-
மக்கள்ளாம் செளக்கியமா
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டுத்திண்ணையைக் கடக்கும்போதும்
வெற்றிலையை
உரலில் இடித்த படி
கேக்கும் பொன்னாயிக் கிழவி..
இடிக்கும் இசைக்குத் தக்கபடி
காதில் தண்டட்டிகள் ஆடும்..
நான் சொல்வதை
நிதானமாய்க் கேட்டு
எல்லாம் சரியாய்டும்ல
மூத்த பொண்ணு என்ன
பூரட்டாதியா அப்படித் தான்
கொஞ்சம் படுத்தும்..
பையன் ரேவதில்ல
நலல் வேலை அமஞ்சுடும்..
இன்னும் பலவிதமாய்ப் பேசும்..
ஒரு நாள் பார்த்த போது
அதே கேள்வி
நானும் பதில் சொன்னேன்
இருந்தாலும் ஏதோ
இல்லாதது போல்..
அட தண்டட்டி
கேட்டும் விட்டேன்..
அதுவா
என்ன நான் ..இந்த நட்சத்திரம்ல
கொஞ்சம் கிரகம் சரியில்லையாம்
பாங்க்ல வச்சுருக்காம் பையன்..
மோரு குடிக்கறீகளா..
ஏட்டி... மோரு கொடு..
உள்ளிருந்து மருமகள்
டம்ப்ளரில்
மோரு கொடுத்த போது
மின்னியது அவள் கைகளில்
வளையல்கள்..
-
வளையல்கள் பூட்ட ஓடி வாருங்க
வயிற்று மேட்டை வந்து பாருங்க
வெட்டவெளிச்சமானது அந்தரங்கம்
வெட்கத்தில் மின்னுது அவளங்கம்
-
அவள் அங்கத்தில் சின்னதாய்
தங்கமுலாம்
திடீரென யார் செய்தது..
ஓ
உள்ளே புகுந்து விட்ட
இளஞ்சூரியனின்
கிரணங்க்ள்
வெளிப்படுகிறதோ மெல்ல
-
மெல்ல நகரும் கடிகார முள்
காத்திருக்கையில்
கடகடவென ஓடும்
களித்திருக்கையில்
காலத்திற்கு நிலையான வேகம்
மனம் மயங்கிக் காணும் பேதம்
-
பேதம் எதில்தான் இல்லை
பிறப்பில் வளர்ப்பில் இறப்பில்
சாதியில் மதத்தில் இனத்தில்
உணவில் உடையில் உறவில்
தொழுகையில் சடங்கில் தெய்வத்தில்
நட்பில் ரசனையில் அபிப்ராயத்தில்
மொழியில் கலாச்சாரத்தில் பண்பாட்டில்
ஊரில் மாநிலத்தில் நாட்டில்
நீக்கமற நிறைந்து இருக்கிறது
மனிதமற்ற சமுதாயத்தில்
-
சமுதாயத்தில் கற்றுயர்ந்தோம்
சரித்திரத்தைப் படைத்தோம்
சார்ந்து வாழும் கலையறிந்தோம்
சகோதரர்களாய் வாழ்ந்திருந்தோம்
பார்க்கவும் பேசவும் வினையாற்றவும்
பொதுவான பல இடங்கள் காலங்கள்
பழக்கங்கள் மறந்து வருகிறோம்
பார்க்காமல் பழகி பகிர்ந்து உருகி
பொய் சமுதாயங்கள் உருவாக்கினோம்
பொழுதுக்கும் அத்தளங்களை நாடி
பறக்கிறோம் புது சமுதாய வானிலே
புரியவில்லை போக்கும் அதன் இலக்கும்
-
அதன் இலக்கும்
பாதையும் தெரியாமல் தான்
பறந்து கொண்டிருந்தது அந்தப் பறவை
எங்கு பார்த்தாலும் நீர்..
தெரிந்ததெல்லாம் தூங்கிய இடம் மட்டும் தான்
அதுவும் நகர்ந்து கொண்டிருக்கிறது..
நடுக்கடல் தான்
கரை எப்போது வரும்
யாரைக் கேட்பது
தெரியவில்லை..
திக்கித் திணறி
உறங்கிய கப்பலின் மேல்தளத்தில்
அமர்ந்து
உருகியதந்தப் பறவையில்
தெரிந்தது பாசுரம்
-
பாசுரம் பாடி
பூச்சரம் ஏந்தி
பாவை சென்றாள்
பரமனை நாடி
-
நாடி வந்தேன் உன்னை
என
குடுகுடுவென உச்சிக்கிளையில்
பூ பறித்து வந்து காதலியின்
அன்பை பெற
ப்ஹா ப்ஹாவென்
மூச்சிரைக்க
காதலன் கொடுத்தது அந்தக் காலம்..
பூங்கொத்துக் கடைக்கெல்லாம் போகமலே
பணம் கட்டி
காதலிகளுக்கு அனுப்புகிறார்கள் காதலர்கள்..
என்ன
அந்த ப்ஹா எனப்படும்
உயிர்த்துடிப்பு மட்டும்
கொஞ்சம் குறைவாய்
-
குறைவாய் கொடுக்குமாம் தெய்வம்
தன்னிடம் நலன்களை வாங்கிட
பெரிய கூடையுடன் வருபவளுக்கு
நிறைத்து அனுப்புமாம் அத்தெய்வம்
மற்றவள் கொண்டு வந்த சின்னக் கூடையை
வயக்காட்டு உரமாய் பாட்டியின் போதனைகள்
வசவோடும் பழமொழியோடும் கேட்டவள்
வளர்ந்தேன் நேராய் வாழ்கிறேன் நலமாய்
ஒழித்தேன் பேராசை பெற்றேன் அடக்கம்
திருப்தியின் அருமை அறிவீர் அனைவரும்
-
அனைவரும் வருக
என்ற
பொதுக்கூட்ட அழைப்பிதழ் பழைய சுவரொட்டி
கிழிந்து தொங்க
உள்ளேயும்
பழைய போஸ்ட்ர்
யாரோ தொண்டனின்
கண்ணீர் அஞ்சலி...
-
அஞ்சலி அஞ்சலி
எங்கும் அஞ்சலி
எல்லாம் அஞ்சலி
அழகான அஞ்சலி
கரையை வருடும்
கடலின் காதல்
மண்ணை மூடும்
மலர்கள் மோகம்
வானில் தவழும்
மேகம் மோகம்
நதியின் சங்கமம்
ஒப்பிலா ஆராதனை
உலகில் உன்னதம்
அன்பின் சமர்ப்பணம்
-
சமர்ப்பணம் கிருஷ்ணா
உனக்கே அர்ப்பணம்
சொல்லி
அம்மா
ஒவ்வொருமுறையும்
உணவு உண்ணும் போதும்
ஹால் கிருஷ்ணர் படத்துக்கு
கண்கள் செல்லும்.
கிச்சாவின்
வாய் முழுக்கச் சிரிப்பு தெரியும்
வயிறு நிரம்பிய தொப்பையுடன்..
-
தொப்பையுடன் ஓடி துரத்திப் பிடிக்க
ரொம்பவும் கடினமாகப் பட்டது
மொட்டைச் சுவரை தாண்ட முடியவில்லை
பார்வையிலிருந்து மறைந்தே விட்டான் திருடன்
கால்தட்டி கண்ணடைத்து மூச்சு வாங்கியதால்
அருகேயிருந்த பொட்டிக்கடையில்
ஆற அமர ஓய்வெடுத்து ஓசியில் சோடா குடித்து
ஸ்டேஷன் திரும்புகையில்
வேகமாக வந்த வாகனங்கள் இரண்டை
நின்றபடியே பிடித்து பாக்கட் நிரப்பி வந்தார் ஏட்டையா
திருட்டுத் தொழில் பலரைப் பாதிக்கிறது என்பது
திருடனுக்குத் தெரியவேயில்லை
-
தெரியவேயில்லை
எண்ணவோட்டங்கள்
ஒப்பனை பூச்சும்
பதறாத பாங்கும்
பணிவான தொனியும்
குலையாத துணிவும்
அபார பொறுமையும்
சலைக்காத பதில்களும்
விலகாத புன்னகையும்
சமயோசித சமாளிப்பும்
வரவேற்புப் பணி பெண்கள்
அதிசயமான பதுமைகள்
-
ப்துமைகள்
தங்களுக்குள் சிரித்துக் கொண்டன..
...சிறுவனாக இருந்த போது
விளையாட்டாய் ஓடி வந்து தொட்டுப் பார்த்த அவன்..
வாலிபத்தில்
தங்களருகே வந்து வியந்து நோக்கியதும்
பின் இன்று
புது மனைவியுடன் அருகில் வருகையில்
திரும்பிக் கூடப் பார்க்காமல்
அவளிடமே பேசியபடி போவதும்..
ஒரு ப்துமை சொன்னது..
பாரேன்.. நாம் நிற்கிறோம்
அவன் நடக்கிறான்..
அங்கு
சிரிப்பு எழுந்தது பொங்கி...
-
பொங்கி வரும் பால் அடங்கும் நீர் தெளித்து
கடலும் மனமும் அடங்குமா கட்டுப்பட்டு
தேசிங்கு ராஜன் கையிலென்ன மாயமிருக்கு
கடுந்தவ முனிவரிடம் எவ்வளவு பலமிருக்கு
கடிவாளம் போட சித்துகள் செய்ய எடு முயற்சி
குவிந்த முனைப்புடன் சாதிக்க உதவும் பயிற்சி
-
பயிற்சி முடித்து
வியர்வைத் துளிகளை
துண்டினால் ஒற்றியெடுத்தாள்..
துண்டு மேலும் ஈரமானது
ஆனந்த்க் கண்ணீரால்..
-
கண்ணீரால் மாற்றி எழுதப்படும் சரித்திரம்
வயிறு காய்ந்தவர் பொங்கியெழுந்தால் புரட்சி
வேசமான அழுகையும் பாசத்தை அசைக்கும்
அழுத பிள்ளைதான் பால் குடிக்குமென்றறிவர்
கள்ளமில்லா குழந்தையும் கபடமான மாந்தரும்
முதலைக் கண்ணீரை அறிந்திட வேணும் ஞானம்
-
ஞானம் என்பதாம்
கேட்டல் தீக்குச்சி உரச
சிந்திந்தல் வாயுவின் துணையோடு
தெளிதல் சுவாலையுடன்
அணையாச் சுடர்விடும் ஒளி
-
ஒளி வரும் முன்னே
ஒலி வரும் பின்னே
மின்னலது முந்தும்
இடியதை தொடரும்
ஒலி முந்தும் தருணம்
யானை மணியோசை
ஒலியும் ஒளியும் இணையும்
பெரிய சின்னத் திரைகளில்
கணிணியில் மடியில் கையில்
தகவல் தொடர்பு யுகமிதில்
எண்ணிலா அதிசய சாதனம்
கூடிடும் பரிமாணங்கள் நூதனம்
-
நூதனமாய் இருந்தது
அந்த நகை..
ரோஜா நிறத் தங்கம், வைரக்கற்கள் பதித்து..
சரியான வேலை வாங்கியிருக்கும்..
வெகு நுணுக்கம் தான்..
முழுக்கக் கை வேலை..
பதிவு எடுத்து இன்ன பிற செய்து...
வெகு நல்ல வேலை..
அந்தப் பெரிய கஸ்டமர்..
ஒரு கம்பெனியின் எம்டி
கூப்பிட்டால் வந்து
அள்ளிக்கொண்டு போய்விடுவார்..
ம்ம்
எண்ணவோட்டத்துடன் நிமிர்ந்தால்
ஆசாரி
கண்ணில் ஆர்வம், உடையில் வறுமை..
முகம் கல்லாய் மாற
எவ்ளோ நாள் ஆச்சு
எவ்வளவு கேக்கற
வேலை பாருஙக்..
ஒண்ணரை மாசம் ஆச்சு
4 லேபர் வச்சிருந்தேன்..
ம்ம் முடியாதுப்பா
சரி என்னவோ சொல்றே
தர்றேன்..
இன்னொண்ணு வேண்டும்
அதுவும் ஒருமாசத்துக்குள்ள..
தயங்கினான்
கஷ்டம்ங்க..
ஒண்ணுமே கஷ்டம் இல்லை
வாழ்க்கையில்..
இந்தா சரியா இருக்கா..
சரிங்க..
பண்றதுக்கு தங்கம் வைரம் எல்லாம்..
நாளைக்கு வந்து பாரு..
சரி சொல்லி
கதவைத் தள்ளி ஆசாரி வெளியே போக
அவன் முதுகில் அறைந்தது
கதவும்..
-
கதவும் ஜன்னலும் மூடிய
இதமான செயற்கைக் குளிர்
ஏனோ எனக்கு பிடிப்பதில்லை
வேர்வையும் தூசியும் பழகியவை
வெட்டவெளி காற்றும் காட்சியும்
தராத சுகமா என்பதென் தாபம்
-
தாபம் கொண்டு
பாராமல் பார்க்கும் பார்வை
எனக்குப் புரியாதா என்ன..
விமான நிலையம் போகிறேன்
என்றவுடன்
உன் அம்மா அப்பா
தங்கை தம்பி
குதிகுதித்து வந்து விட்டார்கள்..
ரெண்டு கார் எடுத்துக்கலாம்
என்று
பெருந்தன்மை வேறு..
இரண்டரை வருடம் பிரிந்திருந்து
நீ வருகிறாய் என
எப்படிச் சொல்வது..
கேட்டால் அவர்களும் தான்
அப்படி இருந்தார்கள் எனச் சொல்வார்கள்..
ஆனாலும் நீ மோசம்
ஏன்முகம் சுருங்கினாய்..
ஆசையாய்த் தானே
உன் தங்கை தம்பி
காரினுள் அருகில்...
அவ்வப்போது முறைப்பது
புரிகிறதெனக்கு..
தோ..இன்னும் ஒரு மணி நேரம் தான்..
வந்துவிடும் அண்ணா நகர்..
பொறுத்துக்கொள்..
ம்ம்..
இது நான் உனக்குச் சொல்லவில்லை
எனக்குச் சொன்னேன்..!
-
சொன்னேன் என் முடிவை
மேசை முன் அமர்ந்து
இட்லி தோசை பிடிக்கும்
வடை பொங்கலும் நன்று
பூரியும் கிழங்கும் அருமை
பரவாயில்லை இன்றைக்கு
எனக்கும் நான் குல்ச்சா
பிச்சா கார்லிக் பிரெட்
ஃப்ரைட் ரைஸ் ஃபிங்கர் சிப்ஸ்
தொட்டுக்கொள்ள சீஸ் சாஸ்
ஒத்து வாழ்வது முக்கியம்
புதுமையில் நான் ஐக்கியம்
-
ஐக்கியம் ஆவதற்கு
இன்னும் மனது
பக்குவப் பட வேண்டும்
என நினைத்தபடியே
இஷ்டத்துக்கு வாழ்ந்தாயிற்று..
நோய்வாய்ப்பட்டு
போகும்காலம்
வந்தது தெரிந்தபோது
சங்கரா சொன்னால்
தெரிகிறது
இறைவன் முகத்தின்
புன்னகையில் ஏளனம்..
-
ஏளனம் செய்வோர் துணிவில்லாதோர்
ஆசைபட்டபடி அலங்காரம் செய்திட
மனம் போல் பொழுதை போக்கிட
இணையத்தில் இஷ்டம் போல் மேய
வயதும் பாலும் தடையேயல்ல
சொல்வது ஒரு நவயுகத்துப் பாட்டி
-
பாட்டி சொன்ன கதைகள்
நெட்டில் உண்டு
கதை சொன்ன பாட்டிகள்தான்
வீட்டில் இல்லை.
-
கிறுக்கன்.
-
இல்லை என்பது எதிர்மறை சொல்லா
சொல்லத் தெரியவில்லை உறுதியாய்
குழந்தையும் குமரியும் சரளமாய் கூறும்
இச்சொல்லில் கபடம் தெரியும் அப்பட்டமாய்
-
அப்பட்டமாய்த் தான் தெரிந்தது
புதுமுக நடிகையின் புகைப்படத்தில்
அவளது புற அழகும்
அதையும் மீறி
மன சோகமும்
-
சோகமும் கரையும்
காலைப் பனியாய்
மாலை நிழலாய்
சோப்பு நுரையாய்
வானவில்தானாய்
இசை கேட்கையில்
இயற்கையின் மடியில்
இணைய மேய்ச்சலில்
-
//கிறுக்கனின் இடுகை:
பாட்டி சொன்ன கதைகள்
நெட்டில் உண்டு
கதை சொன்ன பாட்டிகள்தான்
வீட்டில் இல்லை.
The trick is to click seetings at the top of the page->Tools->encoding->unicode//
-
மேய்ச்சலில் மாடுகளை விட்டுப் பொடிநடையாய்
ஓடைப் பக்கமிறங்கி கையள்ளி முகங்கழுவி
மேட்டோரம் கூடை கூடையாய் பில்லறுக்கும்
ராதைநோக்கி காதல் நடையளந்தான் கண்ணன்.
-
கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
மன்னவன் நெஞ்சைக் கொண்ட
..மாயவன் எங்கு சென்றான்
வண்ணமாய்ப் பட்டுச் சேலை
..வாட்டமாய் நகைகள் பூண்டு
கன்னிநான் நிற்குங் காலம்
..கடுகியே வரச்சொல் தோழி..!
-
தோழி பாத்திரம் தவறாமல் இருக்கும்
பழைய ராஜா ராணி திரைப்படத்திலே
அரசகுமாரியின் அந்தரங்கம் அறிவாள்
அவளுடன் ஆடிப் பாடுவாள் விளையாடுவாள்
காதல் தூதும் சென்று வருவாள் அப்படியே
தலைவனின் தோழனுடன் பிரியமாகிடுவாள்
எத்தனை கதையில் பார்த்தும் அலுப்பதில்லை
இன்று எண்ணுகையில் ஏனென்று புரியவில்லை
-
ஏனென்று புரியவில்லை
நஞ்சை கொண்டு
நெஞ்சை நக்கும்
நயவஞ்சகரிடம்
நாட்டினர் மயங்குவது.
-
கிறுக்கன்
-
மயங்குவது போலத் தான்
தெரிந்தாலும்
அப்படி இல்லை என
அவனுக்கும் தெரியும்..
எனக்கும்..
என்ன செய்வது..
சின்னச் சின்னப்பொய்களால்
தான்
வாழ்க்கை ஆகும் சுவாரஸ்யம்
-
சுவாரஸ்யம் நிரம்பிய கதை
பேரன்கள் சிபாரிசு செய்த கதை
பிள்ளைப் பிராயத்துக்குப் பிரயாணம்
புத்தகத்தை கீழே வைக்க முடியாமல்
பிராண்டி இழுக்கும் கடமையெண்ணி
புழுவாய் தவிக்க என்னவொரு இம்சை
-
இம்சையா உதைப்பேன் நானும்.
.இருமினால் குறைந்தா போகும்
கம்மென இருடி, அம்மா
...கண்களைத் திறந்து கொள்வாள்
நிம்மதி கொஞ்சம் கூட
..நிஜத்திலே கண்ட தில்லை
நம்மவன் என்றே வந்தாள்
...நலமெனத் துயில்கொள் ளட்டும்
என்னவர் இருக்கி றாரே
..இவர்க்கிணை எங்கும் ஏது
திண்ணமாய்ப் பெற்ற நான்கில்
...தெளிந்தநல் மூத்த பிள்ளை
அன்னையோ தனது சொத்தை
...அடுத்தவர்க் கெழுதி னாலும்
தன்னலம் இல்லா இந்தத்
...தனயனை நாடி வந்தார்..
நல்லவர் என்ற பேர்தான் நானிலம் மீதில் உண்டு
...வல்லவர் என்ற பேரும் வஞ்சிநான் அறிவேன் போதும்
கள்ளமாய் மற்றோ ரெல்லாம் கறந்திட இவரோ இன்று
...வெள்ளமாய் அன்பைத் தந்தால் இவரையே என்னவென்பேன்
-
என்னவென்பேன் உன் கைராசியை
தொட்ட இடமெல்லாம் சூன்யமாய்கிறது
பச்சை மரமே பட்டுப்போய் விடுகிறது
என்ன சொல்வேன் உன் வாய்முகூர்த்தத்தை
ஆறுதல் சொன்னால் நிம்மதி தொலைகிறது
ஆசிகள் வழங்கினால் ஆயுளே குறைகிறது