மீண்டும் சீரியல் நடிகை ஆனார் ஊர்வசி'


தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. கடைசியாக மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த இட்லி படம் வெளிவர இருக்கிறது.


ஊர்வசிக்கு சின்னத்திரை புதிதில்லை டேக் இட் ஊர்வசி, பாக்யலட்சுமி, உள்பட பல நிகழ்ச்சிகளை நடத்தினார், பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 5 வருடங்களுக்கு முன்பு பைரவி தொடரில் நடித்தார். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் நடித்து, தயாரிக்கும் வம்சம் சீரியிலில் சுந்தரி என்ற புதிய கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரியாகியிருக்கிறார்.


வம்சம் தொடரில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெருகி வருவதால் சீரியலில் நடிப்பதை குறைத்து வருகிறார். இருந்தாலும் வம்சம் சீரியலில் அவர் முக்கிய கேரக்டர் என்பதால் உடனடியாக வெளியேறிவிட முடியாது. இதனால் ஊர்வசியை, ரம்யா கிருஷ்ணனின் தோழி கேரக்டரில் சீரியலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனுக்கு இணையான முக்கியத்துவம் ஊர்வசிக்கு இருக்கும் என்றும், போகப்போக ஊர்வசியை முக்கிய கேரக்டராக்கி ரம்யா கிருஷ்ணன் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


நன்றி: தினமலர்