திரைக்கு வருகிறது 'வாலு': நடிகர் சிம்பு உற்சாகம்
'வாலு' படத்துக்கு இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்த நிலையில், அப்படம் வெளியாவது குறித்து நடிகர் சிம்பு உற்சாகமாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.
ஜூலை 17-ம் தேதி 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 'வாலு' படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் வாலு' ரிலீஸ் ஆகவில்லை. தற்போது, மேஜிக் ரேஸ் நிறுவனம் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, மேஜிக் ரேஸ் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் அளிப்பதாக உத்தரவாதம் தந்ததால் சிக்கல் தீர்ந்தது எனத் தெரிகிறது.
'வாலு' படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிய வழக்குகள் திரும்பப்பெற்ற நிலையில், படம் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது.
வாலு படத்துக்கு இருந்த நீதிமன்ற சிக்கல்கள் தீர்ந்தன என்றும், விரைவில் படம் வெளியாகும் என்றும் சிம்பு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆகஸ்ட் 14ல் 'வாலு' ரிலீஸ் ஆகும் என்று வேறு சிலர் பகிர்ந்த தகவலை உறுதி செய்யும் விதமாக அவர் ரீட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, 'வாலு' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் பண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.