பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மணிமண்டப அறிவிப்பிற்கான பாராட்டுக்களை, அலைபேசியிலும், திரியிலும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது எண்ணமெனும் நானெடுத்து வண்ண மலர்ப் பூத்தொடுத்து நன்றியெனும் மாலைதனை காணிக்கையாக்குகிறேன்.
முதலில் நான் ஏற்கனவே இத்திரியில் கடந்த வருடங்களில் குறிப்பிட்ட மாதிரி, குறிப்பாக நான் என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் இணைந்த பிறகுதான் கடந்த சில வருடங்களாக, நண்பர்களால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படும்போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன்.
அவற்றில் இந்த வருடப் பிறந்தநாள் என்பது எனக்கு, என் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாளாக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை. நேற்று காலையிலிருந்து, நள்ளிரவு வரை வந்த அலைபேசி அழைப்புகளைப் பற்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை. இரவு தூக்கமும் இல்லை. ஏதேதோ நடிகர்திலகம் பற்றிய பல நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டே இருந்தது. இன்னும் பல அலைபேசி அழைப்புகளுக்கு (missed calls ) (திரு.நெய்வேலி வாசு சார் உள்பட) பதிலலளிக்கவில்லை . நான் எடுத்து பேசவில்லை என்ற வருத்தமும் சிலருக்கு இருக்குமே என்ற கவலை எனக்கு.
இதற்கெல்லாம் யார் காரணம்? நடிகர்திலகத்திற்கு சேவை செய்ய, அவர் புகழ் பரப்ப, என்னைவிட மிகவும் மூத்த ரசிகர்கள் பலர் இருக்க, விண்ணிலிருந்து நடிகர்திலகத்தால் எனக்கிடப்பட்ட உத்தரவா? அல்லது நான் முற்பிறவியில் செய்த பாக்கியமா?
நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபம் கோரி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கடந்த ஜூலை 21 ஆம் நாள், சென்னையில், நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு இக்கோரிக்கைக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள், நமது ரசிகர்கள் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்.
ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதத்தில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் பணி தொடங்கப்பட்டு, மணிமண்டபம் விரைவில் அமையவேண்டும் என்று உங்களைப் போலவே நானும் விழைகிறேன்.
மனதில் தோன்றும் பலவற்றை எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உணர்ச்சி மிகுதியால் வார்த்தைகள் வரவில்லை.
எதுவாக இருந்தாலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட எனக்கு இறைவன் சக்தியை அளிக்கவேண்டும், நண்பர்களின் தொடர் ஆதரவும் வேண்டும் என்பதே இப்பிறந்தநாளில் நான் விடுக்கும் கோரிக்கை, வேண்டுகோள், பிரார்த்தனை.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.