Quote:
இரு மலர்கள் -150
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `இரு மலர்கள்' தொடர், பரபரப்பான காட்சியமைப்பில் 150 எபிசோடை தாண்டி தொடர்கிறது.
தோழிகள் அமுதாவுக்கும் ரஞ்சனிக்கும் கல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட மோதல் அதன்பிறகும் தொடர்கிறது.
கல்லூரி வாழ்க்கை முடிந்தபிறகு தங்கள் நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பேற்கிறாள் ரஞ்சனி. அமுதாவோ தன் திறமைக்கேற்ப ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக அமர்கிறாள். ஒரு கட்டத்தில் வியாபாரத்தில் தங்கள் நிறுவனம் சற்றே பின்னடைவை சந்திக்க, அதற்குக் காரணம், தங்களுக்கு இணையாக வளர்ந்துள்ள நிறுவனம் என்பது ரஞ்சனிக்கு புரிய, அந்த நிறுவனத்தின் டீம் லீடர் தன் முன்னாள் தோழி அமுதா என்பதை அறியாமலே அவள் மீது ஏகப்பட்ட எரிச்சலை வளர்த்துக் கொண்டிருக்கிறாள், ரஞ்சனி.
இதற்கிடையே அமுதாவை அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிவா விரும்புகிறான். இதே கால கட்டத்தில் ரஞ்சனி, சிவாவை சந்திக்கநேர்கிறது. பார்த்த மாத்திரத்தில் அவளுக்குள்ளும் காதல் பற்றிக் கொள்கிறது.
சிவாவை தன் வாழ்க்கைத் துணைவனாக்க ரஞ்சனி திட்டம் போட்டநேரத்தில், சிவாவுக்கும் அமுதாவுக்குமான நிச்சயதார்த்த செய்தி ரஞ்சனிக்கு கிடைக்கிறது.
அப்போது கூட இந்த அமுதா வேறு யாரோ என்ற நினைப்பில் நிச்சய தார்த்தத்துக்கு வருகிறாள் ரஞ்சனி. அப்போதுதான் `நேற்றைய தோழி இன்றைய எதிரி'அமுதா தான் தன் நேசத்துக்குரியவனை மணக்கப் போவது தெரிகிறது.
இப்போது எரிமலை வெடித்திருக்குமே...அதுதான் இல்லை. கோபம் இப்போது செல்லுபடியாகாது என்பதை புரிந்து கொண்டு அமுதாவிடம் நல்லவள் போல் நாடகமாடுகிறாள் ரஞ்சனி. அவள் நடிக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளாத அமுதா, ரஞ்சனியின் அன்பை உண்மை என்று நம்பி விடுகிறாள். அமுதா அறியாமல் அவள் திருமணத்தை நிறுத்த வசந்த் என்பவன் மூலம் ரகசிய திட்டம் வகுக்கிறாள்.
இந்த வசந்த் ஏற்கனவே அமுதாவின் தங்கையை காதல் என்ற பெயரில் ஏமாற்றி கெடுத்து கர்ப்பமாக்கினவன். இது தெரிந்ததும் அமுதாவின் அம்மாவும் அமுதாவும் நடுரோட்டில் வைத்து அவனை அடித்து உதைத்து அவமானப்படுத்துகிறார்கள்.
உண்மையில் அமுதாவின் குடும்பத்தில் இப்படியான குழப்பத்தை எற்படுத்த ரஞ்சனி அனுப்பிய அம்பு தான் இந்த வசந்த். இப்போது இதே வசந்த் தான் இப்போது அமுதாவின் திருமணத்தை நிறுத்த ரஞ்சனியால் அனுப்பப் பட்டிருக்கிறான்.
ரஞ்சனி ஆசைப்பட்ட சிவாவை தன் பேத்தி ரோஜாவுக்கு
திருமணம் செய்து வைக்கச் சொல்லி ரஞ்சினியின்அப்பா ராஜரத்னத்தை வற்புறுத்துகிறாள், வேங்கடத்தாள். ஏற்கனவே ராஜரத்னம் செய்த ஒரு கொலையை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு அவரை மிரட்டி வரும் அவள், இப்போது சிவாவை தன் பேத்திக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். சொத்தில் பாதியை தன் பேத்தி ரோஜா பெயரில் எழுதி வைக்கவேண்டும். திருமணம் முடிந்ததும் ராஜரத்னம் குடும்பத்தோடு ஊரை விட்டே சென்று விட வேண்டும் என்று கண்டிஷன் போடு கிறாள்.
இந்த கண்டிஷன்களுக்கு வேறு வழியின்றி சம்மதிக்கிறார், ராஜரத்னம். தந்தையின் நிலை இப்படி இருக்க, இது எதையும் அறியாத ரஞ்சனி சிவாவை தனக்கே தனக்கென்று மீட்பதில் கவனமாக இருக்கிறாள்.
சிவா-அமுதா திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது ரஞ்சனி தன் திட்டத்தில் வென்று விடுவாளா? ரஞ்சனியின் அப்பா ராஜரத்னம் வேங்கடத்தாளுக்கு பயந்து ஊரை விட்டுப் போவாரா? விறுவிறுப்பின் உச்சம் தொட்டு தொடர்கிறது, தொடர்.
சிவாவாக உதய், ரஞ்சனியாக மகாலட்சுமி, அமுதாவாக அகிலா, வசந்த்தாக வசந்த், ராஜரத்னமாக சிவன் சீனிவாசன், தங்கமாக நளிளி, ரோஜாவாக ஸ்ரீதேவி, வேங்கடத்தாளாக எஸ்.என்.பார்வதி நடிக்கிறார்கள். சுருளி என்ற வித்தியாசமான கேரக்டரில் சூர்யகாந்த் நடிக்கிறார்.
திரைக்கதை: பாபா கென்னடி. வசனம்: பாலமுருகன். ஒளிப்பதிவு: ஆரணன். இயக்கம்: தளபதி. தயாரிப்பு: ஜெயா டிவி.