https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f7&oe=59D9B399
Printable View
Vasu Devan
நடிப்பு விஞ்ஞானி நடிகர் திலகம் நிஜ விஞ்ஞானியாக வாழ்ந்து காட்டிய
'குழந்தைகள் கண்ட குடியரசு'.(1960)
ஒரு முழு ஆய்வு.
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
இந்த குடியரசு தினத்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.
B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், (குழந்தைகள் கண்ட குடியரசு) கன்னடம், (மக்கள ராஜ்யா 1960) தெலுங்கு, (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம் 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.
மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும் , தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபக சக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.
சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் நடிகர் திலகம் சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.
தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடு வகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.
வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).
இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல நம்மையும் மிரள வைக்கிறதே...எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.
"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.
வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் நடிகர் திலகம் என்கிறீர்களா!)
மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.
அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்
"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)
பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.
என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.
இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...83&oe=59C79AB9
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...83&oe=5A06C8BA
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b2&oe=59D7619E
சிவா சார்,
காங்கேயநல்லூர் சிலை திறப்பு விழாவின் அருமையான புகைப்படங்களை தரவேற்றிய இளவல் சேகர் அவர்களுக்கும் அதை இங்கே பெரியளவில் காட்சிப்படுத்திய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! நீங்கள் குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்திற்கு மட்டுமே தானாக சேரும் இதயங்கள். எந்த எதிர்பார்ப்பின்றி அன்று முதல் இன்று வரை அவரை மட்டுமே நேசித்து வாழ்ந்து வரும் அந்த ரசிகர் கூட்டத்திற்கு என் சிரந்தாழ்ந்த நன்றிகள்.
அன்புடன்
திரை உலக சக்கரவர்த்தியின்
150 வது திரைக்காவியம்
சவாலே சமாளி வெளிவந்து
சக்கைபோடு போட்டநாள் இன்று
3ஆம் திகதி சவாலே சமாளி 1971
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3793.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC3798a.jpg
திரை உலக சக்கரவர்த்தியின்
216 வது திரைக்காவியம்
லாரி ட்ரைவர் ராஜாகண்ணு
வெளிவந்த நாள் இன்று
3ஆம் திகதி லாரி ட்ரைவர் ராஜாகண்ணு 1981
https://encrypted-tbn0.gstatic.com/i...h70Mo4uybWMZ0Q
https://ytimg.googleusercontent.com/.../mqdefault.jpg
Sekar Parasuram
இத்தனை செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?
மக்கள் சங்கமத்தில் திகைத்து நின்ற எங்கள் தளபதி அண்ணன் ராம்குமார்,
ஆர்ப்பரிப்போடு அலை மோதிய நடிகர் திலகத்தின் பக்தர்கள்,
டாக்டர் சிவாஜி வாழ்க! சிங்கத் தமிழன் சிவாஜி வாழ்க!! என வின்னை முட்டிய கோஷங்கள்,
வேலூர்- காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் நடிகர் திலகம் திரு உருவச்சிலை திறப்பு விழாவில்,
https://www.facebook.com/sekar.paras...7332911383595/
Ramiah Narayanan
அரசியலில் வெள்ளையுள்ளம் கொண்டோர் வெல்லமுடியாது !
நடிகர் திலகம் பக்கா திமுகாகரர், எம்ஜிஆர் பக்கா காங்கிரசில் இருந்த காலம். பின் எம்ஜிஆர் பார்வை திமுக பக்கம் சென்றது. 1956ல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியது திமுக. சிவாஜிக்குக் கூடுதல் ஆர்வம். சேலத்தில் நாடகம்
நடத்தினார். தெருக்களில் துண்டைவிரித்து பராசக்தி
வனங்களைப் பேசி பணம் வசூல் செய்தார். அதிக அளவு பணம் திரட்டியது நடிகர் திலகமே. திரட்டிய நட்சத்திரங்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினார் அண்ணா. அதிக நிதி த...ிரட்டியவர் என்ற முறையில் தனக்குப் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சிவாஜி. ஆனால் அந்தப் பாராட்டு எம்.ஜி.ஆருக்குச் சென்றுவிட்டது. போதாக்குறைக்கு அந்த விழாவில் கலந்துகொள்ள சிவாஜி அழைக்கப்படவில்லை. மனம் உடைந்தார் சிவாஜி. அதுவே சிவாஜி திமுகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர அச்சாரமிட்டது.
கண்ணதாசன், அண்ணா, சம்பத் திமுகவில் இருந்த காலம். மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி அணிவித்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம். மனமுடைந்த கண்ணதாசன் திமுகவிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7a&oe=59DABCB3
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8a&oe=59CB4570
Sekar Parasuram
பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் என...வும் கூறினார்,
1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
:- கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7f&oe=5A088C92
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...70&oe=59D43166
பின்நூட்டம்
Jahir Hussain ஒரு சந்திப்பில் திலீப்குமார் தனது மகனை சிவாஜிக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்,, மகனிடம் சிவாஜியை காண்பித்து இவர்தான் மிகப் பெரிய நடிகர் என்கிறார்,,, அவரது மகன் திலீப் குமாரிடம் உங்களைவிட பெரிய நடிகரா என்று கேட்டுவிட, அதற்கு திலீப் குமார் அவசர அவசரமாக இல்லையென்பது போல் தலையசைத்து என்னை விட பலமடங்கு பெரிய நடிகர் என்று கைகளிரண்டையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டினாராம்,,, அப்பேர்பட்ட தி கிரேட் ஆக்டர் சிவாஜி,,,,
Jahir Hussain
அரபு நாடுகளில் வசிக்கும் அரபிகள் இருவகைப்படுவார்கள்,,, ஒன்று படித்த அரபிகள்,, இவர்கள் பக்கத்து நாடுகளான சிரியா போன்ற நாடுகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் வந்து செட்டில் ஆனவர்கள்,,, உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள்,, மற்றவர்கள் சுத்தமாக படிப்பறிவு அற்ற புறநகர் பகுதிகளில் சகல சௌபாக்கியங்களோடு வாழும் "காட்டு அரபிகள்" ,,, இவர்கள் தான் அந்தந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள்,,, சரி விஷயத்திற்கு வருகிறேன்,,, சிவந்த மண் படத்தில் முக்கியமான காட்சியில் " பட்டத்து ராணி" பாடல்வரும்,,, ...இயக்குநர் ஸ்றீதரின் வளமான கற்பனையில் நல்ல பொருட்செலவில் செட்டிங்ஸ் செய்யப்பட்டு அந்தக் காட்சி அமைக்கப் பட்டிருக்கும்,,, அந்தப் பாடலில் நமது திலகம் அரபி வேடமிட்டு வந்து அந்த காட்சியில் பங்கு பெறுவார்,, அதில் அவரது உடையலங்காரம், ஒப்பனை, நடிப்பு மூன்றும் இன்றளவில் பேசப்படும் ஒன்று,,, மேலே நான் குறிப்பிட்ட ஒரு "காட்டரபி"யைப்போல் இமிடேட் செய்து நடித்திருப்பார்,,, அந்த குறிப்பிட்ட மண்ணின் மைந்தர்களான அந்த அரபிகளை புறநகர் பகுதிகளுக்குள்ளே தான் பெரும்பாலும் பார்க்க முடியும்,,, சிட்டிக்குள்ளே அவர்கள் வருவது அபூர்வம்,, என்னைப்போன்ற ஆட்கள் துபாய் போன்ற நாடுகளில் அவுட்டர் ஏரியாக்களில் சுற்றி இருக்கிறோம்,,, வித்தியாசமான அவர்களது உடல்மொழிகளை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்த மாயம் என்ன? அது ஒரு மேஜிக்,,, துல்லியமாக கணித்து நடித்து இருக்கிறார்,, ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இதை பதிவிட விரும்பினேன்,,, இன்று நேரம் வாய்த்தது,,, பல வேடங்களை நாம் பல பதிவுகளில் பதிந்திருக்கிறோம்,,, இந்த வேடப் பொருத்தத்தில் நாம் சிலாகிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன,,, இன்னொரு முறை அந்த பாடல்காட்சியை பார்ப்பவர்கள் மற்ற எல்லா அம்சங்களையும் தவிர்த்து விட்டு அந்தக் காட்சியில் நடித்த மஹா நடிகனை மட்டும் கவனித்துப் பாருங்கள்,, நான் கூறிய உண்மை விளங்கும்,,,,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a8&oe=59CFE6FB
Murali Srinivas
சவாலே சமாளி
03.07.1971 அன்று வெளியாகி இன்று (03.07.2017) 46 வருடங்களை நிறைவு செய்யும் சவாலே சமாளி பற்றி ஒரு சிறு குறிப்பு.
மல்லியம் ராஜகோபால் தயாரித்து இயக்கிய சவாலே சமாளி நடிகர் திலகத்தின் 150-வது படமாக வெளிவந்தது. படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு படம் வெளிவந்த நேரத்தில் நடந்த இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வரும். ஒன்று எங்கள் மதுரை சம்மந்தப்பட்டது. மற்றொன்று படவிழா. மதுரை ஸ்ரீதேவியில் 1971 ஜூலை 3 சனிக்கிழமையன்று படம் வெளியானது. சாதாரணமாக சனிக்கிழமை 4 காட்சிகள். ஓபனிங் ஷோ காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும். ஆனால் அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கப்பட்டது. காரணம் 1971 மார்ச் 26 அன்று மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் குலமா குணமா அந்த ஜூலை 3 அன்றுதான் 100வது நாளை நிறைவு செய்கிறது. எனவே 100வது நாளை நிறைவு செய்வதற்காக அன்றைய காலைக் காட்சி மட்டும் குலமா குணமா திரையிடப்பட்டது. இரண்டு விநியோகஸ்தர்களும் ஒப்புக் கொண்டு செய்த ஏற்பாடு. இந்த திட்டத்தின்படி அன்று சவாலே சமாளி 3 காட்சிகள் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த விவரம் தெரியாத பலர் தியேட்டரின் முன் குவிந்துவிடவே கட்டுக்கடங்காத கூட்டமாக மாறிவிட்டது. அதை சமாளிக்க இந்த படம் நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அதுவரை புதுப்பட ரிலீஸில் இந்த ரீதியில் ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை.
இரண்டாவது படம் வெளியான 8வது நாள் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரத்தில் நடிகர் திலகத்தின் 150வது படவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகமெங்கிலுமிருந்து கலந்துக் கொண்டனர். மிக பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடிகர் திலகம் மேடையில் நின்று பார்வையிட்டார். எப்போதெல்லாம் நமது விழா நடக்கிறதோ அதில் ஒரு தினம் அரசியல் மாநாடாகவும் ஒரு தினம் கலையுலகை சேர்ந்தவர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் நடைபெறும். திருச்சியிலும் அப்படியே நடந்தது. அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பெருந்தலைவர் தலைமை தாங்க அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். கலை விழாவில் அனைத்து கலைஞர்களும் கலந்துக் கொண்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டு சவாலே சமாளி 75 நாட்களை கடக்கும் நேரத்தில் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நினைவில் நிற்கும் ஒரு ஞாபக தீற்றல் என்னவென்றால் இரண்டு நாள் மாநாடு நடைபெறும்போதும் பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு சென்று விட்டபோதிலும் அந்த இரண்டு நாட்களிலும் மதுரையில் கூட்டம் சற்றும் குறையவில்லை. அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது.
இனி படத்திற்கு வருவோம். படம் வெளியான போது அல்லது மறு வெளியீடுகளில் படம் பார்த்ததை பற்றி சொல்லப் போவதில்லை. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு அதாவது 2013 செப்டம்பரில் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது உடலாண்ட்ஸ் அரங்கில் ஒரு காட்சியும் சத்யம் அரங்கில் ஒரு காட்சியும் திரையிடப்பட்டது. சத்யத்தில் நான் பார்த்தேன். அந்த நேரம் என் மனதில் தோன்றிய எண்ணங்கள் முழு படத்தையும் பற்றி பேசப் போவதில்லை. குறிப்பாக இரண்டே இரண்டு காட்சிகள். அதை பற்றிய ஒரு மினி விமர்சனம்.
ஒன்று முதல் இரவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மனைவி ஆகி விட்ட நாயகியுடன் மனம் திறந்து பேசும் காட்சி. அதுவரை ஒரு பிடிவாத குணம் கொண்ட ரோஷகார இளைஞன் மாணிக்கம் என்ற முறையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகியிருப்பார். அந்தக் காட்சியில்தான் தான் நாயகி மேல் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவார்.[உன்னை மொத மொத பார்த்தபோதே என் மனசை பறி கொடுத்துட்டேன்] தானும் அவளும் எப்படி இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லுவார். நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் உண்மையான ஜனநாயக சோஷலிசம். இதைதான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க.[இந்த வசனம் வரும்போது 1971 ஜூலை மாதம் ஸ்ரீதேவியில் எழுந்த கைதட்டல் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது]. உன்னளவிற்கு நானும் படிச்சிருக்கேன். ஆயிரம் வயலை உழுதவ்னும் ஆயிரம் புத்தகங்களை படிச்சவனும் ஒன்னும்பாபாங்க.
இந்த டயலாக் டெலிவரி எல்லாம் தியேட்டரில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த modulation, முக பாவம், உடல் மொழி எல்லாமே அற்புதமாக இருக்கும். பேசிக் கொண்டே வெகு இயல்பாக தோளில் கை வைக்க அதை படாரென்று தட்டி விட்டு என்னை தொடாதீங்க என்று கோபாவேசமாய் பேசும் JJ-வை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, இனி நீயா வந்து என்னை தொடரவரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன் என்று சொல்லி விட்டு போகும் அந்த look பிரமாதம். அன்றைய தினம் இந்தக் காட்சியோடு இடைவேளை விட்டதால் இதைப் பற்றியே நானும் சாரதியும் கிருஷ்ணாஜியும் பேசிக் கொண்டிருந்தோம்.
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி. எனக்கு உங்கிட்டே பிடிச்சதே அந்த பிடிவாதம்தான். ஏன்னா நானும் பிடிவாதக்காரன். உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்னுடைய மனைவி ஆன பின்னாடி என்னுடைய வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்தறதுக்கு உனக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா நான் உன்னை கொடுமைப்படுத்தறதா நீ நினைச்சுக்கிட்டே. நான் எப்ப தூங்குவேன்னு நீ பார்த்துட்டிருந்தே நீ எப்ப ஏம்மாத்துவேனு நான் பார்த்துட்டிருந்தேன்.
இந்த வசனங்களை எல்லாம் [நான் மேலே எழுதின வசனங்கள் படத்தில் verbatim ஆக இருக்காது] அவர் பேசும் போது பார்க்க வேண்டுமே! இத்தனைக்கும் இரண்டு மூன்று ஷாட்களுக்குள் மொத்த காட்சியும் வந்து விடும். ஆனாலும் continuity miss ஆகாமல் உணர்வுகள் அப்படியே அந்த வார்த்தை பிரயோகங்களில் வந்து விழும் அந்த modulation! என்ன ஒரு மேதமை!
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
குறிப்பிடத்தக்க மற்றொரு நபர் நாகேஷ். சின்ன பண்ணையாக பெரிய பண்ணை T.S பகவதியுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் அந்த character-ஐ ஜாலியாகவும் வெகு இயல்பாகவும் செய்ய நாகேஷை விட்டால் யார் இருக்கிறார்கள்? பண்ணைக்கு ஆதரவாக பேசுவது போல் சிவாஜியின் மாணிக்கம் character-க்கு lead எடுத்துக் கொடுப்பது [ஏம்பா, தேர்தலிலே தோத்தா பணம் கொடுக்காம அவர் பெண்ணையா உனக்கு கொடுப்பார்?] எல்லாம் அக்மார்க் நாகேஷ். சரியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் படங்களில் நாகேஷ் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். 1965 ஜூலை திருவிளையாடல், 1968 ஜூலை தில்லானா, 1971 ஜூலை சவாலே சமாளி!
மொத்தத்தில் அந்த ஞாயிறு நண்பகல் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் அற்புதமான பாத்திர சித்தரிப்பினால் மனம் குளிர்ந்து மகிழ்ந்தது.
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c1&oe=59D5685B
Murali Srinivas
நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part I
நம்முடைய முகநூலில் வேறொரு நண்பரின் தளத்தில் கர்ணன் பற்றியும் நடிகர் திலகம் பந்துலு நட்பு பற்றியும் வந்த கேள்விகளுக்கு சற்றே விரிவாக பதிலளித்தேன். இங்கே நமது நடிகர் திலகம் ரசிகர்கள் குழுவில் இருக்கும் நண்பர்கள் ஜோ, ஜாஹிர் மற்றும் தமீம் சார் போன்றவர்களும் அந்த விவாதத்தில் பங்கு பெற்றனர். முதலில் எழுதியிருப்பது கர்ணன் முதல் வெளியீட்டில் தோல்வி அல்ல என்பதற்கான ஆதாரங்கள். பிறகு ஒரு ஒப்பீட்டிற்காக அதே 1964 வருட தீபாவளி படங்களின் ஓடிய விவரங்கள், அதன் பிறகு அந்த நண்பர் கப்பலோட்டிய தமிழன், கர்ணன் மற்றும் முரடன் முத்து படங்களின் வணிக வெற்றியைப் பற்றிய எழுப்பிய கேள்விகளுக்கு பதில் என ஒரு நீண்ட விளக்கம். அந்த காலக்கட்ட நிகழ்வுகள் பலரும் அறியாத ஒன்று என்பதனால் அதை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன்
இது காலம் காலமாய் சொல்லபப்ட்டு வரும் தவறான தகவல்தான். இப்போதும் அதை சொல்கிறார்கள் என்பதிலதான் கர்ணனின் வெற்றியே அடங்கியிருக்கிறது. கர்ணன் சென்னையில் சாந்தி, சயானி, பிரபாத் ஆகிய மூன்று அரங்குகளில் நூறு நாட்களை கடந்தும்,தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கத்தில் 108 நாட்கள், கோவை கர்நாடிக்கில் 80 நாட்கள், திருச்சி சேலம் போன்ற நகரங்களில் 75 நாட்களையும் தாண்டியது. இவை தவிர பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் 60 நாட்கள்/(ஏன் சென்னை நகரில் ஓடிக் கொண்டிருக்கும்போதே சென்னையின் புறநகர் பகுதியான பல்லாவரம் ஜனதாவில் 44 நாட்கள் ஓடியது). இப்படி ஓடிய படம் தோல்வி என்று சொன்னால் அது வேண்டுமென்றே சொல்வது என்பது புரியும். வேட்டைக்காரன் சென்னை மற்றும் சேலம் தவிர எந்த ஊரிலும் 100 நாட்கள் ஓடவில்லை. (சென்னையிலும் கூட படத்தை வெளியிட்டது எம்ஜியார் பிச்சர்ஸ்! எனும்போது) ஆகவே அது தோல்வி என்று சொல்லலாமா? இல்லை கர்ணன் படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்ற வாதத்தை முன் வைத்தால்,என் கேள்வி இதுதான். நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல், அதைத்தவிர 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் 60 முதல் 80 வரை ஓடிய கர்ணன் தோல்வி படம் என்றால், அதே அளவிற்கு தயாரிப்பு செலவு செய்து எடுக்கப்பட்டு சென்னையில் மட்டும் 100 நாட்கள் ஓடிய (இங்கேயும் எம்ஜியார் பிச்சர்ஸ் தான் வெளியீடு) வேறு எந்த ஊரிலும் 100 நாட்கள் ஓடாத ஆயிரத்தில் ஒருவன் மட்டும் எப்படி வெற்றி படமாக முடியும்? நான் முதலில் சொன்னது போல 53 வருடங்களாக இந்த தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கர்ணனின் வெற்றி வீச்சு விளங்கும்.
டிஜிட்டல் கர்ணன் மட்டுமல்ல எப்போதெல்லாம் கர்ணன் மறு வெளியீடு கண்டதோ அப்போதெல்லாம் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. மதுரையை மட்டும் எடுத்துக் கொண்டால் 1972-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தினமணி அரங்கில் திரையிடப்பட்டு 4 வாரங்கள் ஓடியது. அங்கேயிருந்து தொடங்கி நகரிலும் வெளியூர்களிலும் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடியது. 1978 நவமபரில் மதுரை மீனாட்சியில் திரையிடப்பட்டு தொடர்ந்து 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது. புது படத்திற்கு கொடுப்பது போல ஒரு பழைய படத்திற்கு மன்ற டோக்கன் கொடுக்கப்பட்டது அதுதான் முதல் முறை. 2005 மார்ச்சில் மதுரை சென்ட்ரலில் வெளியாகி இரண்டே வாரங்களில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் ரூபாய் விநியோகஸ்தர் பங்காக அளித்திருக்கிறது. விளமபரம் இணைத்துள்ளேன். டிஜிட்டல் கர்ணன் சாதனை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. .
1964 பொங்கலை பற்றி பேசும்போது 1964 தீபாவளியைப் பற்றியும் பேசலாமே. நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியமான நவராத்திரியோடு சேர்ந்து 03.11.1964 அன்று வெளியான கலர் படம் படகோட்டி எந்த ஊரிலும் வெற்றி பெற முடியவில்லையே. சென்னையில் மிட்லண்ட், மகாராணி,உமா மற்றும் ராம் ஆகிய நான்கு அரங்குகளிலும் மதுரை ஸ்ரீதேவி மற்றும் திருச்சி சென்ட்ரலிலும் நவராத்திரி 100 நாட்கள் ஓடியது. படகோட்டி சென்னை பிளாசாவில் மட்டும் 100 நாள். அதுவும் 12 வாரத்தில் எடுக்கப்பட இருந்தது. ஒரு இந்தி படம் வெளியிட இருந்த நேரத்தில் 1965 ஜனவரி 25 அன்று ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் இந்தி படம் வெளியிடப்பட முடியாமல் இந்த படத்தையே தொடர "அன்போடு" உத்தரவு வர இந்த ஒரு திரையரங்கில் மட்டும் 100 நாட்கள். கோவையில் நவராத்திரி மற்றும் படகோட்டியோடு சேர்ந்து அதே தீபாவளி நாளில் வெளியான நடிகர் திலகத்தின் மற்றொரு படமான முரடன் முத்து ஓடிய நாட்கள் 79. படகோட்டி ஓடியது 45 நாட்கள். சாதனைகள் யார் பக்கம் என்பது இதிலிருந்து விளங்கி கொள்ளலாம்.
நடிகர் திலகம் -பந்துலு நட்பு என்பது 1954-ல் கலயாணம் பண்ணியும் பிரம்மச்சாரி முதல் தொடங்கியதாகும். 10 வருடங்கள் தொடர்ந்து அந்த கூட்டணி பயணித்துக் கொண்டேயிருந்த நேரத்தில்தான் 1964-ல் அந்த பிரிவு ஏற்படுகிறது. ஒரு வேளை அந்த பிரிவு ஏற்படாமல் இருந்திருந்தால் நடிகர் திலகத்தை வைத்து அதிக படங்களை தயாரித்த பெருமை பந்துலுவை சேர்ந்திருக்கும். அந்த பெருமை இறுதி வரை துணை நின்ற பாலாஜிக்கு கிடைத்தது. சிவாஜி நாடக மன்றத்தால் நடத்தப்பட்ட கட்டபொம்மன் நாடகத்தை பந்துலு திரைப்படமாக தயாரித்ததும் அது பெற்ற மகத்தான வெற்றியும் நமக்கு தெரியும். 1959 மே 16 அன்று வெளியான கட்டபொம்மன் திரைப்படம் 27 சென்டர்களில் 100 நாட்களை நெருங்கும்போது நடிகர் திலகத்தின் அடுத்த படமான மரகதம் 1959 ஆகஸ்ட் 21 அன்று வெளியாக கட்டபொம்மன் 14 திரையரங்குகளிலிருந்து 97 நாட்களை நிறைவு செய்த நிலையில் மரகத்திற்க்காக எடுக்கப்பட்டது. கட்டபொம்மன் மதுரை நியூசினிமாவில் 181 நாட்கள் ஓடியது. அதற்கு அடுத்தபடியாக தயாரிக்கப்பட்டதுதான் கப்பலோட்டிய தமிழன். இடையில் நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த பந்துலு தயாரித்த குழந்தைகள் கண்ட குடியரசு 1960 -ம் ஆண்டு வெளியாகிறது..பந்துலுவின் மற்றொரு படமான ஸ்கூல் மாஸ்டர் படத்திலும் நடிகர் திலகம் சிறப்பு தோற்றம் ஏற்று நடித்தார். இந்த இரண்டு படங்களும் தமிழ் தவிர மற்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது. கப்பலோட்டிய தமிழன் 1961 நவம்பர் 7 தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த 1961-ம் ஆண்டில்தான் நடிகர் திலகத்தின் மூன்று பா வரிசை காவியங்கள் வெளியாகிறது [பாவ மன்னிப்பு, பாச மலர் மற்றும் பாலும் பழமும் ஆகிய மூன்று படங்களுமே 1961 என்ற ஒரே காலண்டர் வருடத்தில் வெளியானது என்பதே பலருக்கும் புதிய செய்தியாக இருக்க கூடும்]. நம்மோடு வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகியின் சுய சரிதம் திரை வடிவம் பெற்றபோது அந்த பா வரிசை படங்களின் பாதிப்பில் இதை மக்கள் முழு மனதோடு ஏற்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அதாவது ரஹீம், ராஜசேகர் மற்றும் Dr ரவி என்ற மூன்று கற்பனை கதை மாந்தர் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்த நிஜம் பெற வேண்டிய வரவேற்பை பெறவில்லையோ என்பது என் எண்ணம். நடிகர் திலகம் என் உயிரே இந்தப் படத்தில்தான் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் முதல் 25 நாட்களில் 40 லட்சம் பேர் இந்த படத்தை பார்த்ததாக பந்துலுவே விளமபரம் கொடுத்திருக்கிறார். விளம்பரத்தை இணைத்துள்ளேன். அதை வைத்து பார்க்கும்போது படம் வணிக ரீதியாக நட்டம் ஏற்படுத்தியது என்று சொல்லப்படுவதில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கிறது. அதிக பட்சமாக எங்கள் மதுரையில் 10 வாரங்கள் ஓடுகிறது. ஆனாலும் தனக்காக பந்துலு இதை எடுத்ததன் காரணமாக உடனே பணம் பெற்றுக் கொள்ளாமல் பலே பாண்டியா படத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறார். அதுவும் அமெரிக்கா அரசின் அழைப்பின் பெயரில் இரண்டு மாதம் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் 1962 மார்ச் 2 முதல் 13 வரை கால்ஷீட். அதுவும் மூன்று வேடங்கள் கடைசி நாள் ஷூட்டிங்கில் (மாலை அவருக்கு விமானம் என்றால்) மதியம் வரை நடித்து விட்டு (அன்றுதான் வாழ நினைத்தால் வாழலாம் பாடல் எடுத்தார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்) வீட்டிற்கு கூட போகாமல் நேரே விமான நிலையம் போய் விட்டாராம். கமலாம்மாவையும் குழந்தைகளையும் நேரே ஏர்போர்ட் வர சொல்லி பார்த்துவிட்டு போனாராம். அப்போதும் பந்துலுவிற்கு லாபம்தான்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6c&oe=59CF79FE
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ff&oe=5A05DDEA
Murali Srinivas
நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part II
இதன் பிறகுதான் கர்ணன் ஆரம்பிக்கப்படுகிறது. அதற்கு நடிகர் திலகம் கொடுத்த ஒத்துழைப்பு அளவிடமுடியாதது. எப்படி என்று சொல்கிறேன். கர்ணன் படத்துக்காக மொத்த குழுவும் ஜெய்பூர் போயிருக்கிறார்கள். இரண்டு மாதம் ஷூட்டிங். இது நடபபது 1963 ஜூலை ஆகஸ்ட் மாதங்களில். அந்த நேரம் பாசமலர் படம் எடுத்த ராஜாமணி பிக்ச்ர்ஸ் அடுத்த படமான குங்குமம் எடுத்து திரையிடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். 1963 ஆகஸ்ட் 2 படம் வெளியாக இருக்கிறது. படம் சென்சாருக்கு செல்கிறது. கதைப்படி நடிகர் திலகத்தின் தந்தை வேடத்தில் ரங்காராவ் மற்றும் முறைப்பெண் மாமன் மகளாக விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத சூழலில் கூட இருக்கும் வில்லன் OAK தேவர் சூழ்ச்சியால் ரங்காராவ் கொலை செய்வது போல் வரும். அங்கு தற்செயலாக வரும் நடிகர் திலகம் தன தந்தையை தப்பிக்க விட்டு, தான் கொலைப் பழியை ஏற்றுக் கொள்வார். போலீசிடம் தன் தந்தை மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக ஒரு கட்டத்தில் விஜயகுமாரியின் தந்தையாக ரங்காராவை நடிக்க வைப்பார். படம் தணிக்கைக்கு சென்றபோது இந்த திரைக்கதையமைப்பு தணிக்கை அதிகாரிகளுக்கு புரியாமல் போக அது எப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே தந்தை இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பி அவர்கள் பல காட்சிகளிலும் கத்திரி போட்டு விட்டனர். இயக்குனர்களும் தயாரிப்பாளரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தணிக்கை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்து விட பல காட்சிகள் வெட்டப்பட்டதினால் படத்தின் சீரான ஓட்டம் தடைப்பட்டு பல ஜம்ப்கள் ஏற்பட்டன. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ரீஷூட் செய்ய வேண்டும் என்ற நிலை. படம் தணிக்கைக்கு செல்வது 1963 ஜூலை 19 அன்று. படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தேதி 1963 ஆகஸ்ட் 2. தமிழகமெங்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.
சோதனையாக அந்நேரம் நடிகர் திலகம் கர்ணன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்றிருந்தார். இரண்டு மாத schedule. நடிகர் திலகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அங்கே ஜெய்பூர் படப்பிடிப்பை விட்டு விட்டு வந்தால் பந்துலுவிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் தன்னால் வர முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் குங்குமம் படத்தின் ரீஷூட் என்றால் அனைத்து ஆர்டிஸ்ட் combination கால்ஷீட் வேண்டும். ஆகவே அதுவும் பிரச்சனை. இங்கே கர்ணன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வந்தால் ஏற்படக்கூடிய நஷ்டம். ஆகவே இதற்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டு கர்ணன் படப்பிடிப்பு முடிந்து தான் வந்தவுடன் ரீஷூட் வைத்துக் கொள்ளலாம். இதற்கு விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இரண்டாவது வழியாக இப்போது இருக்கும் படத்தையே எடிட் செய்து திரையிட வேண்டியதுதான் என்று சொல்லியிருக்கிறார். விநியோகஸ்தர்களும் அரங்க உரிமையாளர்களும் இரண்டு மாத காலம் காத்திருக்க தயாராக இல்லாத காரணத்தினால் இருக்கும் காட்சிகளை எடிட் செய்து முன்னரே அறிவித்தபடி 1963 ஆகஸ்ட் 2 அன்று படம் வெளியானது. படத்தின் திருப்பங்களை புரிந்துக் கொள்ளும் இடத்தில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட காரணத்தினால் சாதாரண மக்களுக்கு கதையமைப்பை புரிந்துக் கொள்வதில் கஷ்டம் ஏற்பட்டது. படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த இடத்தில ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். குங்குமம் படத்தை தயாரித்தது ராஜாமணி பிச்சர்ஸ் சார்பில் மோகன் ஆர்ட்ஸ் மோகன். கிட்டத்தட்ட சொந்தப படம். படத்தை இயக்கியவர்களோ நடிகர் திலகத்தை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். அப்படிப்பட்ட சூழலில் கூட பந்துலுவிற்கு பிரச்னை வரக்கூடாது என்று எண்ணி நடந்தவர் நடிகர் திலகம். ஆனால் பந்துலு செய்த பதில் மரியாதையோ?
கர்ணன் வெளியாகி எப்படி ஓடியது என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதில் மற்றொரு விஷயமும் அடங்கியிருந்தது. கட்டபொம்மன் வெற்றி வீச்சை முன்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. கட்டபொம்மன் படத்தை பந்துலு அனைத்து ஏரியாகளுக்கும் விநியோகஸ்தர்களுக்கு outright முறையில் (5 வருடங்களுக்கு) விற்று விட்டார். அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் அபரிமிதமான லாபம். அதை பார்த்த பந்துலு கர்ணனை யாருக்கும் கொடுக்காமல் தானே நேரிடையாக வெளியிட்டார். பல விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக்கொண்டு விலை கேட்டபோதும் பந்துலு கொடுக்கவில்லை. அதுதான் அவர் செய்த தவறு. மொத்தம் 9 ஏரியாகளுக்கும் அவர் outright கொடுத்திருந்தால் படம் வெளியாவதற்கு முன்பே அவருக்கு லாபம் வந்திருக்கும். தனிப்பட்ட 9 விநியோகஸ்தர்களும் லாபம் பார்த்திருப்பார். பந்துலு அதை செய்யவில்லை. இதனால் என்ன நட்டம் என்றால் இன்றைய தினம் போல் 300 பிரிண்ட்கள் கிடையாது வெறும் 36 பிரிண்ட்கள்தான் வெளியானது (அதுதான் அன்றைய நார்மல் ரிலீஸ்). இதனால் பந்துலுவிற்கு வரவேண்டிய returns (இங்கே நான் குறிப்பிடுவது share) சின்ன துளியாக வர ஆரம்பித்தது. அதுவும் தவிர அந்தந்த ஏரியா விநியோகஸ்தர் வெளியிட்டாலே நகரம் தாண்டிய மொபஸலில் தியேட்டர்காரர்கள் விநியோக பிரதிநிதியை கையில் போட்டுக் கொண்டு எளிதாக வசூலை குறைத்து காண்பித்துவிடுவார்கள். அப்படியிருக்கும்போது இவர் சென்னையில் உட்கார்ந்து எப்படி கண்காணிக்க முடியும்? ஆகவே அந்த வகையிலும் இவருக்கு பண வரவு ஸ்லோவாக இருந்தது.அப்போதும் நடிகர் திலகத்திடம் வருகிறார். விநியோகத்தில் நடைபெற்ற குளறுபடி என்ற உண்மை தெரிந்தும் கூட நடிகர் திலகமும் வி.சி சண்முகமும் உடனே கால்ஷீட் அதுவும் பணம் வாங்கி கொள்ளாமல் கொடுக்கின்றனர். அப்படிதான் முரடன் முத்து ஆரம்பிக்கப்படுகிறது. குறைந்த செலவில் ஒரு கிராம கதை. செலவை குறைப்பதற்காக மெல்லிசை மன்னர்களை தவிர்த்து T G லிங்கப்பாவை இசை அமைக்க வைக்கிறார் பந்துலு.
இது நடப்பது 1964 மத்தியில். கர்ணன் 1964 ஜனவரி 14 அன்று வெளியாகிறது. நடிகர் திலகத்தின் அடுத்த படம் பச்சை விளக்கு ஏப்ரல் 3 அன்று வெளியாகிறது. அதற்கு அடுத்து ஆணடவன் கட்டளை ஜூன் 12 அன்று வெளியாகிறது. ஜூலை 18 கை கொடுத்த தெய்வம் ரிலீசாகிறது. இதே சமயத்தில் புதிய பறவை, முரடன் முத்து, பழனி, அன்புக்கரங்கள், சாந்தி மற்றும் நடிகர் திலகத்தின் பல்வேறு படங்கள் படப்பிடிப்பில் இருக்கின்றன. அந்த நேரத்தில் இயக்குனர் ஏபிஎன் நடிகர் திலகத்தை அணுகுகிறார். முதலில் விகேஆருடன் சேர்ந்து லட்சுமி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஏபிஎன் ஒரு சில கருத்து வேறுபாட்டினால் விலகி விஜயலட்சுமி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் சார்பில் எடுக்கவிருக்கும் படத்திற்கு கால்ஷீட் கேட்கிறார். நடிகர் திலகமோ உடனே நடித்துக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறார். மேலே சொன்னது போல் பல்வேறு commitments. ஆனாலும் ஏபிஎன் சொன்ன கதை அவருக்கும் சண்முகத்திற்கும் பிடித்துப் போகிறது. உடனே ஏபிஎன் இந்த கதையே ஒன்பது ராத்திரிகளில் நடப்பதாக திரைக்கதை அமைத்திருக்கிறேன். ஆகவே எனக்கு நைட் கால்ஷீட் கொடுத்தால் கூட போதும் என்கிறார். ஒப்புக் கொண்டு படம் ஆரம்பிக்கபப்டுகிறது. இந்த சூழலில் பிலிம் நியூஸ் ஆனந்தன் நடிகர் திலகத்தையும் சண்முகத்தையும் சந்தித்து கை கொடுத்த தெய்வம் நடிகர் திலகம் நடித்து வெளிவந்துள்ள 97வது படம் என்றும் 100 படங்களுக்கு இன்னும் மூன்று மட்டுமே பாக்கி இருப்பதாக தெரிவிக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு நடிகர் 100 படங்களில் கதாநாயகனாகவே நடிப்பது என்பது அப்போதுதான் முதன் முறையாக நடக்கப் போகிறது.[மலையாளத்தில் நசீர் இதை செய்திருந்தாலும் அவர் ஆரம்ப காலத்தில் மலையாளத்திலும் தமிழிலும் துணை வேடங்கள்தான் செய்தார் என்பதனால் அதை விட்டு விடலாம்]. 1964 செப்டம்பரில் புதிய பறவை வெளியாவதற்கு தயாராக இருக்கிறது. அது 98-வது படமாக அமையும்.
இந்த நேரத்தில் இந்த செய்தியை கேள்விப்படும் பந்துலு முரடன் முத்து படத்தை 100-வது படமாக அறிவிக்க சொல்கிறார். நடிகர் திலகமும் சண்முகமும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. 100-வது படம் என்ற ஒரு முக்கியமான நிகழ்வு நடக்க இருக்கும்போது அது குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தால் நன்றாக இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு பொருத்தமாக நவராத்திரி அமைகிறது. முதன் முறையாக ஒரு நடிகர் 9 வேடங்களில் நடிக்கும் படம் என்ற தனி சிறப்பும் இருக்கிறது. ஆகவே அந்த படத்தை 100-வது படமாக அறிவிக்கலாம் என சொல்கிறார்கள். நடிகர் திலகம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பந்துலு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய காரியத்திலே குறியாய் இருக்கிறார். நடிகர் திலகம் நினைத்திருந்தால் இந்த இரண்டு படங்களையும் விட்டு விட்டு புதிய பறவை படத்தை 100-வது படமாக அறிவித்து வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. திட்டமிட்டபடி புதிய பறவை செப்டம்பர் 12 அன்று வெளியானது. இதே நேரத்தில் இந்த செய்திகளெல்லாம் ராமாவரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. எப்படியடா நடிகர் திலகம் பக்கம் இருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர்களையெல்லாம் தம் பக்கம் திருப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது அல்வா சாப்பிடுவது போல் ஆகிறது. முரடன் முத்து படப்பிடிப்பில் கூடவே இருந்த அசோகன் மூலமாக குணச்சித்திர நடிகையும் பந்துலுவின் இரண்டாவது மனைவியுமான M V ராஜம்மா வழி பந்துலு அணுகப்படுகிறார். அனுதாப வார்த்தைகளும் ஆசை வார்த்தைகளும் சொல்லப்பட்டு முகாம் மாறி வந்தால் ஏக் தம் கால்ஷீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.100-வது படமாக தன் படம் வராது என்று உறுதியானவுடன் பந்துலு முகாம் மாறுகிறார். புதிய படம் துவக்க வேலைகள் ஜரூராக நடக்கிறது. முன்னர் திட்டமிட்டபடியே நவராத்திரி முரடன் முத்து இரண்டுமே 1964 நவம்பர் 3 தீபாவளியன்று வெளியாகிறது. அதே நாளில் பத்மினி பிச்சர்ஸ் தங்கள் அடுத்த தயாரிப்பு என்று ஆயிரத்தில் ஒருவன் பட விளமபரம் வருகிறது. முரடன் முத்து வெற்றியா தோல்வியா லாபமா நட்டமா என்ற கேள்வியே அங்கே எழவில்லை. முரடன் முத்து தோல்வி அதனால் முகாம் மாறினார் பந்துலு என்பதெல்லாம் அள்ளி விடப்பட்ட கதைகள்.
நடிகர் திலகம் பந்துலுவை அதற்கு பிறகும் கூட வெறுக்கவில்லை. தனது ஒவ்வொரு படத்தையம் பற்றிய ஒரு வரி விமர்சனம் செய்த அவர் முரடன் முத்துவை பற்றி குறிப்பிடும்போது நண்பர்கள் பிரிந்தனர் என்றுதான் சொல்லியிருப்பார். தன வீட்டு விசேஷங்களுக்கு பந்துலுவை அவர் அழைக்க தவறியதே இல்லை. நடிகர் திலகம் அணிவித்த மோதிரம் ஒன்று பந்துலுவின் கையில் எப்போதும் இருந்தது. அதை "அந்த" படப்பிடிப்புகளின்போது பந்துலு மறைத்து வைத்துக் கொள்வாராம். ஆனால் வரலாறு எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்கும் என்பதற்கு உதாரணம் பந்துலு மாற்று முகாம் சென்ற பிறகு எடுத்த எந்தப் படமும் (நாடோடி, , தேடி வந்த மாப்பிளை மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) 100 நாட்களை எட்டி பிடிக்க முடியவில்லை என்பதுதான். ஆயிரத்தில் ஒருவன் கூட நான் முன்பே சொன்னது போல சென்னையில் மட்டும் 100. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் சொல்வது கூட உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். அவரின் உண்மையான நிலைமை எப்படி இருந்தது எனபதை அவரது மகளே தொலைக்காட்சியில் பதிவு செய்தார். அதுவும் எம்ஜிஆர் நினைவாக நடத்தபப்ட்ட விஜய் டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருதினராக கலந்துக் கொண்ட பந்துலுவின் மகளும் ஒளிப்பதிவாளருமான் BR விஜயலட்சுமி சொன்னது என்னவென்றால் 1976-ல் பந்துலு இறக்கும்போது எங்களுக்கு (அதாவது அவர் குடுமபத்தினருக்கு) இரண்டு options தான் இருந்தன. தலைக்கு மேல் கடன் சுமை இருந்த காரணத்தினால் ஒன்று நாங்கள் குடுமபத்துடன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் insolvency file செய்ய வேண்டும்.(மஞ்ச கடுதாசி) என்றார். சிவாஜியால் நட்டபப்ட்ட பந்துலு எங்கள் பக்கம் வந்தார் லாபம் அடைந்தார் என்று சொல்கிறார்களே, 1965 முதல் 1976 வரை அவர் விசி கணேசனை வைத்து படம் எடுக்கவில்லையே, "மினிமம் கியாரண்டி" ராமச்சந்திரனை வைத்துதானே படம் எடுத்தார். அப்படிப்பட்டவரை வைத்து எடுத்து மஞ்ச கடுதாசி கொடுக்கும் நிலைமை வந்தது என்றால் உண்மை நிலவரம் என்ன என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்! மிக மிக நீண்ட பதிவுகளை பொறுமையாக படித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...bc&oe=59D28C3F
Uma Sridhar
அனைத்து சிவாஜியவாதிகளுக்கும் எனது வணக்கங்கள்.சிவாஜி,பந்துலு பற்றிய பதிவைப் படித்ததில் இருந்து என் மனதில் ஒரு எண்ணம் சுழன்று கொண்டே இருக்கிறது.சிவாஜியைப்பற்றி தவறான பிராசரங்கள் எத்தனையோ காலம்காலமாக பரப்பப்பட்டு நம்பப்பட்டும் வந்துள்ளன;அவர் ஒரு கருமி,தானதர்மம் செய்யாதவர்,பிராப்தம் படம் படு தோல்வி, சாவித்திரியின் உடல்நலக்குறைவே அந்தப் படத்தால்தான் ஏற்பட்டது, சாவித்திரியின் இறுதி நாட்களில் அவரது அண்ணணாக நடித்த சிவாஜி அவருக்கு எதுவும் செய்யவில்லை(கணவர் ஜெமினியைப்பற்றி யாரும் குறை... சொல்வதில்லை)தீய பழக்கங்ளுக்கு அடிமையானவர்,அவரால் நிறைய தயாரிப்பாளர்களுக்குப் பிரச்சினை என்று எத்தனையோ குற்றச்சாட்டுகள்.இவற்றைப் பொய்யென நிரூபிக்கும் பொருட்டு சில உயர்ந்த உள்ளங்கள் தகுந்த ஆதாரங்களோடு பதிவுகளை சமர்ப்பித்து வருகிறீர்கள்.
எனது வேண்டுகோள் என்னவென்றால் இப்படிப்பட்ட வாதங்களும் சான்றுகளும் இந்த முகநூல் பக்கத்தோடு முடங்கி விடாமல் தமிழரர் அனைவரையும் போய் சேர வேண்டும். அதற்கு இப்பதிவுகள் பிரபல பத்திரிக்கைகளில் பிரசுரமாக வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு சிவாஜி ரசிகர்களான Y.g.மகேந்திரன் போன்ற பிரபலங்களைக்கூட அணுகலாம்.இது எனது கருத்து. ஜாம்பவான்கள் கலந்து ஆலோசித்து இதற்கான நல்ல முடிவை அதி விரைவில் எடுக்க பிரார்த்ததிக்கிறேன்.
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
எங்கள் தங்க ராஜா- 15/07/1973.
நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.
இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.
ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.
இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)
ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.
ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.
உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..
வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.
அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.
வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.
கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.
கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.
சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.
முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.
சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.
எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.
இனி நடிகர்திலகம்.
அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)
பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.
வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.
படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.
சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).
தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)
முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).
மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .
கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .
போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.
Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.
எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6d&oe=5A0C3055
Subbiah'
ஜூலை 21-ல் சிவாஜி மணிமண்டபம் திறப்பு
சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ...கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபத்தின் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை காட்டிராக்டருக்கு பொதுப்பணித்துறை வழங்கி உள்ளது.நான்கு வாயில்களை கொண்ட இந்த மணிமண்டபத்தின் நடு நாயகமாக சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்படத்தில் சிவாஜி வாழ்க்கையை சொல்லும் புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
தற்போது வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.வருகிற ஜூலை 21-ம் தேதி சிவாஜி அவர்களின் நினைவு நாள். அன்று மணிமண்டபம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதல்வர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள், சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.
நடிகர் திலகத்தின் 49வது திரைக்காவியம்
அன்னையின் ஆணை வெளியான நாள்
இன்று 4 ம் திகதி யூலை மாதம் 1958 ம் ஆண்டு
http://i1146.photobucket.com/albums/...psce3800f0.jpg
4 ஆம் திகதி யூலை 1958 அன்னையின் ஆணை
‘சிவாஜி’ கணேசன், சத்யராஜ், கௌதமி மற்றும் பலர் நடித்த “புதிய வானம்” திரைப்படத்தை இன்று காலை 10 மணிக்கு கே டிவியில் கண்டு மகிழுங்கள்! #KTV
· Provide translation into English
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0b&oe=5A06FEFB
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.
கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.
எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.
சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?
ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!
இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.
பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய் மாயை
கூடவே இருந்த அடியாட்களின் பொய்கள் சரித்திரமாகாது.அவரால் பயனடைந்தவர்கள் சொல்லும் பொய் பசப்புகள் உண்மையாகி விடாது.
நாங்கள் சொல்வது, இன்றும் சாட்சியிருக்கும் படங்கள் வாயிலாக அவரின் அபார நடிப்பு திறன் ,அவரின்பட உலக சாதனைகள் அதுவும் உலக அளவு கோலில் வைத்து கூறுகிறோம்.
.இத்தனைக்கும் எங்களில் பலர் அவரை பார்த்ததோ பலனடைந்ததோ இல்லை.
கட்சியின் பிம்பம் எதையும் காக்க அவர் மாயையை காக்கும் பொய்களை பரப்பும் அவசியம் இல்லை.
உண்மையான சாதனையை பொய் அரசியல் தகர்த்து விட முடியாது. கர்ணனின் சாதனைக்கு முன்னே மத்திய கிழக்கு நாட்டின் பணத்தை கொண்டு பதிவு செய்து ஓட்ட பட்ட பொய்கள் நிற்காது.
From today's Junior vikatan.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுடைய திரைக்கதை, ‘அந்திமந்தாரை’. அந்தப் படத்தில் சிவாஜி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் பாரதியின் ஆசை. அதனால், ஒருநாள் காலை சிவாஜி சாரைச் சந்தித்துக் கதை சொன்னேன். தியாகி பென்ஷன் வாங்க விரும்பாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் எதிர்கொள்ளும் அவமானங்கள்தான் கதையின் மையம்.
திருமணம் செய்துகொள்ளாததால், அண்ணன் மகன் வீட்டில் இருப்பார் அந்தத் தியாகி. வருமானத்துக்கு வழி இல்லாத அவர், அந்தக் குடும்பத்துக்கு ஒரு சுமையாகத் தெரிவார். இந்த நேரத்தில் சென்னைக்கு ஜனாதிபதி வருவார். ‘சுதந்திரப் போராட்டத்தின்போது ஜனாதிபதியும் நானும் ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள்’ என ஏற்கெனவே சொல்லியிருப்பார் அந்தத் தியாகி. மருமகள், ‘‘ஜனாதிபதியைச் சந்தித்து உங்கள் தியாகி பென்ஷனுக்கு வழி பண்ணுங்கள்’’ எனச் சொல்வாள்.
ஜனாதிபதியைச் சந்திக்க அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வாசலில் காத்திருப்பார். அப்போது வரும் கலெக்டர், ‘யாரோ பெரியவர் நிற்கிறாரே’ என விசாரிப்பார். ‘‘நானும் ஜனாதிபதியும் நண்பர்கள்’’ என்ற தகவலைச் சொல்வார் தியாகி. கலெக்டர் உள்ளே சென்று, ‘‘கோபாலகிருஷ்ணன் என ஒருவர் உங்களைத் தெரியும் என வந்திருக்கிறார்’’ என்பார், ஜனாதிபதியிடம்.
‘‘கோபாலா வந்திருக்கிறான்?’’ என ஜனாதிபதியே எழுந்து ஓடிவந்து வரவேற்பார். இருவரும் வெகுநேரம் பேசுவார்கள். பேச்சின் இடையில் தன் தியாகி பென்ஷன் பற்றிக் கேட்கலாம் எனக் காத்திருப்பார் கோபாலகிருஷ்ணன். ஆனால், ஜனாதிபதியோ, ‘‘நீ எங்கே இருக்கிறாய் எனத் தேடினேன். தியாகி பென்ஷன் பட்டியலையும் வாங்கிப் பார்த்தேன். அதில் உன் பெயர் இல்லை. தியாகத்துக்கெல்லாம் பென்ஷன் வாங்குகிற ஆள் நீ இல்லை என எனக்குத் தெரியும்’’ என்பார் பெருமையாக. அதன்பிறகும் தன் பென்ஷன் பற்றிப் பேச முடியுமா? எதுவும் கேட்காமல் திரும்பிவிடுவார். மருமகள் மேலும் திட்டித் தீர்ப்பாள்.
படத்தின் முடிவில் கோபாலகிருஷ்ணன் சாலை ஓரத்தில் அநாதைப் பிணமாகக் கிடப்பார். ‘அமைச்சர் வருகிற நேரத்தில் இந்தத் தொல்லை வேற’ என அவரை லாரியில் ஏற்றி குப்பைமேட்டில் கொண்டு போய் போடுவார்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது அவரால் காதலிக்கப்பட்டவர், அவரை அந்தக் குப்பை மேட்டில் தேடித் தேடி அலைந்து, அவரும் அங்கேயே இறந்துபோவார். இந்தக் கதையை சிவாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சில சமயங்களில் கண்கலங்கினார்.
கதையை முழுதுமாகக் கேட்டு முடித்துவிட்டு, ‘‘வேண்டாம்பா... என்னாலேயே தாங்க முடியலை. நான் நடிச்சா உங்க கதையை இன்னும் சோகக் காவியமாக்கிடுவேன். ஜனங்க தாங்க மாட்டாங்க’’ என சிவாஜி நடிக்க மறுத்துவிட்டார்.
நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part II
கட்டுரையில் எழுத்தாளர் 100 நாட்கள் ஓடாத படங்களில்
பந்துலு எம் ஜீ ஆரை வைத்து எடுத்தபடங்களின் பட்டியலை
எழுதியதில் ஏற்பட்ட தவறு
ர பொலிஸ் 100 நாட்கள் ஓடியதை மறைக்கும் எண்ணமும் இல்லை
உள்ளதை ஒப்புக்கொள்ள தயங்கவும் இல்லை தயக்கமும் இல்லை
பக்கத்துஊர்காரன் ஏதாவது சாதனை செய்தால்
பாராட்டும் ஒருவன் அதே சாதனையை பக்கத்து வீட்டுக்காரன்
செய்யும் பொழுது பொறாமை கொள்கிறான்.....
65 ஆண்டுகளுக்குமுன் நடந்தது னன்ன?..... தொடரும்.......
எல்லாம் உனக்காக- 1961
நடிகர்திலகம் நடிப்பின் பாணி stanislavsky /Meisner விதத்தில் அமைந்த 58 முதல் 61 வரை வந்த படங்களில் ultimate method acting with ultimate underplay என்ற பாணியின் உச்சம் எல்லாம் உனக்காக.இந்த படத்தின் தலைப்பே அவரை சார்ந்தது இல்லை. எப்போதுமே ஒரு அழகான வங்காள கதை ,வசனம் எழுத கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,தேர்ந்த இயக்குனர் சுப்பாராவ்,தோதான பரிசோதனைக்கு சரவண பவ யூனிட்டி பட நிறுவனம் ,போதாதா நடிகர்திலகத்துக்கு?
1952 முதல் 1964 வரை பல புதுவிதமான சிக்கலான கதையமைப்புகள்,வித விதமான பாத்திர படைப்புகள்,விதவிதமான நடிப்பு பாணிகள் என்று பல பரிசோதனைகள் என்று செய்தும் வியாபார ரீதியாக நெருங்க முடியாத உயரத்திலும், உலக அளவில் அவரை கொண்டாடி கொண்டும் இருந்த போது ,அவரது போட்டியாளர்கள் ஹிந்தியில் இருந்தது போல ஆரோக்கியமான போட்டி சூழ்நிலையை உருவாக்கவில்லை. அரசியலை படங்களில் வலிய திணித்தல் ,தனி மனித பொய் பிம்பத்தை உருவாக்குதல், நாலாந்தர படங்கள் ,சூழ்ச்சி மூலம் போட்டியாளருக்கு சங்கடம் விளைவித்தல் போன்ற மோசமான சூழ்நிலையில்தான், தன்னுடைய மேதைமை,கடின உழைப்பு,அபார திறமை, போதிய கவனம், இவற்றினால் நடிகர்திலகம் தன்னுடைய நல்ல வித்தியாச பட பேராசைகளை தணித்து, படித்த பாமர மக்களை தன்னிடமே குவித்து எல்லா வருடங்களிலும் தன்னுடைய படங்களே வசூலிலும் முந்தியிருக்க செய்தார். சுருங்க சொன்னால் தமிழின் 65 முதல் 70 சதவிகித வியாபாரம் நடிகர்திலகம் படங்கள் மூலமே நிகழ்ந்தன.
பராசக்தி வசனம் போல அழுக்குகளை ஜீரணித்து தடாகத்தை அழகாக வைத்து கொண்டார்.
எல்லாம் உனக்காக எல்லாவற்றிலும் வித்தியாச படம்.செல்வந்தர் வெங்கடாச்சலத்தின் ஒரே செல்வ மகள் சரளாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கும் போது சந்தர்ப்ப வசத்தால் விபத்தில் கால்களின் செயல்திறனை இழக்கிறாள்.ஒரு மருத்துவர் சோதனைக்கு பிறகு ஒரு வினோதமான சூழலில் இந்த மாதிரி ஒரு நோயாளி ,கல்யாணம் செய்து ,குழந்தை பிறப்பின் போது கால்கள் மீண்ட அதிசயம் நடந்ததை சொல்ல, வேங்கடாசலம் அதையும் பரீட்சிக்க விரும்புகிறார் ,ஆனால் ஒரு நல்லவனை கொண்டு.
பணத்தாசை பிடித்த ஏகாம்பரம் என்பவனின் மகன் ஆனந்தன் தனது மாமன் தயவில் படித்து வக்கீலானதால் ,மாமன் மகள் பாமாவை(சிறிதே அரைகுறை) மணக்கும் சூழ்நிலையில் இருப்பவன். பொதுநலவாதி,கொள்கை பிடிப்புள்ளவன். ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அறிய நேரும் வெங்கடாச்சலம் ,அவன் தகப்பன் ஏகாம்பரத்தை ஒரு ஒப்பந்தம் மூலமும் ,ஆனந்தனை(ஒப்பந்தம் அறியாமல்) அவன் தியாக சிந்தனையை தூண்டியும் கல்யாணத்தை நடத்தி கொள்கிறார். இரு வருடங்களில் கால் குணமாக இல்லையெனில் மண விலக்குடன் பாதி சொத்து என்பதே அந்த ஒப்பந்தம்.சரளாவும் ஆனந்தனும் மனமொத்த வாழ்வு நடத்தி ஒரு பிள்ளையும் பெற்று ,,நகரசபை சேர்மன் பதவி மூலம் மக்களுக்கு நல்லதும் செய்கிறான். ஆனந்தன் செயல்கள் மூலம் வருமானத்தையும்,நண்பர்கள் செல்வாக்கையும், முறையற்ற வழியில் சேர்த்த செல்வங்களையும் இழந்தும் வெங்கடாச்சலம்,மகளுக்காக பொறுமையாக இருக்கிறார்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ,சரளாவின் ரெண்டுங்கெட்ட பேச்சுக்கள்,ஆனந்தனுக்குள்ள பொது ஈடுபாடுகள், வெங்கிடாசலத்துடன் நேரடி மோதல்கள் , குறுக்கே வெங்கடாச்சலத்தின் காரியதரிசி போடும் விஷ தூபம் ,இவை சரளாவிற்கு தன கணவன் -தந்தை இருவரிடமும் நம்பிக்கையிழக்க செய்ய, மகளுக்காக விஷம் குடித்து ,உண்மையை விளக்கி மடியும் வெங்கடாச்சலம் ,ஒரு சண்டையில் கணவனின் ஆபத்தான சூழ்நிலையில் நடக்க ஆரம்பித்த ஆனந்தத்துடன் கண் மூடுகிறார்.
படம் முழுக்க யாரையும் நாயகனாக ,நாயகியாக முன்னிறுத்தி ,பிம்பங்கள் எழுப்ப படாது. நாயகன் இயல்பிலேயே ,தொழிலாளர் மற்றும் ஏழைகள் நலம் விரும்பும் தலைமை குணம் கொண்டவன்.ஓரளவு தியாக சிந்தனை,மிகுந்த பொதுநல நோக்கு,பரந்த சிந்தனை உடையவன்.
இந்த படத்தில் நடிகர்திலகம் நடித்த விதம் , இவ்வித நடிப்பை மட்டுமே எல்லா படத்திலும் தந்து புகழ் பெற்ற திலீப் குமார், உத்தம்குமார் பார்த்தால் நாணி தலை கவிழும் அளவு, stanislavsky method acting பாடம் கற்கலாம். இந்த பாணி நடிப்பில் கூட மற்றவர் சிவாஜி கால் நகம் கூட தொட முடியாது.
இந்த படத்தின் நாயகன் பாத்திரம் அப்படியே நம்மிடையே வாழும். அசாதாரண செயலை செய்யும் போதும் தன்னை முன்னிலை படுத்தது செய்யும் செயலை காட்சியை முன்னிலை படுத்தும். உதாரணம் வெள்ளத்தினால் மக்கள் அவதியுறும் போது நாயகன் பங்கு.(புத்தன் ஏசு காட்சி போல நகைப்புரியதாக இல்லாமல்) படு அழகாக பாந்தமாக காட்சியை கதையை ஒட்டி இருக்கும்.
இந்த நேரத்தில் ஒன்றை அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் இயல்புகள் ,குணத்தில்,நடத்தையில்,எதிர்வினை புரிவதில் பலதர பட்டது.சிலர் அமைதி (எல்லாம் உனக்காக),சிலர் உரத்த வெளிப்பாடு (கெளரவம்),சிலர் சூழ்நிலைக்கேற்ப மாறுபட்டு(புதியப்பறவை),என்ற வகையில் வேறு படுத்தி நடிப்பதே உண்மை நடிப்பு.சில நேரம் வாழ்வில் பல வருட துயரம், பல வருட இன்பம்,பல வருட தொடர் விளைவு படத்தில் சில நிமிடங்களில், சில வினாடிகளில் சொல்ல பட நடிப்பின் பாணி ,அந்த நிமிடத்தில் உயர் உஷ்ண நிலையை தொட வேண்டும்.
இயல்புக்கு மாறான நகைப்புக்குரிய நடிப்பு என்பது, கதையை பற்றி கவலை படாமல்,தனக்கு வசதியான காட்சிகளை அமைத்து, பாடலில் செயற்கை கருத்துக்களை புகுத்தி, இசையமைப்பாளர் ஒரே ராகத்தில் எல்லாவற்றுக்கும் இசை தொடுக்க,பாடகர் நெளிவு சுழிவற்ற முறையில் பாட, ஒரே மாதிரி கை காலை ,ஆட்டி ஒரு நடிகர் தன்னை முன்னிலை படுத்தி ,அழகியலை சிதைப்பதே உண்மைக்கு மாறான,இயல்புக்கு மாறான நடிப்பு.
இயல்பான நடிப்பு என்பது,அந்த பாத்திரத்தின் உண்மை இயல்பு.நடிகனின் இயல்பல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்.
இந்த படத்தில் என்னை மிக மிக கவர்ந்த காட்சிகள்.
ஏதோ நாயகியின் தந்தை சரியான விசையை தட்டி ,நாயகனின் நல்லியல்பை பயன் படுத்தி கல்யாணத்தை முடித்தாலும், நாயகியுடன் தனித்து இருக்கும் போது ,நாயகன் குழம்பி தன் முடிவை தானே கேள்விக்குள்ளாக்கி ,தன்னுடைய நிலையை நினைக்கும் காட்சி. ஒரு பழைய பிகினிக் காட்சி ப்ராஜெக்ட் செய்ய பட்டு,நாயகியின் பழைய ஆனந்த ,ஆரோக்கிய நிலையை கண்டு, அவளை முன்னிட்டு தன்னை தேற்றி,புது வாழ்வுக்கு தயார் செய்யும் காட்சி. ஆயிரம் வர்ணனையை விட காட்சியில் காணும் சுகம்.
ஒவ்வொருவரிடமும், அவர் இயல்பு தெரிந்து உரிய மதிப்பை அளித்து, தன்னுடைய இயல்பையும் உறுதி செய்யும் நடிப்பு. உதாரணம், தந்தை எழுந்த உடன் மகளை காண விரும்பும் விழைவுக்கு கல்யாணத்திற்கு பிறகான நாயகனின் வினை.
பேராசை கொண்ட தந்தையை தன் அலுவலகத்தில் அணுகும் விதம். குழந்தையின் கால்களை சோதிக்கும் அன்னையிடம் கடியும் நேர்த்தி.எதிலும் நாயகனின் வரம்புக்கு வெளியிட படும் கோடு தாண்டா இயல்பு நடிப்பு.
இந்த மாதிரி படங்களை ரசிக்காத தமிழர்கள் ,பலவற்றை இழந்தார்கள்.
Quote:
today, 01:29 pm #2137 muthaiyan ammu
http://www.mayyam.com/talk/images/st...er-offline.png
senior member veteran hubber
join dateoct 2014locationsalemposts3,175post thanks / like http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngthanks (given)47thanks (received)66likes (given)449likes (received)188
http://i60.tinypic.com/immiiv.jpg
http://i61.tinypic.com/2iiaio8.jpg
http://i61.tinypic.com/vulxg.jpg
எங்கவீட்டு பிள்ளை படம் பதிவுகளை நிறைய செய்ய ஆசை முடியவில்லை..மூன்று மொழிகளில் வந்த இந்த படத்தின் ச்டில்ல்ஸ் என்னிடம் எல்லாம் உள்ளது பதிவுசெய்ய மனம் இல்லை..செய்திதாள்களில் வரும் தலைவரை பற்றிய செய்திகள் உண்மை இல்லை..உங்களது பதிவுகள் எல்லாம் செய்திதாள்களில் உள்ளதை பதிவு இடப்பட்டுள்ளது..உண்மை செய்திகள் இதில் இல்லை..சும்மா ஆதாரம் இல்லாமல் பதிவுகளை செய்ய எனக்கு விருப்பம் இல்லை..என்னை அறிமுகம் செய்த வேலூர் ரம்மமூர்த்திக்கும் இந்த பதிவை நீக்கலாமா என்று தயாராக இருக்கும் என் நண்பர் எஸ்.வீ.சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..good bye..
எல்லாம் பொய் பொய் என்று
நாங்கள் சொல்லவில்லை
அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டது
தவறான பக்கம் நின்ற சரியான பண்பாளர்கள் முத்தையன் அம்மு, யுகேஷ் பாபு,சைலேஷ் பாபு,பேராசிரியர் செல்வகுமார் போன்றோர்.
வேறு வழியில்லாமல், பொழுது போக தவறை புரிபவர் எஸ்.வீ.
இவர்களை மற்றோருடன் சேர்த்து எடை போட என் மனம் மறுக்கிறது. முத்தையன் அம்மு மறைவு என் மனதை நெகிழ்த்திய ஒன்று.