Quote:
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் டி.வி. ``தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு'' எனும் தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை தேர்வு செய்யும் போட்டியை நடத்தி வருகிறது.
கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 6 மண்டலங்களிலிருந்து சுமார் 200 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 30 பேரை தேர்ந்தெடுத்தனர். `பழமொழிக் குட்டிக்கதை,' `காட்சிக்கு பேச்சு சுற்று', `பட்டிமன்ற சுற்று', `சிலேசை', `ஓவியச் சுற்று', `வாதம் விவாதம்', `அரசியல் விவாத மேடை', `மக்கள் மனசு சுற்று' போன்ற புதிய பல சுற்றுகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லை கண்ணன் இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து சிறப்பித்துள்ளார். இவரோடு நெல்லை ஜெயந்தா, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத், `நக்கீரன்'கோபால், நடிகர் சிவகுமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் வசந்தி ஸ்டான்லி, மலைச்சாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு நடுவர்களாக பங்கு பெற்றனர்.
பேச்சாளர்களின் தமிழ் ஆற்றலை சோதித்து சிறந்த பேச்சாளரை தேர்ந்தெடுப்பதோடு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப்படுகிறது.
விஜயன், அருள் பிரகாஷ், அபிராமி ஆகியோரே இறுதி சுற்றின் போட்டியாளர்கள்.இறுதிச் சுற்றுக்கான போட்டி சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடந்தது.
புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மூன்று இறுதிச் சுற்று போட்டியாளர்களும் முதலில், ``தமிழன்... நேற்று, இன்று, நாளை,'' எனும் தலைப்பின் கீழ் பேச அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் பேச தலா 15 நிமிடம் வழங்கப்பட்டது.
அதிக வாக்குகள் பெற்று, அருள் பிரகாஷ் மற்றும் விஜயன் இரண்டாம் கட்ட இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் இந்த இருவருக்கும் ``நாடு எங்கே போகிறது'' எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இறுதியில் சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் வாக்கெடுப்பின் மூலம் தமிழகத்தின் சிறந்த பேச்சாளராக விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஜயன் படித்து வளர்ந்தது தஞ்சையில், இவருக்கு அரசியல் மீது பற்று அதிகம். மேடை பேச்சாளர்களை பார்த்து, அவர்களின் தமிழ் பேச்சுக்களை கேட்டே தனக்கு தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது என்று கூறுகிறார்.
தனக்கு கிடைத்துள்ள இப்பரிசுத் தொகையை கிராமங்களில் வாழும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப் போவதாக தெரிவித்தார்.
அண்ணா கலையரங்கத்தில் நடந்த இறுதி சுற்று நிகழ்ச்சி தொகுப்புகள் 11-ந் தேதி காலை 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.
dailythanthy-muthusaram