இசை- விமர்சனம் www.dailythanthi.com
கதாநாயகன்–கதாநாயகி: எஸ்.ஜே.சூர்யா–புதுமுகம் சாவித்ரி.
டைரக்ஷன்: எஸ்.ஜே.சூர்யா.
கதையின் கரு: தன்னிடம் உதவியாளராக இருந்த இளம் இசையமைப்பாளரை அழிக்க முயற்சிக்கும் பிரபல இசையமைப்பாளர்.
‘‘இசை என்றாலே நான்தான்’’ என்று மார்தட்டிக் கொள்கிற பிரபலமான இசையமைப்பாளர், வெற்றி செல்வன். அவரிடம் உதவியாளராக இருந்த சிவா இசையமைப்பாளராக அறிமுகமாகி, குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகி விடுகிறார். திரையுலகம் முழுவதும் சிவாவின் பின்னால் செல்ல–வெற்றி செல்வன் கூடாரம் காலியாகிறது.
சிவா, இசைக்கோர்ப்புக்காக ஒரு மலைப் பிரதேசம் செல்கிறார். அங்கு ஜென்னியின் அழகில் மயங்கி, அவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார்.
சிவா மீது பொறாமை கொள்ளும் வெற்றி செல்வன், ஒரு கட்டத்தில் அவரை அழிக்க சூழ்ச்சி செய்கிறார். சிவாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, அவரை மனநோயாளியாக மாற்ற முயற்சிக்கிறார். தன்னை சுற்றி என்னவோ நடக்கிறது என்பது சிவாவுக்கு புரிகிறது. ஆனால், அது தன் குரு விரித்துள்ள சதி வலை என்பது அவருக்கு புரியாமல் போகிறது.
புரியும்போது என்ன ஆகிறார்? என்பதே கதை.
இசை மீது அபாரமான ஈடுபாடு கொண்ட இளம் இசையமைப்பாளர் சிவாவாக எஸ்.ஜே.சூர்யா, கதாபாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார். காட்டுக்குள், சாவித்ரியின் அழகில் மனம் பறிகொடுப்பது; அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக, பாவமன்னிப்பு கொடுக்கும் பாதிரியாராக மாறுவது; ஸ்டூடியோவில் காணாமல் போகும் பையை நினைத்தும், கேட்டுக்கு வெளியே தன்னைப் பார்த்து சிரிக்கும் ஆசாமியை பார்த்தும் ஆத்திரம் கொள்வது; மனைவி வயிற்றில் இருக்கும் தன் சிசு கலைந்து போகாமல் இருக்க, அதனுடன் பேசி உருகுவது என படம் முழுக்க, இதுவரை பார்த்திடாத எஸ்.ஜே.சூர்யா.
இவருடைய அழகான கண்டுபிடிப்பு, சாவித்ரி. கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடித்து இருக்கிறார்.
‘‘இசையே நான்தான்’’ என்ற கர்வம் மிகுந்த இசையமைப்பாளர் வெற்றி செல்வனாக, சத்யராஜ். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்து பிறகு புகழ் மங்கிப்போன ஒரு இசையமைப்பாளரின் ஆதங்கத்தையும், ஆவேசத்தையும் சகுனித்தனமாக வெளிப்படுத்தும் வேடம். கலக்கியிருக்கிறார், சத்யராஜ்.
புதுசாக ஏதாவது வேண்டும் என்று கேட்கும் டைரக்டர் அழகம்பெருமாள் முகத்தில், ‘‘தூ...தூ...’’ என மெட்டு போடுவது போல் எச்சில் உமிழ்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தும் போதும், வீட்டு வேலைக்காரர் கஞ்சா கருப்பு நடந்து வரும் ஓசையிலேயே அவர் தன்னை அலட்சியப் படுத்துவதை கண்டுபிடித்து அறையும் போதும், சத்யராஜ் வில்லாதி வில்லன்.
கஞ்சா கருப்பு, ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிக்க வைத்து இருக்கிறார். சத்யராஜின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இவர் மனதுக்குள் ‘கமெண்ட்’ அடிப்பது, ஆரவாரமான நகைச்சுவை.
பாதிரியாராக தம்பிராமய்யா, சாவித்ரியின் அப்பாவாக ராஜா, டைரக்டராக அழகம்பெருமாள் என படத்தில், விரல் விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள்.
பாடல்கள் எல்லாமே முணுமுணு ரகம். குறிப்பாக, ‘‘இசை வீசி...’’ பாடலில், மனதை மயக்கும் இசை. இசையமைப் பாளராகவும் எஸ்.ஜே.சூர்யா வெற்றி பெற்று இருக்கிறார்.
இடைவேளை வரை காதலும், கலகலப்புமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா. பாதிரியார் வேடத்தில், சாவித்ரியிடம் அவர் செய்யும் குறும்புத்தனங்கள் அடுத்தடுத்து வருவதால், அலுப்பு. இடைவேளைக்குப்பின், யூகிக்க முடியாத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக போகிறது, படம். முடிவு, எதிர்பாராத ‘சஸ்பென்ஸ்.’