வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஓபன் டாக் 60 ஆண்ட
டபுள் மீனிங் பேசுறதில் சந்தோஷம்:வெண்ணிற ஆடை மூர்த்தி சிங்கிள் மீனிங் talk - Thanks to Cine guide
http://cine.tamilsguide.com/upload/K...news-10076.jpg
Tuesday 4th of November 2014 12:23:28 PM
தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் என்பதற்கு ஒரே மீனிங்தான்... ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி. ‘‘எப்போ இருந்து டபுள்மீனிங்ல டயலாக் பேச ஆரம்பிச்சீங்க? ஜோதிடத்துல எப்படி ஆர்வம் வந்தது? இந்த மாதிரி கேள்விகள்தானே எங்கிட்டே கேட்கப் போறீங்க? இதுக்கெல்லாம் பதில் சொல்லிச் சொல்லி எனக்கே போரடிச்சிடுச்சு தம்ப்ப்ரீரீ...’’ - தயங்கித் துவங்குகிறார், சினிமாவில் பொன்விழா காணும் மனிதர். காமெடி ஜாம்பவான்கள் நாகேஷ், சந்திரபாபு கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே நடிக்க வந்து, சந்தானம் வரை ஸ்டாண்டிங் பார்ட்னர்ஷிப் கொடுப்பவர்.
‘‘அந்தக் காலத்துல சினிமாவில் நுழையறது ரொம்ப கஷ்டம். என்ட்ரி ஆகிட்டா தாக்குப் பிடிக்கிறது ஈஸி. நான் பி.ஏ., பி.எல் படிச்சவன். அப்பவே எம். என்.சி கம்பெனியில வேலை. அதை விட்டுட்டு நடிக்க வந்தேன். ‘வெண்ணிற ஆடை’க்குப் பிறகு ரெண்டாவது படமே ‘டணால்’ தங்கவேலு சார் கூட நடிச்சேன். அதுக்கப்புறம் நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக்னு எல்லார் கூடவும் நடிச்சிட்டேன். சிவாஜி சாரோட நிறைய நடிச்சிட்டேன்.
ஆனா, எம்.ஜி. ஆரோட சேர்ந்து நடிக்கிற சந்தர்ப்பம் வரலை. சினிமாவைத் தவிர எனக்கு ஆர்வம்னா அது ஜோசியம்தான். அதுல எனக்கு ஈடுபாடு வந்ததுக்குக் காரணமே சைதாப்பேட்டை ஜோசியர் ஒருத்தர்தான். ‘நீ காமெடி நடிகனா வருவே. கடைசி வரைக்கும் சினிமாவுல இருப்பே’னு அவர் அப்பவே சொன்னார். கூடவே இன்னொண் ணும் சொன் னார்... ‘நீ நம்பர் ஒன்னா என்னைக்கும் வர மாட்டே. அதுக்காக வருத்தப்படக் கூடாது!’ அதான், இப்ப வரைக்கும் எதுக்கும் நான் வருத்தப்படுறதில்ல.
‘இவரா? டபுள் மீனிங்கா பேசுவாரே’ன்னு எல்லாரும் என்னைச் சொல்றதை பெருமையா நினைக்கிறேன். ஐம்பது வருஷம் நான் ஃபீல்டுல தாக்குப் பிடிச்சு நின்னதுக்கு இதுவும் ஒரு காரணம். காமெடியனுக்கு தனித்தன்மை ரொம்ப முக்கியம். இல்லாட்டி சீக்கிரம் போரடிச்சிடும். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் இருந்துதான் ‘தம்ப்ப்ரீரீ’னு இப்ப பேசுற இந்த ஸ்டைலைப் பிடிச்சேன். டபுள் மீனிங் எந்தப் படத்தில் ஆரம்பிச்சுதுன்னு நினைவே இல்லை. அவ்வளவு பேசியாச்சு. ஆரம்பத்தில் இருந்தே நான் தமிழ்ப்படங் களை விட இங்கிலீஷ் படங்களைத்தான் அதிகம் பார்ப்பேன். ப்ளூ காமெடி... ரொமான்டிக் காமெடி... இதெல்லாம் உலகம் முழுக்க சகஜம்தானேப்பா!
‘உங்க நகைச்சுவையில சமூக அக்கறை இல்லையே?’ன்னு கேட்கிறவங்களை நான் கண்டுக்கறதில்லை. இந்த சொசைட்டியை மகாத்மா காந்தியாலேயே திருத்த முடியலை. இந்த வெண்ணிற ஆடை மூர்த்தியா திருத்திட முடியும்? மக்களுக்கே அந்த விழிப்புணர்வு வரணும். சினிமாங்கறது நீதி சொல்ற இடமில்ல... நம்ம இடத்தைத் தக்க வச்சுக்கவே போராட வேண்டி யிருக்கும். கொஞ்சம் குனிஞ்சாலும், பின்னாடி நிக்குறவன் பச்சக்குதிர தாண்டிருவான்.
இப்போ சன் டி.வி ‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியில, ‘உலகம் இவ்ளோதான்’னு பத்து நிமிஷ கான்செப்ட் ஒண்ணு பண்றேன். எழுத்தும் எனக்கு ஓரளவு வரும். ‘மாலை சூட வா’ன்னு ஒரு கதை எழுதினேன். அது படமாச்சு. கதை, திரைக்கதை மட்டும் எழுதினேன்.வசனம் சித்ராலயா கோபு சார் எழுதினார். கமல் அதுல இருந்துதான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். அப்புறம், ‘ருசி’ன்னு ஒரு படத்துக்கு ஸ்டோரி, ஸ்க்ரீன் ப்ளே, டயலாக் எழுதினேன். மோகன் ஹீரோ. டைரக்ஷன்ங்கறது ஃபுல் டைம் ஜாப். அதனால தொடர முடியல. 200க்கு மேல டி.வி ஸ்கிரிப்ட் எழுதியிருப்பேன். 42 படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதியிருக்கேன். தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 813 படங்கள்ல காமெடியனாவே நடிச்சாச்சு. இப்பவும் சின்னப்படங்கள்ல நடிக்கிறேன். டி.வி சீரியல் பண்றேன். இதனாலெல்லாம் என் கௌரவம் கெட்டுப் போயிடலை.
வருஷத்துக்கு ஒரு தடவை அமெரிக்கா போயிடுறேன். அங்க பையன் இருக்கான். மூணு, நாலு மாசம் அங்க போயிடுது. மீதி நாட்கள்ல கிடைச்ச படங்களைப் பண்றேன். ஆல்மோஸ்ட் எனக்கு இது ரிட்டயர்மென்ட் காலம்.
இதுக்கு மேல வர்ற வருமானம் எல்லாமே போனஸ்தான். காடு, மலை, கடல், கப்பல், விமானம்னு அங்கே இங்கே சுத்தியாச்சு. இப்போ திடீர்னு வீட்ல சும்மா உட்கார முடியல. அதான் புக்ஸ் எழுத ஆரம்பிச்சிட்டேன். இதுவரை 6 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இப்போ ஏழாவது பிரின்ட்ல இருக்கு. எல்லாம் நகைச்சுவைதான்.
நம்பர் ஒன் காமெடி நடிகரா நான் வராம போயிருக்கலாம். நகைச்சுவை தவிர, சீரியஸ் ரோல்கள் ஒரு சில படங்கள்ல பண்ணினேன். ஆனா, அதையும் தொடந்து பண்ற அளவுக்கு எனக்கு தகுதி இருக்கறதா நான் நினைக்கலை. அதனால பண்ணலை. இருக்கறத வச்சு திருப்தியா வாழக் கத்துக்கிட்டேன். இவருக்கு இவ்வளவு பேங்க் பேலன்ஸ்னு கடவுள் ஆல்ரெடி எழுதிட்டார். அதுக்கு மேலே என்ன முட்டிக்கிட்டாலும் அல்சர்தான் வருமே தவிர, அமவுன்ட் ஏறாது.
எத்தனை கார் வச்சிருந்தா என்ன, ஒரு கார்லதானே உட்கார முடியும்? எத்தனை வீடு இருந்தாலும் ஒரு வீட்லதானே தங்க முடியும்? என்னுடைய தகுதிக்கு என் பையனை ஃபாரீன்ல படிக்க வச்சதே பெரிய விஷயம்.
கடைசியா ஒரு விஷயம் சொல்லிக்கறேன்... எந்தத் தொழில்லயுமே ஒருத்தரால அதிகபட்சம் 25 வருஷம்தான் இருக்க முடியும். நான் ஜனங்களோட பொறுமையை சோதிச்சு 50 வருஷம் இருந்ததே, என்னைப் பொறுத்தவரை பெரிய சாதனைதான். இதுக்கு மேலயும் நான் எதிர்பார்த்தால் அது மடத்தனம்!’’
வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய புத்தகங்களிலிருந்து சில நொறுக்ஸ்
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை, ஷாம்பூ போதும். வழுக்கைத் தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை, சோப்பு போதும்.
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு.
ஏழையாக இருப்பது நல்லது. நோய் வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்தி விடுவார்.
சமையலறையில் நிகழும் விபத்தைத்தான் என் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்.
ஈ.சி.ஜி. என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டுக் காட்டும் வரைபடம்.
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி.
வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை, இரண்டு மாமியார்கள்.
ஒரு பெண்ணுக்கு அழகுதான் சொத்து என்றால், நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
‘வந்தது போகட்டும்’ என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேஷன். ‘வராமலே போகட்டும்’ என்பதற்காக செய்யப்படுவது குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்.
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள், திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டான், திருமணம் ஆகும்வரை. -