Quote:
ஜாலி சுயம்வரம்
தமிழகத்தின் அழகிய ஆண்மகனை தேர்ந்தெடுக்கும் போட்டி நேயர்களை கவர்ந்துள்ளது. விஜய் டிவியில் வெளிவந்த விளம்பரங்களைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து 200 ஆண்கள் முதற்கட்ட தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவருக்கும் பிரத்தியேக மாப்பிள்ளை அழைப்பைப்போன்ற பிரம்மாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது.
அனைவருக்கும் மாப்பிள்ளை அந்தஸ்து அளிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள வாத்தியங்களோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதற்கட்ட நேர்முகத் தேர்வில் திவ்யதர்ஷினி, சுவி, ப்ரியா மற்றும் திவ்யா ஆகியோர் வந்திருந்தவர்களின் திறமையை சோதிக்க பலதரப்பட்ட கேள்விகளை கேட்டனர். இவர்களுடன் மைக்கேல், கிரேக், சிவகார்த்திகேயன், மணி ஆகியோரும் பலதரப்பட்ட தகுதிச்சுற்று கேள்விகளை கேட்டு போட்டியாளர்களின் திறமையை சோதித்தனர்.
இவர்களின் திறமையை மறைமுக நடுவர்களாக இருந்து டாக்டர் ஷாலினி, சத்யா, ஸ்டீபன், மீனா கந்தசாமி ஆகியோர் மதிப்பிட்டனர். இறுதியாக 28 திறமையான ஆண்மகன்கள் சுயம்வரத்துக்கு தேர்வாகியுள்ளனர். இனி வரும் வாரங்களில் இவர்கள் 28 பேருக்குமிடையே பலவித போட்டிகள் நடக்கவிருக்கிறது. இந்த போட்டியாளர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாக மூன்று குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளனர்.
தாரை, தப்பட்டை, யானை, குதிரைகளுடன் பிரம்மாண்டமாக இந்த `அழகிய தமிழ் மகன்'கள் மன்னர்களைப் போல் ஆடை அணிந்து போட்டிக்குள் நுழைகின்றனர்.
இனி இடம் பெறும் சுற்றுகளில் இவர்களின் தனித்திறமைகள் சோதிக்கப்படும். மேலும் இந்த நிகழ்ச்சியில் குஷ்புவின் குதூகலமும் உற்சாகமும் தமிழ்மகன்களுக்கு ஒரு போனஸ்.