பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம் " மதுரை வீரன் " கதைச்சுருக்கம்
================================================== ===
துளசி அய்யா : (நடிகர் ஆர். பாலசுப்ரமணி)
வாரணவாசிப் பாளையாதிபதி நான். பிள்ளை இல்லா குறை தீர, என் மனைவி ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள் . கழுத்திலே மாலை இருக்கிறது. நாட்டுக்காகாது என்றார் சாஸ்த்ரீகர் காட்டிலே கொண்டு போய் விட்டு விட்டேன்.
சின்னான் : (கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்)
தொட்டியம்பாளயத்திலே நான் செருப்பு தைக்கிறவனுங்க. நானும், என் பொஞ்சாதி செல்வியுமா காட்டுக்கு போனோம்,. குழந்தையை கண்டெடுத்தோம். "வீரன்" னு பேரு வெச்சோம். நல்லா வளத்தோம். பயலுக்கு, இருபது வயசு ஆனபோது ..........
பொம்மி : (நடிகை பானுமதி)
ஆற்றிலே விழுந்த என்னை காப்பாற்றினார். தொட்டியம்பாளையத்து அரச குமாரி நான். கண்டேன் அவரை, காதலித்தேன், அப்பா பொம்மண்ண மகாராஜா தடுத்தார். நரசப்பன் எனது ..........
நரசப்பன் : ( டி. எஸ். பாலையா)
தாய் மாமன். உரிமை எனக்கு. நானும் தடுத்தேன் அரசரோடு சேர்ந்து. பொம்மியை அரண்மனையிலேயே காவல் வைத்தேன். திருமணத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், அந்த பயல் வீரன், அர்த்த ராத்திரியிலே கன்னி மாடத்தில் புகுந்து அவளை சிறை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். விடுவேனா ? படை கொண்டு மோதினேன். உதை வாங்கி திரும்பினேன். இனி நமது படைகளால் காரியமாகாது என்று தெரிந்து, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கனை நாடினேன். உதவி கோரினேன்.
விஜயரங்க சொக்கன் (திருப்பதி சாமி) :
கோரியதை கொடுத்தேன். வீரனைப் பிடித்து வர பணித்தேன். பிடித்து வந்தார்கள். பார்த்தேன். உண்மை வீரன் என்பதை உணர்ந்தேன். ஆகவே, பொம்மி அவனுக்கே என்று தீர்ப்பளித்தேன். அதோடு, மதுரை மன்னரும், எனது மைத்துனருமான திருமலை நாயக்கருக்குத் தளபதியாக அனுப்பி வைத்தேன்.
திருமலை மன்னன் : (ஒ. ஏ. கே. தேவர்)
வந்தான் வீரன். வரவேற்பு கொடுத்தேன். பழைய தளபதி குடிலனின் பதவியை குறைத்தேன். வீரனை முதல் தளபதியாக ஆக்கினேன். அழகர் மலை, சுருளி மலை, பிரான் மலைக் கள்ளர்களைப் பிடிக்க ஆணையிட்டேன். வீரன் ஊரடங்கு சட்டம் போட்டான். உற்சாகமாகவே பணி புரிந்தான். அப்போது .........
வெள்ளையம்மாள் : ( நடிகை பத்மினி)
அரண்மனை நாட்டியக்காரியான நான் அவரைக் கண்டேன். காதல் கொண்டேன். அவரும், என்னை விரும்பினார். பொம்மி அறிந்தாள். துடித்தாள். என்னிடம் வந்து கெஞ்சினாள் . தன் கணவரை பாராதே என்றாள். சம்மதித்தேன். அப்போதே வீரர் வந்தார். என் மீது ஆசை வைத்திருந்த திருமலை மன்னரும் தவறான பாதையில் இறங்கினார். அவருக்கு துணை புரிந்தது .....................
குடிலன் : ( நடிகர் டி. கே. ராமசந்திரன்) .
நானும், மாறு வேடத்தில் என்னோடு இருந்த நரசப்பனும், நரசப்பன் முறைப் பெண்ணை இழந்தான். நான் பதவி குறைக்கப்பட்டேன். ஆத்திரம் வராதா ?. குற்றங்களை அழகாக ஜோடித்தோம். மாறு கால், மாறு கை வாங்கும்படி ஆணையிட்டான் திருமலை மன்னன். கொலைக்களத்துக்கு அவனை இழுத்து சென்றோம். .................
மதுரை ஜனங்கள் :
செய்தி அறிந்தோம். பொம்மியும், வெள்ளையம்மாளும், ஆவேசத்துடன் கொலைக்களத்துக்கு ஓடிஇருக்கிறார்கள் எபதை அறிந்தோம். இதோ, அங்கே போய்க்கொண்டே இருக்கிறோம். நீங்களும் வாருங்கள், என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் .
குறிப்பு : இந்த கதை சுருக்கம் சற்று புதுமையான முறையில், ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடை மாறாமல், அதே எழுத்து வடிவத்தில் இங்கு பதிவிடப் பட்டுள்ளது.