ஆயிரம் யானை பலமிருக்கும், அல்லிக்கொடி போல் மனமிருக்கும், தாயின் பாசம் நிறைந்திருக்கும், தலைவன் என்று நான்குமறை உரைக்கும்.
http://i41.tinypic.com/2ahaxjn.jpg
http://i39.tinypic.com/sngtpt.jpg
Printable View
ஆயிரம் யானை பலமிருக்கும், அல்லிக்கொடி போல் மனமிருக்கும், தாயின் பாசம் நிறைந்திருக்கும், தலைவன் என்று நான்குமறை உரைக்கும்.
http://i41.tinypic.com/2ahaxjn.jpg
http://i39.tinypic.com/sngtpt.jpg
பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.
பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.
பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.
அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.
எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.
முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.
1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.
சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.
நான் வணக்கம் தெரிவித்தேன்.
பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.
வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன்.
சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.
(அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன்.
‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.
‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.
அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.
அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.
இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.
ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
- நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)
திரு. எம்.ஜி.ஆர். அவர்களை நான் எங்கே சந்தித்தேன்? எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பையும் அதை ஒட்டிய சம்பவத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரு நாள் அடையாறிலுள்ள ஆலமரத்தைப் பார்க்க எனக்கு டியூஷன் மாஸ்டராக இருந்த திரு.ஜே. சந்தானகிருஷ்ணன் அவர்களோடு போயிருந்தேன். எம்ஜி.சக்ரபாணி அவர்களின் குமாரர் எம்.சி.ராமமூர்த்திக்கும் இவர் தான் ஆசிரியர்.
‘இங்கேதான் எம்.சி.ராமமூர்த்தியின் வீடு இருக்கிறது. அவனையும் பார்த்துவிட்டுப் போகலாம் வா’ என்று என்னை எம்.ஜி.சக்ரபாணியின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.
திரு. எம்.ஜி.ஆர். அப்போது தனது சகோதரருடன் அடையாறு காந்தி நகரில் வசித்து வந்தார். நாங்கள் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த அறைக்குள் திடீரென எம்.ஜி.ஆர். வந்தார். அப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்.
பொன்னிற மேனி, திறந்த மார்பு, இடுப்பில் வேஷ்டி. கருகருவென அடர்ந்து வளர்ந்திருந்த முடியை ஒரு துவாலையால் துவட்டியபடி வந்தார் அவர். ‘பையன் யார்?’ என்று என் ஆசிரியரிடம் கேட்டார். அவர் விபரம் சொன்னார். சொன்னதும் நன்றாகப் படிக்கிறாயா? என்று கேட்டார்.
என் தந்தையார் எங்களை பெரும்பாலும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத்தான் அனுமதிப்பார். பிளட் அண்ட் ஸான்ட், டயர்ன் பவர், டார்ஜான், மற்றும் ஏரால் பிளைன் போன்றவர்களின் சாகசப் படங்களாகவே அவை இருக்கும்.
சற்றேறக் குறைய எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களும் அம்மாதிரி சாகசங்களை வெளிப்படுத்தும் படங்களாக இருந்ததால் அந்த ஆங்கில நடிகர்களின் மீது எனக்கு இருந்த மோகம் இவர் மீதும் இருந்தது. தமிழ் நாட்டின் ஏரால் பிளைன் என்றே நாங்கள் அழைப்போம்.
எனவே முதன் முதலாக – அதுவும் சற்றும் எதிர்பாராமல் அவரது வீட்டிலேயே எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்த்ததும், அவர் அன்போடு என்னைப் பற்றி விசாரித்ததும் எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டது.
அதன்பிறகு நான் படித்து முடித்து தந்தைக்கு உதவியாக படத்தோழிலுக்கு வந்த பிற்பாடு எம்.ஜி.ஆரிடம் எனது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிக் கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் தந்தையார் ஒரு வண்ணப்படம் எடுக்க முடிவு செய்தார். எங்களைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் அசோகன் ‘ அண்ணே அண்ணன் எம்.ஜி.ஆரைப் போட்டு ஒரு படம் எடுங்கண்ணே’ என்று என்னிடமும் என் சகோதரரிடமும் சொல்லுவார். அவர் அப்போது எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்து வந்தார்.
தொழில் ரீதியாக சின்னாப்பத் தேவரோடு ஏற்பட்ட பழக்கத்தினால் நான் அடிக்கடி தேவரைப் பார்க்க அவரது செட்டுக்குப் போவேன். அங்கே எம்.ஜி.ஆர்., அசோகன் இருப்பார்கள். நான் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாகப் பழக தேவரும், அசோகனும்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள்.
எங்கள் தந்தையார் பிரம்மாண்டமான அளவில் வண்ணப்படம் எடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்த போது எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைத்து எடுத்தால் என்ன என்று நாங்களும் நினைத்தோம். தந்தையும் சம்மதிக்கவே எம்.ஜி.ஆரைச் சந்தித்து எண்ணத்தைச் சொன்னோம்.
அவர் மகிழ்ச்சியுடன் எங்கள் எண்ணத்தை ஏற்றார். ‘அன்பே வா’ இப்படித்தான் ஆரம்பமாயிற்று. இதன் பிறகு அவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். அப்போதுதான் அவரது லட்சிய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களையும், அவரது பல நற்பண்புகளையும் மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது.
‘வசதியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அதில் எளிமை இருக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது’ என்பார். இம்மாதிரி எடுத்ததற்கெல்லாம் அவர் புத்திமதி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனல் போ போகத்தான் அதன் அருமையையும், பெருமையையும் உணர ஆரம்பித்தேன்.
இப்படித் தன்னிடம் நெருங்கிப் பழகுபவர்களிடம் நல்ல பண்புகளை, நல்ல பணழக்கங்பகளை அவர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்தி வந்திருக்கிறார்.
தன் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கூட ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தன் பட உலக ஆரம்ப காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துவிட்டு வீரமும் ஒழுக்கமும், படிப்பினையும் வளர்த்துக் கொண்ட ரசிகர்கள் ஆயிரமாயிரம் உண்டு. படங்களில் மட்டும் அவர் நல்லவராகத் தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் அவற்றைக் கடைபிடித்து வந்ததுதான், மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை மலைபோல் குவித்தது.
இப்போதும் நானோ அவரோ சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் முதலாளி என்று சொல்லிக் கொள்ள போட்டி போடுவோம். பெரும்பலும் அவர் முந்திக் கொண்டு விடுவார்.
முதல் அமைச்சராக பதவி ஏற்ற போது அவரை வாழ்த்தி மாலை அணிவிக்கச் சென்ற போது ‘ இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு முதலாளி’ என்று சொன்னேன்.
A.V.M. Saravanan
mr.வினோத் சார் அவர்கள் மக்கள்திலகம் தோளில் அணிகலன்கள் சூட பற்பல தரபட்ட நற்-உழைப்பினை நல்குகிறார்...நாமும் அவரோடு சேர்ந்து வித்தியாசமான MGR ., புகழ் மாலையை தொடுபோம்... எத்தனை நடிகர்கள் & நடிகையர்கள் திரைப்படங்கள் பேசும்-படம் தோன்றிய காலத்தில் இருந்து வந்தாலும், MGR அவர்களின் இணையற்ற " உலகம் சுற்றும் வாலிபன் " - திரைப்பட முதல் வெளியீடு ஆனபொழுது சுவரொட்டி ஏதும் சென்னை நகரில் ஓட்டபடாமலேயே மாபெரும் ஈடில்லாத வெற்றியை அடைந்த யாராலும் நம்ப முடியாத நிகழ்வு - உலக அளவில் வேறு எங்கும் நடந்திருக்கிறதா? இது ஒன்றே MGR -ரின் செல்வாக்கு -க்கு உதாரணமாக விளங்கும்...
மறக்க முடியாதவை....
தாய்க்கு முதல் பிரசவம்;காதலிக்கு முதல் முத்தம்;
மனைவிக்கு முதல் இரவு;
கணவனுக்கு முதல் சம்பளம்;
ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு மறக்க முடியாதது அவன் எழுதி, திரைக்கு வந்த முதல் திரைப்படம்.
திரைக்கதை எழுதச் சந்தர்ப்பம் தேடி அலைந்த என் கடும் தவம் கலையும் கடைசி மூச்சில், நான் கண்டுகொண்ட மக்கள் திலகத்தின் முதல் தரிசனத்தில், கிடைத்த வரமே என் முதல் திரைப்படம்!
அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில், எம்.ஏ. இறுதியாண்டு மாணவர்க்கு நான் பயிற்ற வேண்டிய பாடம் - 'தமிழ் நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்'. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி பற்றிப் பேசுகிறேன்.
அந்த நாடகக் குழுவிலே ஓர் இளைஞன். அவன் மேடையிலே வேடமிட்டு வந்தால் அவனை மொய்க்கும் கண்கள் மதுவுண்ட வண்டுகளாகும் - அவனது அழகும் குரலும் அப்படி.
கண்பட்டதோ என்னவோ அன்று மேடையில் அவன் பாடும்போது தொண்டை கரகரக்கிறது. திடுக்கிடுகிறான். காளைப் பருவத்தின் தலைவாசலில் நாடகக் கலைஞர்களுக்கு ஒரு கண்டம். 'மகரக் கட்டு' - தொண்டை உடைந்து குரல் கெட்டுப் போகும். குரல் கெட்டுப் போனால் தலைமை வேடம் கிடைக்காது; துணை வேடம்தான்.
எந்த மேடையில் கொலு வீற்றிருந்தோமோ அங்கே கோலேந்தி நிற்பதா? கூடாது' என்று அழுகிறது அந்த இளைஞனின் 'ஆத்மா'. அந்த நடிகன் மறுநாள் கம்பெனியை விட்டுக் காணாமல் போகிறான்!
குரல் உடைந்த்ததால் அந்தக் கலைஞன் உடனே மனம் உடைந்து போகவில்லை. குத்துச்சண்டை, குஸ்தி, கத்திச்சண்டை, கம்புச் சண்டை என்று தன் கட்டுடலை வளர்த்து திரும்பவும் கொலுவேறுகிறான் - நாடக மேடையில் அல்ல, அதன் விசுவரூபமான திரைப்படங்களில், திரைப்படங்களில் மட்டுமா? தமிழகத்து மக்களின் இதயகப் கொலுவிலெல்லாம் ஏறி அமர்கிறான்!
இப்பொழுது நான் குறிப்பிடுவது யாரை என்று மாணவர்களே உங்களுக்குத் தெரியும்; எம்.ஜி.ஆர்.தான்.
பிறருக்கு உதவுவது அவரது பிறவிக் குணம்; துணிச்சல் அவரது தொட்டில் பழக்கம்; தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போழுது ஒரு மாணவர் எழுந்து, 'நீங்கள் மிகையாகப் புகழ்கிறீர்கள். இதெற்கெல்லாம் என்ன ஆதாரம்?' என்று என்னை வழிமறிக்கிறார்!
ஆதாரத்திற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய ஒரு அவசியம் ஏற்படுகிறது; சொல்கிறேன்.
சென்னை அருணாசலம் ஸடுடியோ. படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க கொடுத்து வைத்த பலபேர் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நடித்து அப்போது வெளியாகி உள்ள ஒரு படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எம்.ஜி.ஆர். ஆர்வம் காட்டுகிறார்.
'அற்புதமான கதை' ஒருவர் ஐஸ் வைக்கிறார். 'ஒவ்வொரு காட்சியும் ஜோர்' - ஒருவர் சோப்பு போடுகிறார்! 'சண்டைக்காட்சிகள் தூள்' என்று ஒருவர், 'பாடல்கள் எல்லாம் பிரமாதம்' என்று ஒருவர் - இப்படி அவரைச் சுற்றி பல காக்காய்கள் பறக்கின்றன!
இந்த முகஸ்துதியில் மரத்துப்போனவர் எம்ஜி.ஆர். தன் அருகில் நின்ற ஒருவரின் மௌனத்தைக் கலைத்து எம்.ஜி.ஆர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு வைக்கிறார்.
கேட்டதும தான் தாமதம்! அந்த நபர் அந்தப் படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரேதப் பரிசோதனை பண்ணத் தொடங்குகிறார். குறைகளை எல்லாம் கூசாமல் குத்திக் காட்டுகிறார். 'அந்த அதிகப் பிரசங்கி'யின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது சகோதரர் மா. ராஜாங்கம் (அப்பொழுது உத்தம பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் திண்டுக்கல் எம்.பி.யாகி அஸ்தமித்த இந்தி எதிர்ப்பு போராட்ட வீ ரர்) பேசாதே என்று ஜாடையாக அந்த முந்திரிக் கொட்டையின் பின் சட்டையைப் பிடித்து இரகசியமாகச் சுண்டுகிறார்.
எம்.ஜி.ஆரோ அந்த இங்கிதம் தெரியாதவர் பேச்சை வெகு ஈடுபாட்டோடு கேட்கிறார். எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதையைக் கண்டதும் ராஜாங்கத்துக்கு சற்று நம்பிக்கை வருகிறது. அண்ணே 'இவர் என் சட்டகர்' பேரு ஏ.எஸ்.பிரகாசம். பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருக்கிறார்.
கதையெல்லாம் எழுதுவார். 'சுண்டிப் பாருங்க, செல்லுற காசா இருந்தா வாங்கிக்கங்க' என்று எனக்கு சிபாரிசு செய்யத் தொடங்குகிறார்.
'சுண்டவே வேணாம். இவர் செல்லுற காசுதான். நான் அனுப்பினேன்னு நீங்க வீரப்பாவை (ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆர். அப்படித்தான் சொன்னார்) போய்ப் பாருங்க' என்று எளிதில் திறவாத திரையுலக இரும்புக் கோட்டையை எனக்குத் திறந்து விடுகிறார்.
மண்ணுக்கேற்ற மதியூக மந்திரி - என் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய ஆர்.எம்.வி.யின் சத்யா மூவிஸ் கதவு, தட்டுவதற்குள் திறக்கிறது. திரையுலகில் என் கன்னி முயற்சி 'கண்ணன் என் காதலன்' என்ற படம் பிறக்கிறது.
திரைக்கு கதை எழுதச் சந்தர்ப்பம் கேட்டு நான் இதற்கு முன் எத்தனையோ கதவுகளைத் தட்டி இருக்கிறேன், திறந்ததில்லை. பிறருக்கு உதவுவது அவரின் பிறவிக் குணம்; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்பதற்கு கோடியில் நான் ஒரு சாட்சி.
இந்த மறக்க முடியாத முதல் சந்திப்போடு படப் பிடப்பின் வேளையில் நான் நிழலாடி நின்றபோது - துணிச்சல் அவர் தொட்டில் பழக்கம், தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை - என்பதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ நிகழ்ச்சிகள்!
வகுப்பு முடியும் மணி அடிக்கிறது. விளக்கத்தை முடித்து நான் வெளியேறுகிறேன்.
A.S.Prakasam
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். அம்பத்தூரில் நான் டி.எஸ்.பி.ஆக இருந்தேன். அப்போது ராமாவரம் தோட்டத்துக்குப் பாதுகாப்புக்காகப் போயிருந்தேன். காலை நேரம். என்னுடைய சில நண்பர்கள் அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள். டிபனுக்கு சாப்பிட அழைத்தார்கள். போனேன். சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் டிபன். பிரமாதமாயிருந்தது. ருசித்துச் சாப்பிட்டுச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்ததை எம்.ஜி.ஆர். மாடியிலிருந்து இறங்கி வந்தபோது கேட்டிருக்கிறார்.
பதினைந்து நாட்கள் கழித்து போலிஸ் மைக்கில் ஒரு தகவல். என்னை ராராவரம் தோட்டத்துக்கு வரச்சொன்னார்கள். உடனே என்னவோ ஏதோ என்று அவசரமாகப் போனேன். எம்.ஜி.ஆரின் பி.ஏ. மாணிக்கம்தான் இருந்தார். 'இன்னிக்குக் காலையில் இடியாப்பம் பண்ணியிருக்கோம், அம்பத்தூர் டி.எஸ்.பியைக் கூப்பிட்டுச் சாப்பிடச்சொல்' னு சொல்லிட்டுப் போயிருக்கார் சின்னவர்' என்று சொன்னார் மாணிக்கம். 'என்ன இது இதுக்காகவா வரச்சொன்னீங்க?' என்று நான் தயங்கினதும், நீங்க சாப்பிடாமப் போனா சின்னவர்கிட்ட என்னால பதில் பேசமுடியாதுன்னு உட்கார வச்சுட்டார். சாதாரண சாப்பாட்டு விஷயத்தில்கூட எம்.ஜி.ஆர் காட்டின அக்கறை வியக்க வைத்துவிட்டது.
ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ராமநாதன்
சத்யராஜ் (நடிகர்)
நீங்கள் யாரோட ரசிகர்?
ஒரு நொடிகூட யோசிக்காம சொல்லுவேன் எம்.ஜி.ஆருன்னு.
'வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல, கொண்டாடுவதற்குன்னு ரஜனீஷ் சொன்னது மாதிரி, சினிமாங்கிறது கூட வெறுமனே பாக்கிறதுக்கு மட்டுமில்ல பார்த்து சந்தோஷமடையறதுக்கு, உற்சாகமடையறதுக்கு.
இதை எப்பவும் என்னால எம்.ஜி.ஆர். படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியுது. அவர் நடிப்பைப் பார்த்தா தெம்பு வரும். தைரியம் வரும். அதனால எனக்குப் பிடித்த நடிகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். சினாமாவில் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர். தரும் உற்சாகத்தை வேறு எந்த நடிகராலும் தரமுடியாது. அதனாலேயே என்னோட நடிப்புல அவரோட சாயல் இருக்குன்னு யார் சொன்னாலும் அதை சந்தோஷமா பாராட்டா ஏத்துக்குவேன்.