மக்கள் திலகத்தின் மர்மயோகி
பார்த்தாலே பரவசம் அளிக்கும் அற்புதமான படைப்பு. எம்.ஜி.ஆர் பார்முலா என்பது இந்தப் படத்தில் தான் உருவானது. ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அன்னாளில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார் மக்கள் திலகம். நேற்று முன்தினம் இதற்காக மீண்டும் ஒரு முறை நானும் என் மகனும் வீடியோவில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்தோம். எனது மகனது கருத்துக்களை அவனைக் கொண்டே தெரிவிக்கச் செய்தேன். எல்லோரையும் காந்தம் போலக் கவரும் அற்புதமான படம். எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிப்பதைத் தவிர்ப்பார் என்று பலர் கதை விட்டுக் கொண்டிருக்க இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் அழகாக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும் குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து வந்து சண்டை செய்வது மிக அருமை.பல படங்களில் குதிரையேற்றத் திறமையை அழகாகக் காட்டி இருப்பார் (ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும் ). நேரமின்மை காரணமாக சில படங்களில் பேக் புரஜக்சன் பயன்படுத்தப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களின் உதவியாளர் திரு. ராமகிருண்ணன் அவர்களிடம் நேரில் கேட்டபோது அவரும் இதனை உறுதி செய்ததுடன் அவரைப் போல ஒரு அருமையான ரைடரைப் பார்க்க இயலாது என சிலாகித்துக் கூறினார். மேலும் நாடோடி மன்னன் படத்தில் இரு எம்.ஜி.ஆர்களும் மோதுவதாக ஒரு காட்சி எடுக்கப்படவிருந்ததாகவும் அதற்காக சாய்தள அமைப்பில் ஒரு செட் போடப்பட்டு அதில் குதிரையின் மீது வேகமாக ஏறி வந்து எம்.ஜி.ஆருடன் எம்.ஜி.ஆர் மோதுவதாக பலத்த ஒத்திக்கையுடன் படமாக்கப்பட்டதாகவும் பின்னர் சில காரணங்களால் அக்காட்சி நீக்கப்பட்டதாகவும் கூறினார். ஆர் எம். வீரப்பன் அவர்களும் தனது நூலான ஆர்.எம்.வி. ஒரு தொண்டன் என்ற நூலில் உத்தமபுத்திரன் படத்தில் இரு சிவாஜியும் மோதும் காட்சியில் யாருடைய நடிப்பிற்கு கைதட்டுவது என்று தெரியாமல் ரசிகர்கள் திண்டாடினர் எனவே அந்தக் காட்சி வேண்டாம் என தான் தான் சொல்லி நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அந்தக் காட்சி வெளிவந்திருந்தால் மற்றுமொரு விருந்தாக அமைந்திருக்கும். மேலும் கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறுமானால் குறிவைக்க மாட்டான் என்ற வசனம் ஒரே ஒரு முறை படத்தில் வந்தாலும் மனதைவிட்டகலா வண்ணம் அருமையாக அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான ஆக் ஷன் காட்சிகள் எல்லாமே அருமை. வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது. ஒரே ஒரு குறை மற்ற மக்கள் திலகத்தின் படங்களைப் போல இதில் ஒரு தத்துவப்பாடலும் இல்லை என்பது தான். மற்றபடி இன்றைக்கும் பொருந்தக் கூடிய பழைய படம் என்ற எண்ணமே தோன்றா வண்ணம் ரசிக்கக் கூடியதாக அமைந்தது மர்மயோகி.