எல்லாப் படங்களுக்கும் சிக்கல்? கடும் அதிர்ச்சியில் முருகதாஸ்? VIKATAN
விக்ரம் நடிக்க விஜய்மில்டன் இயக்கும் பத்துஎண்றதுக்குள்ள படம் திட்டமிட்டபடி முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. முருகதாஸ் தயாரிக்கும் இந்தப்படம் தொடங்கியபோது நன்றாகத்தான் தொடங்கியிருக்கிறது. சிக்கிம் போய்ப் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள். அதன்பின்னர் கோவையில் படப்பிடிப்பு நடத்தியபோது திட்டமிட்டதைவிட இரண்டு மடங்குக்கு மேல் செலவாகிவிட்டதாம்.
இதனால் படத்தை அப்படியே போட்டுவைத்துவிட்டாராம் முருகதாஸ். சுமார் ஐந்துமாதங்கள் அப்படியே கிடந்திருக்கிறது. அதன்பின் நிறையப் பேச்சுவார்த்தைகள் சமரசங்கள் ஆகியன நடந்து மறுபடி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். நேபாளம் போய் அடுத்தகட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார்களாம். இதற்கடுத்து பல்கேரியா போய்ப் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பது படக்குழுவினரின் திட்டம். ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலோ பல்கேரியா போய் வருவதற்கெல்லாம் பணமில்லை. எனவே இந்தியாவுக்குள் எங்கேயாவது போய்ப் படப்பிடிப்பு நடத்துங்கள் அல்லது தமிழ்நாட்டுக்குள்ளேயே எங்காவது படப்பிடிப்பு நடத்தினால் இன்னும் சந்தோசம் என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் விக்ரம் மற்றும் இயக்குநர் விஜய்மில்டன் ஆகியோர் முருகதாஸ் மீது கடும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
முருகதாஸ் தயாரிப்பில் தயாராகும் இன்னொரு படம் ரங்கூன். இந்தப்படமும் ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறதாம். இந்தப்படத்தின் பட்ஜெட்டும் திட்டமிட்டதைவிட அதிகமாகிவிட்டது என்று தயாரிப்புத்தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறதாம். அந்தப்படத்துக்காகப் பர்மா போனஇடத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் நடந்துவிட்டனவாம். படத்தின் இயக்குநர் செய்த குளறுபடிகளும் அதிகம் என்று சொல்கிறார்கள். சரியான திட்டமிடாமல் நிறையச் செலவை இழுத்துவிட்டுவிட்டாராம் இயக்குநர். இதனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டேயிருக்கிறதாம்.
இவ்விரண்டு படங்களுக்கும் முருகதாஸூக்குப் பக்கபலமாக இருக்கும் பெரியநிறுவனம், இப்போது முருகதாஸ் மீது வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, பெரியஇயக்குநர் சொன்னபடி செய்வார் என்று நம்பி ஒப்படைத்தால் இவ்வளவு சிக்கல்கள் வருகிறதே என்று அவர்கள் வருத்தப்படுகிறார்களாம்.
இதுமட்டுமின்றி, வலியவன் படத்தைத் தயாரித்த நிறுவனம் முருகதாஸின் பொறுப்பில் ஒருபடத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததாம். வலியவன் படத்தின் படுதோல்வி மட்டுமின்றி முருகதாஸின் பொறுப்பில் எற்கெனவே இருக்கும் படங்களின் நிலையைப் பார்த்து படத்தைத் தொடங்கவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து தான் கைவைக்கும் எல்லாப்படங்களும் சிக்கலுக்கு ஆளாகி வருவதால் முருகதாஸ் கடும் வேதனையில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.