-
31st January 2008, 12:56 PM
#11
Senior Member
Seasoned Hubber
Meera Vasudevan Interview
குடும்பப் பிரச்சினை... காவல் துறையில் புகார்... விவாகரத்து... செய்திகளுக்குப் பிறகு தெள்ளத் தெளிவான மீரா வாசுதேவனை கலைஞர் டிவியில் பொங்கலன்று பார்க்கமுடிந்தது. டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் ஷோவில் காம்பியரிங் கலக்கல் மீராதான்!
இனி ஹஸ்கி வாய்ஸில் மீராவின் பதில்கள்...
நீங்கள் காம்பியரிங் செய்யும் ரியாலிட்டி ஷோவின் தனித் தன்மை என்ன?
நீங்கள் இதுவரை பார்த்த எந்த ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி, அதில் ஏற்கனவே பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக இருக்க வேண்டும், ஐ.டி. பார்க்குகளில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இருக்கும். கலைஞர் டி.வி.யில் கலா மாஸ்டர் டைரக்ட் செய்யும் டாடா இண்டிகாம் ஆட்டம்-பாட்டம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் கூட நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகிறோம். இதுதான் நான் காம்பியரிங் செய்யும் இந்த ரியாலிட்டி ஷோவின் ஸ்பெஷாலிட்டியே!
சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் சின்னத் திரையில் நடிக்க வந்தீர்களா?
அப்படிச் சொல்ல மாட்டேன். சிறந்த நடிகைக்கான தமிழ் மாநில அரசின் விருதைப் பெற்றவள் நான். ஏனோதானோ என்று என்னால் படங்களில் நடிக்க முடியாது. என்னுடைய இந்தத் தீர்மானத்தில் மண் விழுந்தது, என்னுடைய திருமணத்திற்குப் பின்தான். என்னுடைய கணவரின் வற்புறுத்தலால் பல படங்களை எனக்கு விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன். அவர்களுக்குப் பணம் மட்டுமே பிரதானமாக இருந்தது. நல்ல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எவ்வளவோ சொன்னேன். யாரும் கேட்பதாக இல்லை. அவர்களின் வற்புறுத்தலால்தான் டிவி பக்கமே வந்தேன். ஆனால் கணவன் போடாத சோறை, எனக்கு இந்தச் சின்னத் திரைதான் இப்போது போட்டுக் கொண்டிருக்கிறது!
என்ன படிக்க வேண்டும், எந்த மாதிரியான பணியில் ஈடுபடவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இந்தக் காலப் பெண்கள், தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டு விடுவது ஏன்?
எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், புகழின் உச்சியில் இருந்தாலும் தனக்காக உருகும் ஒரு துணை வேண்டும் என்று எதிர்பார்ப்பவளாகத்தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். இதற்கு நான் உள்பட எந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்புதான் பெண்களின் பலவீனம்; இந்த பலவீனத்தை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம்.
மீடியாவின் வெளிச்சத்தில் வலம் வரும் பல பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருட்டு சூழ்ந்திருக்கிறதே...?
பேங்க் பணியில் இருப்பவர், மார்க்கெட்டில் காய், கனிகள் விற்பவர், ஐ.டி. பணிகளில் இருப்பவர்.... இப்படிச் சமூகத்தில் எந்தப் பணியில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கணவனால் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவை பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. மீடியாவில் புகழின் வெளிச்சத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் தோல்விகள்தான் எல்லோருக்கும் எளிதாகத் தெரியும்.
டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ எவ்வளவோ வந்தாலும் மக்களிடம் சீரியல்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையவில்லையே?
இனிமேலும் குறையாது என்பதுதான் என்னுடைய கருத்து. டாக் ஷோ, ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே பார்ப்பவர்களை என்டர்டெயின் பண்ணுவதோடு அதன் வேலை முடிந்துவிடுகிறது. சீரியல்கள் அப்படி இல்லை. அதன் ஒவ்வொரு எபிசோட்டுடனும் ரசிகர்கள் ஒன்றிப்போய் இருக்கிறார்கள். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களோடு, சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் கதைச் சம்பவங்களை பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். வெற்றியும், தோல்வியும், பொறாமையும், மாமியார் கொடுமையும், குடிகார கணவர்களின் கொடுமையும் இவற்றுக்கு எதிராகப் போராடும் பெண்களின் கதைகளும் தானே இன்றைக்கு பெரும்பாலான தொடர்களின் மையக் கருத்தாக இருக்கின்றது. இதற்கு பெண்களிடம் வரவேற்பு எப்படிக் குறையும்?
டி.வி.சேனல்களில் இன்னும் எத்தகைய மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
குழந்தைகளுக்கென்று சேனல்கள் இருக்கின்றன, பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான சேனல்கள் இருக்கின்றன. கலந்துரையாடல், அர்த்தமுள்ள அரட்டை அடிப்பதற்கான சேனல்கள் இருக்கின்றன. இளைஞர்களுக்காக டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ போன்றவைகளுக்காக தனித் தனி சேனல்கள் இருக்கின்றன. விளையாட்டுக்கென்று இருக்கின்றன... இன்னும் என்ன மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். போதுமான அளவுக்கு எல்லா சேனல்களுமே இருக்கின்றதே!
கிளிசரின் தேவைப்படாத கதாபாத்திரங்கள் உங்களுக்கு சின்னத் திரையில் கிடைக்கின்றதா?
நிச்சயமாகக் கிடைக்கின்றது என்றுதான் சொல்லுவேன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூர்யவம்சத்தில், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, வயிற்றில் வளரும் தன்னுடைய குழந்தையையும், குடும்ப மானத்தையும் மனம் கலங்காமல் காப்பாற்றும் வேடம். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வைஜெயந்தி ஐ.பி.எஸ். தொடரில் காக்கிச் சட்டை அணிந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இதில் கிளிசரினுக்கு வேலை இல்லை... துப்பாக்கிக்குத்தான் வேலை!
முன்னணி நடிகைகளாக இருந்தவர்களே, ரீ-என்ட்ரி ஆகும்போது "ஐட்டம் சாங்'குகளில் தூள் கிளப்புகிறார்கள்... நீங்கள் எப்படி?
ஐட்டம் சாங் ஆடவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் நடிப்புத் திறமைக்கேற்ற வாய்ப்பு நிச்சயம் வரும். சின்னத் திரையில் இன்னும் நிறைய சீரியல்களில் நடிப்பேன். மறுபடியும் சினிமாவில் நல்ல ரோல்களில் என்னைப் பார்க்கலாம். இது உறுதி. இனிமேல் எனக்கு நல்ல காலம்தான்!
-
31st January 2008 12:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks