachment என்ற முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் போட்டியிட அவர் தஞ்சை தொகுதியை தேர்வு செய்ததும், முதலில் ஆதரவு தருவதாக சொன்ன எம்ஜிஆர் அவர்கள் பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்திராகாந்தி அவர்கள் வேட்பாளராவதற்கு தருவதாக சொன்ன ஆதரவை விலக்கி கொள்ள பிறகு சிங்காரவடிவேலு போட்டியிட்டது பற்றியெல்லாம் இங்கே நிறைய பேசியிருக்கிறோம்.
பிறகு மொரார்ஜி தலைமையிலான ஜனதா அரசுக்கு அதிமுக ஆதரவு தந்து பிறகு அந்த ஆட்சி கவிழ்ந்தவுடன் சரண்சிங் தலைமையிலான ஆட்சியை ஆதரிக்க அந்த ஆட்சியும் பாராளுமன்றத்தை சந்திக்காமலே ராஜினாமா செய்தது. மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முந்திய காலகட்டம். அன்றைக்கு ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும் ஒரிசா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து பின்னர் பெருந்தலைவர் கொண்டு வந்த K பிளான் காரணமாக 1963-ல் பதவி விலகியவரும் பின்னர் 1989-ல் மீண்டும் முதல்வரானவருமான [இந்தியாவிலேயே ஒரே மாநிலத்தில் மிக நீண்ட இடைவெளியில் 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்கும் உரியவர்] பிஜு பட்நாயக் [இன்றைய ஒரிசா அல்லது ஓடிஸா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தையும் ஆவார்] இரண்டு கழகங்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு 1979 செப்டம்பர் மாதம் 11 அல்லது 12 -ந் தேதி [என்று நினைவு] சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் எம்ஜிஆர் அவர்களையும் கருணாநிதி அவர்களையும் சந்தித்து பேச வைத்தார்.
ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி வெற்றியடையாமல் போகவே செப்டம்பர் 13 அன்று [நினைக்கிறேன்] திமுக தலைவர் டெல்லி சென்று இந்திரா காந்தி அம்மையாரை சந்தித்து பேசி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலை காங்கிரஸ் திமுக கூட்டணியாக சந்திக்கும் என்று முடிவு செய்து அறிவித்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சஞ்சய் காந்தி அவர்கள் ஒரு நாள் பயணமாக சென்னை வந்து அன்றைய தினம் கொட்டும் மழையிலும் நனைந்துக் கொண்டே தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது ஊழியர் கூட்டத்தில் பேசுவது போன்றவற்றில் ஈடுபட்டார். அதன் பிறகு செப்டம்பர் 30 ஞாயிறு அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இந்திரா அம்மையாரும் கருணாநிதி அவர்களும் கலந்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்திற்கு துவக்கமிட்டனர். அன்றைய பொதுக்\கூட்ட மேடையிலே அதற்கு மறுநாள் பிறந்த நாள் கொண்டாடவிருந்த நடிகர் திலகம் அவர்களுக்கு அன்னை இந்திரா அவர்கள் வாழ்த்து சொன்னார்.
இந்த கூட்டம் நடந்து சுமார் ஒரு வாரத்திற்கு பின்பு சென்னையில் கர்ணன் கணேசன் ரசிகர் மன்றம் சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா உடலாண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தப்பட்டு அதற்கு சிறப்பு விருந்தினராக திரு கருணாநிதி அவர்கள் கலந்துக் கொண்டார். அங்கே இருவரும் தங்களின் பழைய நட்பான நாட்களை அசை போட அப்போதுத் அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் வருமா என்ற கேள்வி எழுப்ப அதற்கு உறுதியாக பதில் சொல்லாமல் பார்க்கலாம் என்று சொன்னார் திமுக தலைவர்.
அதன் பிறகு சில நாட்களிலேயே தினத்தந்தி நாளிதழில் முழுப்பக்க விளம்பரமாக எழுத்தின் வேந்தரும் நடிப்பின் வேந்தரும் இணைந்து வழங்கும் என்ற அடைமொழியோடு துள்ளி வருகுது வேல் விளம்பரம் இடம் பெற்றது அதன் பிறகு மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்த படம் தயாராகி வெளிவருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது தேர்தல் முடிந்த பிறகே வெளிவரும் என பதிலளித்தார் கருணாநிதி.
மக்களவை தேர்தல் முடிந்த பிறகு என்ன காரணங்களினாலோ துள்ளி வருகுது வேல் திரைப்படம் ஆரம்பிக்கப்படாமல் அதற்கு மாற்றாக பூம்புகார் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மாடி வீட்டு ஏழை என்ற படம் தொடங்கப்பட்டு அதற்கு திரு கருணாநிதி அவர்கள் வசனம் எழுத நடிகர் திலகம் தந்தை மகன் இரட்டை வேடங்களில் நடித்து அந்தப் படம் 1981 ஆகஸ்ட் 22 அன்று வெளியானது.
ஆகவே நீங்கள் குறிப்பிட்டது போல் 1980 மக்களவை தேர்தலுக்கு பின் துள்ளி வருகுது வேல் அறிவிக்கப்படவில்லை. 1979 அக்டோபரிலேயே அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு முறை விளம்பரம் வந்ததுடன் சரி. பின்னர் வேறு எந்த விளம்பரமோ செய்தியோ 1980 மக்களவை தேர்தலுக்கு பின் வரவில்லை என்பதுதான் உண்மை.
பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் திமுக அதிமுக அறிக்கைப் போரில் உள்ளே நுழைய விரும்பவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிடும் தகவலில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பதனால்தான் அந்த தகவல் பிழையை சுட்டிக் காட்ட இத்துணை விளக்கமாக சொல்ல வேண்டியதாகிப் போயிற்று.
நான் எழுதியவற்றை சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
துள்ளி வந்ததது துப்பாக்கியா?
நடிகர்திலகத்தின் விழிகளே!
http://i1065.photobucket.com/albums/...pski7wiofu.jpg