Quote:
தமிழ் தொலைக்காட்சிகளில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி புத்தம் புது தொடராக வரவிருக்கும் தொடர்தான் ‘உயிர் மெய்’.
மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துவமனையை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கியுள்ள மருத்துவத் தொடரே இந்த ‘உயிர் மெய்’ தொடர்.
தயானந்த் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான தயானந்தின் வாழ்க்கைக் கனவுதான் இம் மருத்துவமனை. உலகத் தரத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் இருந்தாலும், இதன் அவசர சிகிச்சைப் பிரிவு மற்ற மருத்துவமனைகள் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர்.கவிதா சந்தீப். இவருக்கு கீழே பணியாற்றும் டாக்டர்.புவனா நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். கரண் பெல்லா, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மனோ அருண்மணி, அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு அறுவை சிகிச்சையில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் டாக்டர்.தமிழ்ச் செல்வன், அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்.ஜென்னி, ஆகியோரே இத் தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள். இவர்களைத் தவிர முன் அலுவலகத்தில் பணி புரியும் ஏழுமலை, பன்னீர் செல்வம் மற்றும் இதர நர்ஸுகள் சரளா, வித்யா, சுமதி, இப்படி அனைவருமே நமது சமுதாயத்தின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நினைவூட்டுவர்.
மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரமான நடிகை அமலா இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர்.கவிதா சந்தீப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த தொடரில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது,
“சின்னத்திரையில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நான், ‘உயிர் மெய்’ தொடரின் கதையைக் கேட்ட பிறகு இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட தொடரில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்.
இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சந்தோஷமாக இருப்பதாகக் கூறுகிறார். மேலும் தான் நடிக்கும் இத்தொடர் சராசரியான தொடர் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக அமைந்திருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடும் மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைக் கையாளும் மருத்துவர்களின் சேவை, அவர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் திரைக்கதையாக பிரதிபலிப்பதாகச் சொல்கிறார். இது மக்களுக்கான தொடர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு தொடர் தான் ‘உயிர் மெய்’,” என அமலா கூறுகிறார்.
டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி அவர் பற்றி கூறும் போது, “பொதுவாக ஒரு மருத்துவமனையில், ஒரு நோயாளியை கவனிக்கும் டாக்டர், அவர் கையாளும் மருத்துவத்தை விட, அவரது கருணையும், ஆதரவும், நம்பிக்கை வார்த்தையுமே அந்த நோயாளியை பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையச் செய்யும் என மருத்துவர்களின் மகத்துவத்தை உயர்வாகக் கூறுபவர், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதே பெருமையென்கிறார்.
‘உயிர் மெய்’ தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது. அது கதையின் களமான ஒரு மிகப்பெரிய மருத்துவ மனையை மாபெரும் கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும்.
இந்த உயரிய படைப்பான ‘உயிர் மெய்’தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவை அருண் மொழி ஏற்க, கதை, திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகிவருகிறது. இத்தொடர் பற்றி இவர்கள் கூறும் போது, “இது கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் புதிய உணர்வை உருக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான தொடர் போல் அல்லாமல், நேயர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படைப்பாகவும், ஒவ்வொரு காட்சியும் அழகு பட பார்ப்பவர் மனதை வசீகரிக்கும் விதத்தில் உருவாக்கி வருகிறோம் எனக் கூறுகின்றனர்.
இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடியுள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட இப்படியொரு புதுமையான தொடரை படைப்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி பிசினஸ் ஹெட் என்.எஸ். ஈஸ்வரன் கூறும்போது, ‘உயிர் மெய்’ தொடர் கட்டாயமாக மக்கள் குடும்பத்தோடு, பார்த்து ரசித்து, அவர்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கப் போகிறது. ஒவ்வொரு மனிதனின் உணர்வை சொல்லும் இத்தொடர் பார்ப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தொடராக அமையப்போவது உறுதி, எனக் கூறுகிறார்.
குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி முதல் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.